செட்டிநாடு பாணியில் வெஜிடபிள் பிரியாணி… இப்படி ஒரு முறை செய்து பாருங்க
பொதுவாகவே அனைவரது பிடித்தமான உணவுகளின் பட்டியலிலும் பிரியாணி நிச்சயம் இடம் பிடித்துவிடும். பிரியாணி பிடிக்காதவர்கள் மிக மிக அரிது.
அசைவ பிரியர்களுக்கு பிரியாணி பல வகைகளில் கிடைக்கும். ஆனால் சைவம் உண்பவர்களும் அசத்தல் சுவையில் பிரியாணி சாப்பிட வேண்டும் என்றால், நிச்சயம் செட்டிநாடு பிரியாணி தான் சிறந்த தெரிவு.
வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் செட்டிநாடு பாணியில் நாவூரும் சுவையில் வெஜிடபிள் பிரியாணி எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
அரிசி – 1 கப்
பெரிய வெங்காயம் – 2
கேரட் – 2
பீன்ஸ் – 15
பச்சை பட்டாணி ¼ கப்
தக்காளி பழம் – 1 (பெரியது)
இஞ்சி பூண்டு விழுது – 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் – ¼ தே.கரண்டி
மிளகாய் தூள் – ¼ தே.கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
நெய் – 2 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
புதினா இலை – சிறிதளவு
கொத்தமல்லி இலை – சிறிதளவு
மசாலா அரைக்க தேவையானவை
பட்டை துண்டு – சிறியது
பிரியாணி இலை – 1
வரமிளகாய் – 10
அன்னாசி பூ – 1
மிளகு – 1 மேசைக்கரண்டி
கருவேப்பிலை – 2 கொத்து
ஏலக்காய் – 15
கிராம்பு – 15
வரமல்லி(கொத்தமல்லி விதை) – 1 டேபிள் ஸ்பூன்
கடலைப்பருப்பு – 1 மேசைக்கரண்டி
முந்திரி பருப்பு – 10
சோம்பு – 1 தே.கரண்டி
சீரகம் – 1தே.கரண்டி
செய்முறை
முதலில் அரிசியை நன்றாக கழுவி தண்ணீர் சேர்த்து 30 நிமிடங்கள் வரையில் நன்றாக ஊறவிட வேண்டும். பின்னர் வெங்காயத்தை தோல் உரித்து சுத்தம் செய்து நீளவாக்கில் நறுக்கி தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் பழுத்த தக்காளியை கழுவி பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். அதனையடுத்து கேரட் மற்றும் பீன்ஸையும் நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் பட்டை, பிரியாணி இலை, வரமிளகாய், மற்றும் அன்னாசி பூ சேர்த்து ஒரு நிமிடம் வறுத்து, அதனுடன் மிளகு, கருவேப்பிலை, ஏலக்காய், கிராம்பு, கொத்தமல்லி விதை, கடலைப்பருப்பு, முந்திரி பருப்பு, சோம்பு, மற்றும் சீரகம் ஆகியவற்றை சேர்த்து வாசனை வரும் வரையில் வறுத்து இறக்கி ஆறவிட வேண்டும்.
பின்னர் அடுப்பை அணைத்து வறுத்த பொருட்களை நன்றாக ஆரவிட்டு, ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடி செய்தால் செட்டிநாடு பிரியாணி மசாலா பொடி தயார்.
பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய விட்டு, நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதம் வரை வதக்கிய பின்னர் அதனுடன் நறுக்கிய கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி, மற்றும் தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
அதனையடுத்து இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும். அதனுடன் அரைத்து வைத்திருக்கும் செட்டிநாடு மசாலாவில் இருந்து டீ 3 ஸ்பூன் போட்டு எல்லா மசாலா பொருட்களையும் நன்றாக கிளறிவிட வேண்டும்.
பின்னர் அதில் கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளை தூவி ஒரு நிமிடம் வதக்கி, அதனுடன் ஊற வைத்த அரிசிக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவேண்டும்.
அதன் பின்பு ஊற வைத்த அரிசி சேர்த்து உப்பு சரிபார்த்து குக்கரை மூடவும். – உங்க அரிசிக்கு ஏற்ப விசில் விட்டு இறக்கினால் சுவையான செட்டிநாட்டு பாணியில் அசத்தல் வெஜ் பிரியாணி தயார்.