உங்க முகத்தில் இந்த 3 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..

தற்போது கொழுப்பு கல்லீரல் நோய் மிகவும் பொதுவான ஒரு பிரச்சனையாக உள்ளது. முக்கியமாக இந்த நோய் அறிகுறிகளை அதிகமாக வெளிப்படுத்தாமல் அமைதியாக உருவாகிறது. சொல்லப்போனால் இந்நோயால் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொழுப்பு கல்லீரல் நோய்க்கு ஆல்கஹால் தான் முக்கியமான காரணமாக இருந்தாலும், சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன், உயர் கொலஸ்ட்ரால் போன்றவைகளும் கொழுப்பு கல்லீரல் நோய்க்கு வழிவகுக்கும்.
இந்த ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோயை கவனிக்காமல் விட்டுவிட்டால், பின் அது தீவிரமாகி கல்லீரல் வீக்கம், கல்லீரலில் வடு மற்றும் ஏன் புற்றுநோயை கூட ஏற்படுத்தலாம். ஆனால் ஆச்சரியப்படும் வகையில் ஒருவருக்கு கொழுப்பு கல்லீரல் இருந்தால், அது ஒருசில அறிகுறிகளை முகத்தில் ஆரம்பகாலத்தில் காட்டும். அந்த அறிகுறிகளை கவனித்தால், கொழுப்பு கல்லீரல் நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கலாம். இப்போது முகத்தில் தெரியும் கொழுப்பு கல்லீரல் நோயின் அறிகுறிகளைக் காண்போம்.
1. முக வீக்கம்
கல்லீரல் செயலிழப்பின் மிகவும் முக்கியமான மற்றும் முகத்தில் நன்கு தெரியக்கூடிய ஒரு அறிகுறி தான் முக வீக்கம். அதுவும் இந்த முக வீக்கமானது கண்கள் மற்றும் கன்னங்களைச் சுற்றி காணப்படும். ஏனெனில் கல்லீரலானது சரியாக செயல்படாவிட்டால், அது அத்தியாவசிய புரோட்ன்களின் உற்பத்தியைக் குறைக்கும், திரவ சமநிலை மற்றும் இரத்த ஓட்டத்தை பாதிக்கும். அதுவும் அழற்சி போன்ற எவ்வித காரணமும் இல்லாமல் தொடர்ந்து வீக்கத்தை சந்தித்தால், அது கல்லீரல் மோசமான நிலையில் உள்ளது என்று அர்த்தம். எனவே இந்த அறிகுறியை சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
2. கழுத்துப் பகுதியில் கருமை
கழுத்துப் பகுதியில் கருமையான படலம் தெரிந்தால், அது இன்சுலின் எதிர்ப்புடன் தொடர்புடைய கல்லீரல் நோயின் அறிகுறியாகும். இன்சுலின் அதிகளவில் இருந்தால், அது சருமத்தில் நிறமிகளின் உற்பத்தியை தூண்டிவிட்டு, கழுத்துப் பகுதியில் கருமையை உண்டாக்கும். அதுவும் இப்படி உற்பத்தியாகும் நிறமிகளானது கழுத்துப் பகுதியில் தான் முதலில் தோன்றும். எனவே இப்படி திடீரென்று உங்களின் கழுத்து கருமையாவது தெரிந்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து பாருங்கள்.
3. முகம் சிவந்து போவது
நாள்பட்ட கல்லீரல் பிரச்சனையானது சில சமயங்களில் முகத்தை சிவந்து போகச் செய்வதோடு, ரோசாசியா போன்ற தோற்றமளிக்கும் சிறு கட்டிகள் அல்லது தடிப்புகள் தெரியலாம். ஆனால் இதற்கு கல்லீரல் நோய் மட்டுமே காரணமல்ல என்றாலும், மற்ற அறிகுறிகளான முக வீக்கம், கழுத்துப் பகுதி கருமையாக இருப்பது போன்ற அறிகுறிகளும் தெரிந்தால், கல்லீரல் பிரச்சனையாக இருக்க வாய்ப்புள்ளது. கூடுதலாக மோசமான கல்லீரல் செயல்பாட்டினால் ஏற்படும் ஜிங்க் குறைபாடு போன்ற ஊட்டச்சத்து குறைபாடுகள், வாயைச் சுற்றி தடிப்புகள் அல்லது லேசான எரிச்சலை உண்டாக்கலாம்.
பிற அறிகுறிகள்..
கொழுப்பு கல்லீரல் நோய் தீவிரமாகும் போது, அது பிலிரூபினை அதிகம் தேங்கச் செய்து, கண்கள் மற்றும் சருமத்தை மஞ்சள் நிறமாக மாறச் செய்து, மஞ்சள் காமாலையை உண்டாக்கலாம். சிலர் இரத்தத்தில் பித்த உப்புக்கள் அதிகம் சேர்வதால், முகத்தில் கடுமையான அரிப்பை சந்திக்கலாம். எனவே காரணமில்லாமல் ஒரு அறிகுறியை தொடர்ந்து சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.


