1 மாதம் வெண்டைக்காய் ஊற வைத்த நீரில் எலுமிச்சை சாற்றினை கலந்து குடிப்பதால் பெறும் நன்மைகள்!

காய்கறிகளில் வெண்டைக்காய் கலோரி குறைவான, அதே சமயம் அதிக நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் கே, மக்னீசியம், ஃபோலேட் போன்ற சத்துக்கள் நிறைந்த காய்கறியாகும். ஆனால் இந்த காய்கறி வழுவழுப்புத்தன்மையைக் கொண்டிருப்பதால், பலரும் இதை சாப்பிட மறுப்பார்கள். இருப்பினும், இந்த வெண்டைக்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு, இதய பிரச்சனை உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.
அதுவும் வெண்டைக்காயை இரவு தூங்கும் போது நீரில் ஊற வைத்து, மறுநாளையில் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும், செரிமானம் மேம்பட்டு மலச்சிக்கல் நீங்கும் என்ற ஒரு கருத்து மக்களிடையே உள்ளது.
முக்கியமாக இந்த வெண்டைக்காய் நீருடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து ஒரு மாதம் தொடர்ந்து குடித்து வரும் போது ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உடலுக்கு கிடைக்கும் என்பது தெரியுமா? இப்போது ஒரு மாதம் வெண்டைக்காய் ஊற வைத்த நீரில் எலுமிச்சை சாற்றினை கலந்து குடிப்பதால் பெறும் நன்மைகள் என்னவென்பதைக் காண்போம்.

1. உடல் சோர்வு நீங்கும்
வெண்டைக்காய் நீருடன் எலுமிச்சை சாற்றினை கலந்து குடிக்கும் போது, வெண்டைக்காயில் விதைகளில் இருந்து அதிகளவிலான பாலிஃபீனால்கள் மற்றும் ஃப்ளேவோனாய்டுகள் உடலுக்கு கிடைக்கும். 2015 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில், இந்த கலவைகளானது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுவதோடு, இரத்தத்தில் லாக்டிக் அமில அளவை குறைக்க உதவி புரிந்து, உடல் வலிமையை அதிகரித்து, உடல் சோர்வை குறைப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதுவும் இந்த நீரை தொடர்ந்து ஒரு மாதம் குறைத்து வரும் போது, உடல் சோர்வு முற்றிலும் நீங்கி, சுறுசுறுப்பாக இருப்பதை நன்கு உணர முடியும்.
2. சிறுநீரகங்களுக்கு நல்லது
2020 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஆய்வில், வெண்டைக்காயின் விதைகளில் உள்ள வலுவான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், சிறுநீரக திசுக்களை நச்சுக்களில் இருந்து பாதுகாப்பு அளிப்பது தெரிய வந்துள்ளது. அதுவும் தீங்கு விளைவிக்கும் காரணிகளுக்கு உட்படுத்தப்பட்ட விலங்கு மாதிரிகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், வெண்டைக்காய் சிறுநீரக பாதிப்பின் அறிகுறிகளை குறைத்து, சிறுநீரக செல்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நொதிகளை அதிகரித்தது தெரிய வந்தது. இப்படியான ஆய்வு மனிதர்கள் மீது குறைவாக இருந்தாலும், வெண்டைக்காய் நீரை தவறாமல், சரியான அளவில் அருந்தும் போது, சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை இந்த ஆய்வு உணர்த்துகிறது. எனவே வெண்டைக்காய் நீர் சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
3. இதய ஆரோக்கியம் மேம்படும்
வெண்டைக்காயில் நார்ச்சத்து அதிகம் இருப்பதைத் தாண்டி, வெண்டைக்காய் உட்கொள்வதால் எல்.டி.எல் (“கெட்ட”) கொலஸ்ட்ரால், மொத்த கொலஸ்ட்ரால் மற்றும் பிற இரத்த லிப்பிடுகளைக் கணிசமாகக் குறைக்கும் என்று ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. அதுவும் ஊற வைத்த வெண்டைக்காயில் உள்ள கோழைச்சத்து, குடலில் உள்ள கொலஸ்ட்ராலுடன் பிணைந்து அதை உறிஞ்சுவதற்கு பதிலாக வெளியேற்ற உதவுகிறது. இதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த வெண்டைக்காய் நீர் உதவுகிறது.
4. இரத்த சர்க்கரை கட்டுப்படும்
வெண்டைக்காயை தொடர்ந்து உட்கொள்ளும் போது, அது வெறும் வயிற்றில் உள்ள இரத்த சர்க்கரை அளவு, HbA1c மற்றும் இன்சுலின் எதிர்ப்புத்தன்மை ஆகியவற்றைக் குறைப்பதாக மனித ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. ஏனெனில் வெண்டைக்காயில் உள்ள கோழைப் பொருள் கார்போஹைட்ரேட் உறிஞ்சுதவை மெதுவாக்குகிறது. அதுவும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து உட்கொள்ளும் போது, ஒரு வாரம் வரை இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவுகிறது.
5. கல்லீரல் சுத்தமாகி வலுவடையும்
வெண்டைக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கல்லீரலை ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகின்றன. ஆய்வறிக்கை ஒன்றில், வெண்டைக்காய் உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தின் குறிகாட்டிகளைக் குறைத்து, செல் பழுதுபார்ப்புக்கு உதவும் வழிமுறைகளை ஒழுங்குபடுத்துவதாகக் கூறுகிறது. ஆகவே கல்லீரல் ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும், வலிமையாகவும் இருக்க நினைத்தால், எலுமிச்சை கலந்த வெண்டைக்காய் நீரை குடித்து வாருங்கள்.
6. நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும்
அமெரிக்க வேளாண்மைத் துறையின் (USDA) ஊட்டச்சத்துத் தரவுகளின்படி, வெண்டைக்காயில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே, ஃபோலேட், மக்னீசியம் போன்ற நுண் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த சத்துக்கள் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளுடன் சேர்ந்து, ப்ரீ ராடிக்கல்களால் ஏற்படும் சேதத்தில் இருந்து செல்களை பாதுகாப்பதன் மூலமும், செல்களின் பழுதுபார்ப்புக்கும் உதவுவதன் மூலம், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகிறது. இருப்பினும் இது ஒரு முழுமையான தீர்வு இல்லாவிட்டாலும், ஒரு மாதம் தொடர்ந்து எலுமிச்சை கலந்த வெண்டைக்காய் நீரை குடிக்கும் போது நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்திருப்பதைக் காணலாம்.

எலுமிச்சை வெண்டைக்காய் நீரை தயாரிப்பது எப்படி?
* இரவு தூங்கும் முன், ஒரு வெண்டைக்காயை எடுத்து நீரில் நன்கு கழுவி, 3-4 துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு கப் நீரில் இந்த துண்டுகளாக்கப்பட்ட வெண்டைக்காயை சேர்த்து, மூடி வைத்து, 8-12 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு மறுநாள் காலையில் அந்த வெண்டைக்காய் துண்டுகளை அகற்றி விட்டு, அந்த நீரில் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்தால், எலுமிச்சை வெண்டைக்காய் நீர் தயார்.
* இந்த நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
நினைவில் கொள்ள வேண்டியவை:
* ஆரோக்கியமான மக்களுக்கு இந்த வெண்டைக்காய் நீர் பாதுகாப்பானது. ஆனால் சுகர் அல்லது இரத்த உறைதலுக்கு மாத்திரைகளை எடுப்பவர்கள் இந்த நீரை அருந்தும் முன் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ள வேண்டும்.
* வெண்டைக்காயில் ஆக்சலேட்டுகள் அதிகமாக இருப்பதால், அளவுக்கு அதிகமாக இந்நீரை அருந்தினால் சிறுநீரக கற்கள் உருவாவதற்குனான அபாயம் அதிகம் உள்ளது.
* சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள், கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள், இந்நீரை தினமும் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்வதற்கு முன் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ள வேண்டும்.
* முக்கியமாக இதை மருத்துவ சிகிச்சைக்கு ஒரு மாற்றாக கருதக்கூடாது. இதை ஒரு டயட்டரி சப்ளிமெண்ட்டாகவே கருத வேண்டும்.




