கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி
சமீபத்தில் கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 41 வயதான ஒருவர் H1N1 என்னும் பன்றிக் காய்ச்சல் தொற்றால் உயிரிழந்துள்ளார். இப்படி பன்றிக் காய்ச்சலால் ஒருவர் மரணமடைந்ததை தொடர்ந்து கர்நாடகாவில் H1N1 எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதோடு சுகாதார அதிகாரிகள் அவரது குடும்ப உறுப்பினர்களை கண்காணித்து சிகிச்சை அளித்தும் வருகின்றனர்.
பன்றிக் காய்ச்சல் என்பது ஒரு புதிய தொற்று அல்ல. அது ஒரு பருவகால நோய்த்தொற்று. இந்த தொற்றை உண்டாக்கும் வைரஸ் ஆரம்பத்தில் பன்றிகளிடம் தான் கண்டறியப்பட்டது. ஆனால் அதன்பின் மனிதர்களிடையேயும் இந்த வைரஸ் தொற்று பரவி, ஒரு பருவகால காய்ச்சலாக மாறியுள்ளது. அதுவும் தற்போதைய சம்பவத்தை பார்க்கும் போது, பன்றிக் காய்ச்சலை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால், பின் அது உயிரையே பறித்துவிடும் என்பது தெரிகிறது.
பன்றிக் காய்ச்சல் என்றால் என்ன?
பன்றிக் காய்ச்சல் என்பது இன்ஃப்ளூயன்ஸா வைரஸால் ஏற்படக்கூடிய ஒரு சுவாச நோய்த்தொற்றாகும். இது முதன்முதலாக 2009 ஆம் ஆண்டில் பரவிய இன்ஃப்ளூயன்ஸா தொற்றின் மூலம் கவனத்தை பெற்றது. அதன் பின் ஒவ்வொரு ஆண்டும் பரவும் இன்ஃப்ளூயன்ஸா வகைகளில் ஒன்றாக மாறியுள்ளது.
H1N1 எப்படி பரவுகிறது?
பன்றிக்காய்ச்சல் வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் இருமும் போதோ, தும்மும் போதோ, பேசும் போதோ வெளிப்படும் சுவாசத் துளிகள் மூலம், வைரஸானது மற்றவர்களுக்கு பரவுகிறது. அதுவும் அசுத்தமான மேற்பரப்புகளை கைகளால் தொட்டுவிட்டு, அப்படியே மூக்கு வாயை தொடும் போதும் இந்த வைரஸ் பரவக்கூடும். இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டால் பெரும்பாலும் ஒரு வாரத்திற்குள் குணமடைந்துவிடலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். தொற்று தீவிரமான நிலையில் இருந்தால், அது நுரையீரல், இதயம் மற்றும் பிற உறுப்புக்களையும் பாதித்து கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தும்.
பன்றிக் காய்ச்சலின் அறிகுறிகள்
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, பன்றிக் காய்ச்சலின் அறிகுறிகள் பின்வருமாறு:
* திடீரென்று அதிகப்படியான காய்ச்சல் மற்றும் குளிரால் நடுக்கம்
* தொடர் இருமல்
* தொண்டை வலி
* மூக்கடைப்பு அல்லது மூக்கு ஒழுகல்
* தசை வலி மற்றும் உடல் வலி
* கடுமையான தலை வலி
* பசியின்மை
* உடல் சோர்வு மற்றும் உடல் பலவீனம்
* குமட்டல், வாந்தி, வயிற்றுப் போக்கு

தீவிர நிலையில் தெரியும் அறிகுறிகள்
* சுவாசிப்பதில் சிரமம் அல்லது மூச்சுத்திணறல்
* மனக்குழப்பம்
* நெஞ்சு வலி
* சற்றும் குறையாத தொடர் காய்ச்சல்
* உதடுகள் நீல நிறத்தில் மாறுவது
யாருக்கு H1N1 தொற்று ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது?
பன்றிக்காய்ச்சல் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். இருப்பினும் குறிப்பிட்டவர்கள் இத்தொற்றினால் எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதில் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், ஆஸ்துமா நோயாளிகள், நாள்பட்ட நுரையீரல் பிரச்சனை உள்ளவர்கள், சர்க்கரை நோய் அல்லது இதய நோய் உள்ளவர்கள், புற்றுநோயாளிகள், மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை செய்தவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள் போன்றோர் அடங்குவர்.
பன்றிக் காய்ச்சலை தடுப்பது எப்படி?
பன்றிக் காய்ச்சல் தொற்று ஏற்படக்கூடதெனில் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
* வருடந்தோறும் இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியை போட வேண்டும்.
* தேவையில்லாமல் கைகளால் முகத்தைத் தொடக்கூடாது. அடிக்கடி சோப்பு பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
* இருமல், தும்மலின் போது கைக்குட்டையை பயன்படுத்த வேண்டும்.
* நோய்வாய்ப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
* வைரஸ் தொற்று பரவும் காலங்களில் கூட்டம் நிறைந்த இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
* உடல்நிலை சரியில்லாவிட்டால், வெளியே சுற்றாமல் வீட்டிலேயே இருக்க வேண்டும்.



