சத்தான.. எலுமிச்சை இஞ்சி ரசம் – எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க…
உங்கள் வீட்டில் உள்ளோர் ரசப் பிரியர்களா? தினமும் உங்கள் வீட்டில் ரசம் செய்வீர்களா? அதுவும் எப்போதும் ஒரே மாதிரியான சுவையில் தான் ரசம் செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை எலுமிச்சை இஞ்சி ரசத்தை செய்யுங்கள். இந்த ரசம் சுவையானது மட்டுமின்றி, சத்தானதும் கூட. அதுவும் செரிமான பிரச்சனைகளால் சிரமப்படும் போது இந்த ரசத்தை செய்து சாதத்துடனோ அல்லது சூப்பாகவோ எடுத்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.
உங்களுக்கு இந்த எலுமிச்சை இஞ்சி ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே எலுமிச்சை இஞ்சி ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு…
* துவரம் பருப்பு – 3 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் – 1 1/2 கப் இடிப்பதற்கு…
* இஞ்சி – 1 இன்ச்
* மிளகு – 1/2 டீஸ்பூன்
* சீரகம் – 1/4 டீஸ்பூன்

தாளிப்பதற்கு…
* எண்ணெய் – 1 டீஸ்பூன்
* கடுகு – 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் – 1
* கறிவேப்பிலை – 1 கொத்து
* இடிச்ச இஞ்சி
* பச்சை மிளகாய் – 2 (கீறியது)
* பெரிய தக்காளி – 1 (நறுக்கியது)
* உப்பு – சுவைக்கேற்ப
* கறிவேப்பிலை – 1 கொத்து
* கொத்தமல்லி – சிறிது
* தண்ணீர் – 3-4 கப்
* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
* வேக வைத்த பருப்பு நீர்
* வேக வைத்து மசித்த பருப்பு
* கொத்தமல்லி – சிறிது
* இடிச்ச மிளகு, சீரகம்
* பெரிய எலுமிச்சை – 1
செய்முறை:
* முதலில் குக்கரில் துவரம்பருப்பை நன்கு நீரில் கழுவி சேர்த்து, அத்துடன் 1 1/2 கப் நீரை ஊற்றி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, பருப்பு நீரை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் பருப்பை நன்கு மசித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து இடி உரலில் இஞ்சியை சேர்த்து நன்கு தட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே உரலில் மிளகு, சீரகத்தை சேர்த்து நன்கு ஒன்றிரண்டாக தட்டி, அதையும் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் இடித்து வைத்துள்ள இஞ்சியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கி, நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் கறிவேப்பிலை, கொத்தமல்லியைத் தூவி வதக்கி, 3 கப் நீரை ஊற்றி, மஞ்சள் தூள் கலந்து விட வேண்டும்.
* அடுத்து அதில் வேக வைத்த பருப்பு நீர் மற்றும் மசித்து வைத்துள்ள பருப்பை சேர்த்து, கொத்தமல்லியைத் தூவி நுரைக்கட்ட வேக வைக்க வேண்டும்.
* ரசம் நுரைக்கட்ட தொடங்கியதும், அதில் இடித்து வைத்துள்ள மிளகு, சீரகத்தை சேர்த்து கலந்து, இறக்கி எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்தால், சுவையான எலுமிச்சை இஞ்சி ரசம் தயார்.




