ஆரோக்கியம்புதியவை

கொரோனாவை விரட்டும் யோகாசனங்கள்

உலக நாடுகள் அனைத்துக்கும் ஒரு மிகப்பெரிய சவாலாக விளங்கிக் கொண்டிருக்கும் இந்தக் கொரோனா நோய் மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்த வைரசால் ஏற்படும் அவஸ்தைகளும், துயரங்களும், மரணங்களும் தொடர்கதையாக இருக்கிறது. லட்சக்கணக்கான உயிர்களை காவு வாங்கும் இந்த கொரோனா நோயை கட்டுப்படுத்த அல்லது குணப்படுத்த இன்றுவரை மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை என்பதே உண்மை.

பல வளர்ந்த நாடுகள் இந்த நோயை குணப்படுத்த அவரவர் வாழும் சூழ்நிலைக்கேற்ப பல்வேறு வகையான மருந்துகளை கண்டுபிடிக்கக் கூடிய முயற்சியில் இருந்தாலும், நம் பிரதமர் மட்டும்தான் இந்த நோயை விரட்டுவதில் யோகாசனத்துக்கு மிக முக்கிய பங்கு உண்டு என்று கூறி இருக்கிறார்.



சுவாச மண்டலத்தையும், நுரையீரலையும், மனித உடம்பில் இயற்கையாக இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியையும் இந்த கொரோனா வைரஸ் தாக்கி மிக கடுமையான பாதிப்பை உண்டாக்கும் என்ற காரணத்தினால்தான் யோகசனமும், அதைச்சார்ந்த மூச்சுப் பயிற்சியும் இந்த நோயை விரட்டுவதற்கு ஒரு மாற்றுத் தீர்வாக அமையும் என்று கருத்தையும் சொல்லி இருக்கிறார்.

தினமும் யோகாசனப் பயிற்சியும், மூச்சுப் பயிற்சியும் அதனுடன் இணைந்து தியானப் பயிற்சியையும் ஒருசேர செய்யும்போது, இயற்கையான முறையில் நம் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதன் காரணாமாக கொரோனா மட்டும் அல்ல, வேறு எந்த ஒரு நோயும் வராது. இந்த பயிற்சிகளை தொடர்ந்து செய்யும்போது இருக்கின்ற நோயும் கட்டுப்படும் அல்லது வெகு சீக்கிரத்தில் குணமாகும்.



ஆசனம் என்பது உடலை உறுதியாக்கி ஒரு நிலைப்படுத்துவது, மூச்சுப் பயிற்சி என்பது உள் மற்றும் வெளி மூச்சை ஒருமுகப்படுத்துவது, தியானம் என்பது மனதை ஒருமுகப்படுத்தி அமைதி உண்டாக்குவது. இந்த 5 ஆயிரம் ஆண்டு தொன்மையான யோகசனத்தின் உண்மையான அர்த்தம் உடல், மனம் இவற்றை ஒன்றிணைத்து பிரபஞ்ச சக்தியின் ஆற்றலை பெறுவது என்பதாகும். இவ்வாறு பெறப்படும் பிரபஞ்ச சக்தி என்பது நம் உடம்பில் இருக்கும் உயிர் சக்தியுடன் சேரும்போது, அபரிமிதமான நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். யோகா என்பது நாம் எப்படி ஆரோக்கியமாகவும், எப்போதும் சுறுசுறுப்பாகவும், எல்லாவற்றையும் சரியான நேரத்தில் சரியான முறையில் செய்து வெற்றிபெற வேண்டும் என்பதை கூறும் ஒரு அறிவியல் ஆகும். இவற்றை பயிற்சி செய்யும்போது வயிறு காலியாக இருக்க வேண்டும். யோகாசனம் தெரிந்தவரிடமோ அல்லது யோகா பயிற்றுனரிடமோ அல்லது இவர்களது ஆலோசனைகளை கேட்டுத்தான் பயிற்சியை செய்ய வேண்டும். இப்போது வீட்டில் அதிக நேரம் இருப்பதால் காலை, மாலை என இருவேளையும் பயிற்சி செய்ய வேண்டும். முடியாத பட்சத்தில் கலை பொழுதாவது கண்டிப்பாக செய்ய வேண்டும்.



பிரதமர் கூறிய இவ்வளவு சிறப்பு வாய்ந்த யோகாசனத்தில் எல்லோராலும் சுலபமாக செய்யக்கூடிய சிலவற்றை இங்கு பார்க்கலாம்.

அர்த்த சக்ராசனம்:

இதற்கு இன்னொரு பெயர் பிரையாசனம் என்பது. ஒரு சக்கரத்தின் பாதி மற்றும் சந்திர வடிவத்தின் பாதி நிலை எப்படி இருக்குமோ அதை குறிப்பது.

செய்முறை:-

ஒரு விரிப்பின் மீது கால் பாதங்களை ஒன்று சேர்த்து வைத்து கைகள் இரண்டும் வணக்கம் செய்வது போல நிற்க வேண்டும். பின்பு மூச்சை நன்றாக உள்ளிழுத்து கைகள் இரண்டையும் உயரே தூக்கி, முதுகோடு சேர்த்து முடிந்த அளவு பின்னோக்கி வளைக்க வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் சிரமப்பட்டு செய்யக்கூடாது. மூச்சை அடக்கக் கூடாது.



அதே நேரம் கால் முட்டிகளை வளைக்க கூடாது. அப்படியே 10 எண்ணிக்கையில் இருக்க வேண்டும். சாதாரணமாக மூச்சுவிட வேண்டும். கண்கள் திறந்திருக்க வேண்டும். பின்பு மெதுவாக கைகளை உயர்த்தி பழைய நிலைக்கு வரவேண்டும். எந்த ஆசனமும் முதலில் செய்யும்போது சற்று கடினமாகவும், சிரமமாகவும்தான் இருக்கும். விடாமல் பயிற்சி செய்யும்போது சரியாக செய்ய முடியும்.

பலன்கள்:-

மூச்சை நன்றாக உள்ளிழுப்பதால் நுரையீரல் நன்கு விரிவடைந்து அதிகமான அதிகமான ஆக்ஸிஜன் உள் செல்லும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாவதால் சளி, சைனஸ், ஆஸ்துமா முதற்கொண்டு சுவாச சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளும் தீரும்.

பாத ஹஸ்தாசனம்



பாதம் என்றால் கால்கள், ஹஸ்தம் என்றால் கைகள் என்று பொருள்

அர்த்த சக்ராசனத்துக்கு மாற்று ஆசனம் ஆகும். எந்த ஆசனம் செய்தாலும் அதற்கு மாற்று ஆசனம் செய்ய வேண்டும் என்பது விதி.

செய்முறை:-

ஒரு விரிப்பின் மீது நேராக நிமிர்ந்து நின்று நன்றாக மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே கைகளை மேலே உயர்த்தவும். பின்பு மூச்சை மெல்ல வெளியிட்டவாறே குனிந்து பாதத்தை தொட வேண்டும். அப்போது வயிறை சற்றே உள்ளிழுக்க வேண்டும். மூட்டு மடங்கக் கூடாது. தலை கால் மூட்டுகளை தொட வேண்டும். முதலில் இது சற்று சிரமம். தொடவில்லையானாலும் பரவாயில்லை. எவ்வளவு முடியுமோ, அந்த அளவுக்கு தொட முயற்சி செய்தால் போதும். கஷ்டப்பட்டு செய்யக்கூடாது. பின்பு கைகள் மற்றும் தலையை மேலே உயர்த்தி பழைய நிலைக்கு வரவேண்டும்.



பலன்கள்:-

நன்றாக உள்ளிழுத்த மூச்சை குனிந்து வெளிவிடும்போது நுரையீரலில் இருந்து மூக்கு வரை உள்ள சுவாச மண்டலம் சுத்தமாகும். அனைத்து மாசுகளும் வெளிவரும். அதிகமான கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேறும். அதே சமயத்தில் தலைப்பகுதிக்கு அதிகமான ரத்த ஓட்டம் கிடைக்கும்.

அர்த்தகடி சக்ராசனம்

இரண்டு கால்களையும் சற்று அகல வைத்து மூச்சை மெதுவாக உள்ளிழுத்து வலது பக்கமாக சாய்ந்து வலது கையை முழங்கால் தொடும்படி வைத்துக் கொண்டே உள்ளிழுத்த மூச்சை மெதுவாக வெளியிட வேண்டும். இடது கை தலையின் காதை ஒட்டி இருக்க வேண்டும். 10 எண்ணிக்கை இவ்வாறு இருந்தவுடன் வலது கையை மேலே உயர்த்தி பழைய நிலைக்கு வரவேண்டும். பின்பு இதேபோல இடது பக்கம் செய்ய வேண்டும்.



பலன்கள்:-

பாதங்கள், மூட்டுகள், கைகள், இடுப்பு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் நன்றாக இயக்கம் பெறும். வலது மற்றும் இடது புறம் சாயும்போது நுரையீரல் நன்கு விரிவடைவதால் அதிகமான ஆக்ஸிஜன் கிடைக்கும். அதிகமான சக்தி கிடைக்கும்.

சவாசனம் என்னும் சாந்தி ஆசனம்

எப்போது யோகாசனம் செய்தாலும் உடனே கண்டிப்பாக சவாசனம் செய்துதான் முடிக்க வேண்டும்.

செய்முறை:-

விரிப்பின்மீது மல்லாந்து படுக்க வேண்டும். இரு உள்ளங்கைகள் திறந்த நிலையில், இருபக்கமாக நீட்டி வைக்கவும். கால்களை சற்றை அகல விரித்து வைக்கவும். உள்ளங்கைகள் மேல் நோக்கி இருக்க வேண்டும். இயல்பாக மூக்கு வழியாக சுவாசிக்க வேண்டும். உடல், மனம் ஆகியவற்றின் நினைவின்றி உறக்க நிலையில் இருக்க வேண்டும். அப்போது அலாதியான சாந்த நிலையில், உடல் மற்றும் மனம் தளர்ந்த நிலையில் இருக்கும். 10 நிமிடம் இப்படி இருந்தால், பூரண அமைதி கிட்டும்.





Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker