2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

2026 ஆம் ஆண்டு எல் நினோ ஆண்டு என்று விஞ்ஞானிகளால் கூறப்படுகிறது. ஏனெனில் இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே உலகம் முழுவதும் பல்வேறு இயற்கைப் பேரழிவுகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போது நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தை விஞ்ஞானிகள் எல் நினோவின் விளைவுகளுடன் தொடர்பு படுத்துகின்றனர். இதுபோன்ற பேரழிவுகள் வரும் மாதங்களில் மேலும் அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
வரவிருக்கும் மாதங்களில் நிகழும் என்று கணிக்கப்பட்டுள்ள 2026-ஆம் ஆண்டின் ‘எல் நினோ’ நிகழ்வானது, ஏறக்குறைய 150 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ‘சூப்பர் எல் நினோ’வின் போது ஏற்பட்ட அளவிலான பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என்று விஞ்ஞானிகளும், புவியியல் ஆய்வாளர்களும் எச்சரித்துள்ளனர்.
1877-ஆம் ஆண்டின் எல் நினோ நிகழ்வின்போது என்ன நடந்தது?
1877-78 ஆம் ஆண்டு, வரலாற்றிலேயே மிகவும் சக்திவாய்ந்த ‘சூப்பர் எல் நினோ’ சுழற்சியை ஏற்படுத்தியது. 1876 முதல் 1878 வரை எல் நினோ உலகம் முழுவதும் கடுமையான அழிவுகளை ஏற்படுத்தியது. பருவமழை பொய்த்ததால் இந்தியா, சீனா, பிரேசில் மற்றும் ஆப்பிரிக்காவின் பெரும் பகுதிகள் கடுமையான வறட்சியைச் சந்தித்தன. இதனால் பயிர்கள் கருகின, கால்நடைகள் மடிந்தன, மேலும் லட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் உயிரிழந்தனர். இந்த குறிப்பிட்ட ஆண்டில் மட்டும் உலக மக்கள் தொகையில் சுமார் 3 சதவீதத்தினர், அதாவது ஏறக்குறைய 5 கோடி மக்கள் உயிரிழந்தாகக் கூறப்படுகிறது.
2026-ஆம் ஆண்டின் எல் நினோ, 1877-ஆம் ஆண்டின் சூப்பர் எல் நினோவை மிஞ்சுமா?
விஞ்ஞானிகள் மற்றும் புவியியல் ஆய்வாளர்களின் கூற்றுப்படி, ஆழ்கடல் வெப்பநிலையில் ஏற்பட்டுள்ள விரைவான உயர்வு, 2026-ஆம் ஆண்டில் ஏற்படக்கூடிய ‘எல் நினோ’ நிகழ்வானது, 1877-இல் ஏற்பட்ட பேரழிவுகளை விட அதிக பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 1877-இல் பூமியின் வெப்பம் குறைவாக இருந்ததால் ‘எல் நினோ’வின் தாக்கம் குறைவாக இருந்தது, ஆனால் 2026-இல் பூமி மிகவும் வெப்பமடைந்த நிலையில் இருப்பதால், கடுமையான வெப்ப அலைகள், வறட்சி மற்றும் வெள்ளம் போன்ற பேரிடர்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
2026-ஆம் ஆண்டின் எல் நினோ இந்தியாவின் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
2026 ஆம் ஆண்டின் எல் நினோ நிகழ்வு இந்தியாவின் தென்மேற்குப் பருவமழையைப் பாதிக்கும். தீவிரமான எல் நினோ காலங்களில் இப்பருவமழை கணிசமாக வலுவிழக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், நாட்டின் பல பகுதிகளில் மழைப்பொழிவு குறையும். வளிமண்டல ஈரப்பதம் அதிகரிப்பதால் மின்னல் தாக்கும் நிகழ்வுகள் அதிகரிக்கக்கூடும். மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்கள் எல் நினோவால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாகக் கருதப்படுகின்றன. 1877-ஆம் ஆண்டில் ஏற்பட்ட எல் நினோ நிகழ்வின்போது இந்தியா மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அப்போது நிலவிய வறட்சி மற்றும் பஞ்சத்தால் இந்தியாவில் மட்டும் சுமார் 1.2 கோடி மக்கள் உயிரிழந்தனர்.
2026 எல் நினோ ஏன் ஆபத்தானது?
1877-ஆம் ஆண்டில் நிகழ்ந்ததைப் போன்ற அல்லது அதைவிடத் தீவிரமான ஒரு ‘சூப்பர் எல் நினோ’ நிகழ்வு தற்போது உருவாகி வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இது உலகளாவிய காலநிலையில் பேரழிவை ஏற்படுத்தும் விளைவுகளைக் கொண்டிருக்கக்கூடும். குறிப்பாக, பல பகுதிகளில் வெப்பநிலை வெகுவாக உயரக்கூடும், அதே வேளையில் கோதுமை, அரிசி மற்றும் பிற முக்கிய பயிர்கள் கருகிப் போவதால் உலகின் பல பகுதிகளில் கடுமையான வறட்சியும் பஞ்சமும் ஏற்படலாம். மேலும், வறட்சியின் காரணமாக ஆறுகள், குளங்கள் மற்றும் நிலத்தடி நீர்மட்டம் வேகமாகச் சரிவதுடன், பல பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படும் அபாயமும் அதிகரிக்கும்.
நோய் பரவல் ஏற்பட வாய்ப்புள்ளதா?
2026-ஆம் ஆண்டின் ‘எல் நினோ’ நிகழ்வால் ஏற்படும் ஈரப்பதமான காலநிலை கொசுக்களின் பெருக்கத்திற்குச் சாதகமாக அமைவதால், டெங்கு, மலேரியா மற்றும் பூச்சிகளால் பரவும் பிற நோய்களின் தாக்கம் தீவிரமாக இருக்கக்கூடும் என்று சுகாதார நிபுணர்கள் கருதுகின்றனர். மேலும், குறைவான மழையளவு குறிப்பாக ஏழை நாடுகளில் கடுமையான தண்ணீர் பஞ்சத்தை ஏற்படுத்தக்கூடும். அதேவேளையில், தீவிர வெப்ப அலை பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.


