குழந்தைகளுக்கான ‘பெஸ்ட்’ சம்மர் ட்ரிங்க்ஸ் எவை?
கோடை வெயிலில் குழந்தைகளை பாதுகாக்க, உணவில் சிறு மாற்றங்கள் போதுமானது

கோடை வெயிலின் பிடியில் இருந்து உங்கள் குழந்தைகளை மீட்க வேண்டுமா? உணவில் சிறு மாற்றங்களைச் செய்தாலே போதும். விழுப்புரம் மருத்துவர் ப்ரீத்தி வழங்கும் பிரத்யேக ஆலோசனைகள் இதோ.

செயற்கை நிறமூட்டிகள் மற்றும் அதிக சர்க்கரை கலந்த குளிர்பானங்களைத் தவிர்த்து, உடலுக்கு குளிர்ச்சி தரும் இயற்கை பானங்களை குழந்தைகளுக்கு வழங்குவது அவசியம் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

முதலாவது, இளநீர் அதிகமாக குடிக்கலாம். இதில் பொட்டாசியம் மற்றும் முக்கிய தாதுக்கள் நிறைந்துள்ளதால், உடலின் நீர்ச்சத்தை பராமரிக்க இது சிறந்த பானமாகும்.

அதேபோல், தர்பூசணி, கிர்ணி (மஸ்க்மெலன்), எலுமிச்சை போன்ற பழங்களின் சாறுகளை சர்க்கரை சேர்க்காமல் கொடுக்கலாம். இவை உடலுக்கு சுறுசுறுப்பையும், நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்க உதவும்.

தவிர்க்க வேண்டியவை: குளிர்சாதனப் பெட்டியில் வைத்த மிகக் குளிர்ந்த நீரை குழந்தைகளுக்கு நேரடியாக கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இது தொண்டை வலி மற்றும் சளி ஏற்பட காரணமாக இருக்கலாம். அதற்கு பதிலாக மண்பானை நீரை பயன்படுத்துவது நல்லது.

மேலும், கடைகளில் விற்கப்படும் கார்போனேட்டட் பானங்கள் அல்லது ‘கூல் டிரிங்க்ஸ்’களை குழந்தைகள் குடிப்பதை தவிர்க்க வேண்டும். இதில் உள்ள வேதிப்பொருட்கள் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

மேலும், மிகக் குளிர்ச்சியான உணவுகள் அல்லது பானங்களை உட்கொள்ளும் போது, நம்முடைய மூச்சுக்குழாயில் உள்ள ‘சிலியா’ (Cilia) எனப்படும் மிகச் சிறிய முடி போன்ற அமைப்புகளின் செயல்பாடு தற்காலிகமாக மந்தமடையக்கூடும். இவை நுரையீரலுக்குள் செல்லும் தூசி மற்றும் கிருமிகளை வெளியேற்ற உதவுகின்றன. இந்த செயல்பாடு பாதிக்கப்படும்போது சளி வெளியேறுவதில் தடை ஏற்பட்டு, தொண்டையில் அடைப்பு உணர்வு உருவாகும் என மருத்துவர் ப்ரீத்தி தெரிவித்துள்ளார்.



