சமையல் குறிப்புகள்புதியவை

மொறுமொறுப்பான… சீஸி ரைஸ் பாப்பர்ஸ்

உங்கள் வீட்டில் மதியம் சமைத்த சாதம் எஞ்சி உள்ளதா? அதேப் போல் உருளைக்கிழங்கு, சீஸ் போன்றவை உள்ளதா? அப்படியெனில் அதை வைத்து மாலை வேளையில் ஒரு அட்டகாசமான சுவையில் ஒரு ஸ்நாக்ஸ் செய்து உங்கள் குழந்தைகளுக்கு கொடுங்கள். இந்த ரெசிபியின் பெயர் சீஸி ரைஸ் பாப்பர்ஸ். இது நன்கு மொறுமொறுப்பாக அனைவரும் விரும்பி சாப்பிடும் சுவையில் இருக்கும். குறிப்பாக இது குழந்தைகளின் விருப்பமான ஸ்நாக்ஸ் ஆகவும் இருக்கும். அதோடு இந்த ரெசிபியை வீட்டிற்கு விருந்தினர்கள் வரும் போது கூட செய்யலாம். இதனால் அனைவரது பாராட்டையும் பெறுவீர்கள்.

கீழே சீஸி ரைஸ் பாப்பர்ஸ் எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைக் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* சாதம் – 1 கப்

* வேக வைத்த உருளைக்கிழங்கு – 1

* புதினா இலைகள் – 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

* கொத்தமல்லி இலைகள் – 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

* பச்சை மிளகாய் – 1/2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

* எலுமிச்சை சாறு – 1/2 டீஸ்பூன்

* மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்

* எண்ணெய் – 1 டீஸ்பூன்

* பிரட் தூள் – 2 டீஸ்பூன்

* சீஸ் துண்டுகள் – 2

* உப்பு – சுவைக்கேற்ப

கோட்டிங்கிற்கு…

* மைதா – 3 டீஸ்பூன்

* பிரட் தூள் – 4-5 டேபிள் ஸ்பூன்

* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் சாதம் மற்றும் வேக வைத்த உருளைக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு கையால் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

* பின் அதில் புதினா, கொத்தமல்லி, மிளகாய் தூள், பச்சை மிளகாய், எலுமிச்சை சாறு, மிளகுத் தூள், பிரட் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

* பின்பு சீஸ் துண்டுகளை 4 நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

* பிறகு பிசைந்து வைத்துள்ள மாவில் இருந்து ஒரு உருண்டையை எடுத்து, அதை உள்ளங்கையில் வைத்து தட்டையாக தட்டி, அதன் நடுவே ஒரு துண்டு சீஸ் வைத்து, மூடிக் கொள்ள வேண்டும். இதேப் போல் அனைத்து மாவையும் செய்து கொள்ள வேண்டும்.

* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

* அதற்குள் மைதாவை நீர் சேர்த்து ஓரளவு நீர் போன்று கரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது தயாரித்து வைத்துள்ள உருண்டைகளை மைதா நீரில் பிரட்டி, பின் அதை பிரட் தூளில் ஒருமுறை பிரட்டி, பின்பு எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதேப் போல் அனைத்து உருண்டைகளையும் பொரித்து எடுத்தால், சீஸி ரைஸ் பாப்பர்ஸ் தயார்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker