சப்பாத்திக்கு ஒருடைம் இந்த க்ரீமி பாலக் பன்னீர் கிரேவி செய்யுங்க.. டேஸ்ட் அல்ட்டிமேட்டா இருக்கும்…

உங்கள் வீட்டில் சப்பாத்திக்கு எப்போதும் ஒரே மாதிரியான குருமா, கிரேவி செய்து போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ரெஸ்டாரண்ட் சுவையில் ஒரு க்ரீமியான அதே சமயம் புரோட்டீன் அதிகம் நிறைந்த ஒரு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் பாலக் கீரையும், பன்னீரும் இருந்தால், அதைக் கொண்டு க்ரீமியான பாலக் பன்னீர் செய்யுங்கள்.
இப்படி கிரேவி செய்தால், வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட சற்று அதிகமாக சாப்பிடுவார்கள். முக்கியமாக வீட்டில் வளரும் குழந்தைகள் இருந்தால், அவர்களுக்கு இப்படியான கிரேவியை செய்து கொடுக்கும் போது விரும்பி சாப்பிடுவார்கள் மற்றும் அவர்களின் வளர்ச்சிக்கு தேவையான புரோட்டீன் கிடைத்து வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.
உங்களுக்கு இந்த க்ரீமி பாலக் பன்னீர் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே க்ரீமி பாலக் பன்னீர் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாலக் கீரை – 1 கட்டு
* பன்னீர் – 200 கிராம் (அரைத்துக் கொள்ளவும்)
* தண்ணீர் – சிறிது
தாளிப்பதற்கு…
* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
* நெய் – 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் – 1 டீஸ்பூன்
* வெங்காயம் – 2 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் – 2 (கீறியது)
* மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
* மல்லித் தூள் – 2 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* தக்காளி – 2 (அரைத்தது)
* நறுக்கிய பாலக் கீரை
* பன்னீர் விழுது
* கரம் மசாலா – 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் பாலக்கீரையை பொடியாக நறுக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் பன்னீரை துண்டுகளாக்கி சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து, ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து, பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு கிளறி விட்டு, மிதமான தீயில் வைத்து, பச்சை வாசனை போக வேக வைக்க வேண்டும்.
* பின்னர் அதில் அரைத்த தக்காளியை சேர்த்து கிளறி, எண்ணெய் பிரியும் வரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய பாலக்கீரையை சேர்த்து கிளறி, கீரையை வேக வைக்க வேண்டும்.
* கீரை வெந்ததும், அதில் அரைத்த பன்னீரை சேர்த்து நன்கு கிளறி, 5 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் கரம் மசாலாவை சேர்த்து கிளறி, 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான மற்றும் க்ரீமியான பாலக் பன்னீர் கிரேவி தயார்.



