அழகு..அழகு..ஆரோக்கியம்புதியவைமருத்துவம்

மழைக் காலத்தில் கண்களில் அரிப்பு ஏற்படுகிறதா? அதற்கான காரணங்களும், எச்சரிக்கை அறிகுறிகளும்

 

பருவமழை, இதுவரை சுட்டெரித்து கொண்டிருந்த கோடை வெப்பத்திலிருந்து விடுதலை அளித்தாலும், கண் ஒவ்வாமைகளைத் தீவிரமாக உண்டாக்கும் சூழலையும் உருவாக்குகிறது. காற்றில் அதிகரிக்கும் ஈரப்பதம், நாம் அன்றாடம் பயன்படுத்தும் உட்புற இடங்களில் நிலவும் ஈரப்பதம், காற்றில் பரவும் தூசு, மகரந்தம் மற்றும் பூஞ்சை வித்துகளின் மாறுபடும் அளவுகள் ஆகியவை கண் ஒவ்வாமை அழற்சியைத் (Allergic Conjunctivitis) தூண்டக்கூடும். இது கண்களின் வெள்ளை விழிப்பகுதி மற்றும் உள் இமைகளை மூடியுள்ள மெல்லிய சவ்வில் ஏற்படும் வீக்கமாகும்.

பொதுவாகக் கண் ஒவ்வாமைகள் பிறருக்குப் பரவுவதில்லை என்றாலும், அவை கடுமையான அசௌகரியத்தை ஏற்படுத்துவதோடு, தொற்று நோயான ‘மெட்ராஸ் ஐ’ (infectious conjunctivitis) போன்ற பாதிப்புகளுடன் குழப்பத்தையும் ஏற்படுத்தக்கூடும். இதற்கான காரணங்களைக் கண்டறிந்து, தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவது மழைக்காலம் முழுவதும் நம்முடைய கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும்.

இதுகுறித்து சென்னை டி.டி.கே சாலையில் உள்ள மேக்சிவிஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனையின் குழந்தை கண் மருத்துவ நிபுணர், மாறுகண் மற்றும் கண்புரை அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ஸ்ரீகாந்த் ராமசுப்பிரமணியன் தமிழ் போல்ட்ஸ்கையிடம் கூறுகையில், “பருவமழைக் காலத்தில் ஏற்படும் கண் ஒவ்வாமையை வெறும் பருவகால எரிச்சலாக மட்டும் பார்க்காமல், கண் மேற்பரப்பின் ஆரோக்கியம் சார்ந்த விஷயமாகக் கருத வேண்டும். பூஞ்சை, தூசு மற்றும் காற்றில் உள்ள ஒவ்வாமை காரணிகள் தொடர்ந்து நம்மீது நேரடியாக விழும் வகையில் இருப்பது கண்ணீர்ப் படலத்தைப் பலவீனப்படுத்தி, கண் வெண்படலத்தை வீக்கமடையச் செய்யும். மேலும் கண்களில் வறட்சி, தொற்று மற்றும் கான்டாக்ட் லென்ஸ் அணிய முடியாத நிலைக்கு ஆளாக்கும்.

இடை விடாத அரிப்பு காரணமாக அடிக்கடி கண்களைத் தேய்க்கும் போது, அது கருவிழி மேற்பரப்பை மேலும் சேதப்படுத்தும். நம்முடைய, பார்வைத் திறன் மற்றும் நீண்டகாலக் கண் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க ஆரம்பக்கட்டப் பரிசோதனை, ஒவ்வாமை காரணிகளைக் கட்டுப்படுத்தும் அம்சங்களைப் பின்பற்றுதல் மற்றும் முறையான சிகிச்சை ஆகியவை மிக அவசியமாகும்,” என்றார்.

பருவமழைக் காலத்தில் கண் ஒவ்வாமை ஏற்பட காரணம் என்ன?

மழை மட்டுமே கண் ஒவ்வாமையை ஏற்படுத்திவிடுவதில்லை. இருப்பினும், ஈரப்பதமான வானிலை படுக்கைகள், கம்பளங்கள் மற்றும் மரச்சாமான்களில் ஏற்படும் பூஞ்சைகளின் வளர்ச்சி மற்றும் கண்ணுக்குத் தெரியாத தூசுப் பூச்சிகளைப் (Dust mites) பெருக்குகிறது. பூஞ்சை வித்துகள், மகரந்தம், தூசு மற்றும் புகை ஆகியவை உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டி, கண்களில் அரிப்பு, கண்கள் சிவந்து போதல் மற்றும் கண்களில் நீர் வடிதல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. பயணத்திற்குப் பிறகோ அல்லது அசுத்தமான தளங்களையோ பரப்புகளையோ தொட்ட பிறகோ, கைகளைக் கழுவாமல் கண்களைத் தேய்ப்பது எரிச்சலை அதிகரிப்பதோடு, கண் தொற்றுகளுக்கும் வழிவகுக்கும்.

இரண்டு கண்களிலும் தொடர்ச்சியாக அரிப்பு ஏற்படுவதே கண் ஒவ்வாமையின் மிகவும் பொதுவான அறிகுறியாகும். இதர அறிகுறிகளாக கண் சிவத்தல், நீர் வடிதல், எரிச்சல், கண் இமை வீக்கம், வெளிச்சத்தைப் பார்க்க முடியாத நிலை, தும்மல் மற்றும் மூக்கடைப்பு அல்லது மூக்கில் நீர் வடிதல் ஆகியவை அடங்கும். ஒரு கண்ணில் மட்டும் ஏற்படும் அறிகுறிகள் மற்றும் தடித்த மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் திரவம்/பீளை வடிதல் ஆகியவை உடனடி மருத்துவக் கவனிப்பு தேவைப்படும் தொற்று அல்லது பிற கண் கோளாறுகளைக் குறிக்கலாம். ஏதேனும் எரிச்சல் அல்லது அசௌகரியம் ஏற்பட்டால், கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துபவர்கள் லென்ஸை உடனடியாகக் கழற்றிவிட்டு, மருத்துவ ஆலோசனை பெற்ற பிறகே மீண்டும் அணிய வேண்டும்.

சுற்றுச்சூழல் காரணிகளைக் கட்டுப்படுத்துவதன் மூலமே பருவமழைக் கால கண் ஒவ்வாமைகளைப் பெரும்பாலும் சமாளிக்க முடியும். சுற்றுப்புறத்தை உலர்ந்த நிலையில் வைத்திருப்பது, கைகளை சுத்தமாக வைத்து கொள்வது, கண் சுகாதாரத்தைப் பராமரிப்பது, ஒவ்வாமை ஏற்படுத்தும் காரணிகளுடன் நேரடியாக பாதிக்கப்படாமல் இருப்பது மற்றும் ஆரம்பத்திலேயே அறிகுறிகளுக்குத் தீர்வு காண்பது ஆகியவை பாதிப்பின் தீவிரத்தைக் குறைக்கும். வலி, தொடர்ச்சியான அறிகுறிகள் அல்லது பார்வைக் கோளாறு இருந்தால், அதை வீட்டிலேயே நாமாகவே சரிசெய்ய முயற்சிக்கக் கூடாது; ஏனெனில் ஒவ்வாமையா அல்லது தொற்றா என்பதை முதலில் கண்டறிவது முக்கியமானது. அதற்கு, நமக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளைத் தடுக்க உரிய மருத்துவப் பரிசோதனை இன்றியமையாதது.

பருவமழைக் காலத்தில் கண்களைப் பாதுகாப்பதற்கான நடைமுறை வழிகள்:

* நாம் தினமும் பயன்படுத்தும் உட்புற இடங்களை உலர்வாகவும், சுத்தமாகவும், நல்ல காற்றோட்டத்துடனும் வைத்திருக்கவும்.

* கண்ணுக்குத் தெரியும் பூஞ்சைகளை உடனுக்குடன் சுத்தம் செய்யவும்; காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருந்தால் ‘டிஹியூமிடிஃபையர்’ (Dehumidifier) சாதனங்களைப் பயன்படுத்தலாம்.

* படுக்கை விரிப்புகளை அடிக்கடி துவைக்கவும், தரையைச் சுத்தமாகத் துடைக்கவும் மற்றும் அதிக தூசியை ஈர்க்கும் துணி சார்ந்த அலங்காரப் பொருட்களைக் குறைக்கவும்.

* கண்களைக் கைகளால் தேய்க்கக் கூடாது; கைகளைத் தவறாமல் சோப்பு போட்டுக் கழுவ வேண்டும்; துண்டுகள், அழகுசாதனப் பொருட்கள் அல்லது கண் மருந்துகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடாது.

* வெளியே செல்லும்போது, காற்றில் உள்ள துகள்கள் கண்களில் படுவதைத் தடுக்க சன்கிளாஸ் அல்லது பாதுகாப்பு கண்ணாடிகளை அணியலாம்.

* குளிர்ந்த, சுத்தமான ஒத்தடம் மற்றும் பதப்படுத்திகள் இல்லாத (Preservative-free) செயற்கைக் கண்ணீர் சொட்டு மருந்துகள் லேசான கண் எரிச்சலைத் தணிக்க உதவும்.

பருவமழைக் கால கண் ஒவ்வாமைகள் பொதுவானவை என்றாலும், அவற்றை அலட்சியப்படுத்தவோ அல்லது மருத்துவரை கலந்து ஆலோசிக்காமல் நாமாக தவறான மருந்துகளை எடுத்துக் கொள்ளவோ கூடாது. எளிய தடுப்பு நடவடிக்கைகள், ஆரம்பத்திலேயே அறிகுறிகளைக் கண்டறிதல் மற்றும் ஒவ்வாமை காரணிகளைத் தவிர்ப்பது ஆகியவை அசௌகரியத்தைக் கணிசமாகக் குறைக்கும். இருப்பினும், விடாத அரிப்பு, வலி, திரவம் வடிதல், வெளிச்சத்தைப் பார்க்க முடியாமை அல்லது பார்வையில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவற்றுக்குக் கண் பரிசோதனை மிகவும் அவசியம். ஆரம்பக்கட்டக் கண்டறிதல் ஒவ்வாமையை தொற்றிலிருந்து வேறுபடுத்தி, அறிகுறிகள் தீவிரமடைவதற்கு முன்பே சரியான சிகிச்சையைப் பெற உதவும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker