அழகு..அழகு..புதியவை

கூந்தல் ஆரோக்கியத்திற்கு தேன் பயன்படுத்தலாமா? பதிவு: ஜூன் 10, 2020 10:28 IST

 

தேன் இனிமையானது நாவிற்கும் உடலுக்கும் அதிக இனிப்பு தரக்கூடியது. சரும பராமரிப்பிலும் மிக முக்கியமாக பயன்படுத்தகூடியது. சருமத்தில் தேன் பயன்படுத்தும் போது முகப்பரு, கரும்புள்ளிகள், வடுக்களை தீர்த்து சருமத்தை அழகாக்குவது போன்றே கூந்தலுக்கும் நன்மை செய்கிறது. கூந்தலுக்கு தேனை பயன்படுத்தினால் பலரும் முடி வெள்ளையாகிவிடும் என்று நினைக்கிறார்கள். ஆனால் கூந்தலுக்கு தேன் தரும் அற்புத நன்மைகள் பலவும் உண்டு. இவை முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், கூந்தலை சுத்தப்படுத்தவும் உதவுகிறது. கூந்தலுக்கு தேனை எப்படி எல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம்.



பொடுகு பிரச்சனைக்கு தேனும் கூட பலனளிக்கும். 10 டீஸ்பூன் தேனில் 3 டீஸ்பூன் தண்ணீர் கலந்து நன்றாக குழைத்து பொடுகு தலையில் தடவவும். உச்சந்தலையில் நன்றாக மசாஜ் செய்து 20 நிமிடங்கள் கழித்து கூந்தலை சுத்தமான நீரில் அலசி எடுத்தால் பொடுகு உதிரும். வாரம் ஒரு முறை இப்படி செய்ய வேண்டும்.

உச்சந்தலையில் படியும் அழுக்குகளால் தான் முடி உதிர்வு, நுனிபிளவு, பொடுகு பிரச்சனைகள் உண்டாகிறது. தலைக்கு குளிப்பதற்கு முன்பு ஒரு தேக்கரண்டி தேனுடன் மூன்று மடங்கு தண்ணீர் கலந்து வைக்கவும். கூந்தல் முழுக்க சுத்தமான நீரை கொண்டு ஸ்ப்ரே செய்து பிறகு இந்த கலவையை தலையில் தடவி மசாஜ் செய்து 20 நிமிடங்கள் கழித்து பிறகு தலைக்கு குளிக்க வேண்டும். முடி உதிர்தலை தடுத்து கூந்தலை வறட்சியில்லாமல் ஈரப்பதமாக்க வைத்திருக்க உதவும்.



கூந்தல் வறட்சியை போக்குவதற்கு தேன் போன்று கூந்தலை மென்மையாக்கவும் தேன் பயன்படுகிறது. . கூடவே பளபளப்பும் தருகிறது. இதற்கு எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்துகொள்வோம். தேனுடன் புரதம் நிறைந்த தயிர் சேர்த்து பயன்படுத்த வேண்டும்.

ஒரு கப் கெட்டித்தயிருடன் 4 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும். அதை கூந்தல் முழுக்க தடவி ஸ்கால்ப் முதல் நுனி வரை தடவ வேண்டும். பிறகு கூந்தலுக்கு ஹேர் பேக் கவர் போட்டு அரை நிமிடங்கள் கழித்து ஷாம்பு போட்டு குளித்தால் போதும். கூந்தல் பளபளப்பாக மென்மையாக இருக்கும். வாரம் ஒரு முறை இதை பயன்படுத்தினாலே போதுமானது.



கூந்தல் நுனியில் பிளவு என்பது கூந்தல் வறட்சிக்கு பிறகு உண்டாவது. சிலருக்கு கூந்தலின் நுனியில் பிளவும் வெடிப்பும் இருக்கும். இந்த வெடிப்பை போக்க தேனும் உதவும்.

கொழுப்பு நிறைந்த ஒரு கப் பாலை எடுத்து, 3 டீஸ்பூன் தேன் எடுத்து கலந்து இலேசாக சூடேற்றவும். பிறகு இளஞ்சூடாக இருக்கும் போது நுனியில் மட்டும் தடவி நன்றாக மசாஜ் செய்யவும். பிறகு 30 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும்.வாரம் இரண்டு முறை இப்படி செய்துவந்தால் நுனி பிளவு குறைந்து கூந்தல் வளார்ச்சியடையும்.

முடி வலிமையாக உறுதியாக இருந்தால் வளர்ச்சியும் சீராகவே இருக்கும். முடி பலவீனமாகும் போது உதிர்தலும் உண்டாகும். 2 முட்டையின் வெள்ளைக்கரு, ஆலிவ் ஆயில் 3 டீஸ்பூன், தேன் – 5 டீஸ்பூன். முட்டையின் வெள்ளைக்கருவுடன் முதலில் எண்ணெய் கலந்து இரண்டையும் சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு தேனை சேர்த்து மேலும் நன்றாக கலந்து கூந்தலில் ஸ்கால்ப் பகுதி முதல் நுனி வரை தடவி விடவும். இதை கூந்தலில் 30 முதல் 40 நிமிடங்கள் வரை ஊறவிட்டு பிறகு தலைக்கு குளித்துவந்தால் கூந்தல் வலுவாக இருக்கும். அதிக அடர்த்தியுடன் இருக்கும். வளர்ச்சியும் வேகமாக இருக்கும். இனிகூந்தலுக்கு தேனையும் சேர்த்து பயன்படுத்துங்கள்.





Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker