பிறந்த குழந்தைக்கு சளி பிடித்திருந்தால் உடனே நீங்கள் செய்ய வேண்டியவை இதுதான்
தற்போதைய சூழல் குழந்தைகளுக்கு சரியில்லை என்பதால் கவனமுடன் கையாளுவது அவசியம். கொரோனா ஒரு பக்கம், குளிர்காலத் தொற்றுகள் ஒரு பக்கம் என வாட்டி வதைக்கும் இந்த சூழலில் குழந்தைகளுக்கு கொஞ்சம் சளி பிடித்திருந்தாலும் கவனமுடன் இருப்பது அவசியம். குறிப்பாக அவர்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை சற்றும் குறையாமல் பார்த்துக்கொள்வது அவசியம். அந்த வகையில் நீங்கள் கையாள வேண்டிய சில விஷயங்களைப் பற்றி பார்ப்போம்.
கொரோனா வைரஸ் பரவல் காற்றின் மூலமும், மேற்பரப்புகள் மூலமும் பரவும் என்பதால் குழந்தைகளை பாதுகாப்புடன் வளர்க்க வேண்டும். குழந்தைகள் மேற்பரப்புகள் மீது கை வைத்துவிட்டு முகத்தில் கை வைத்தால் எளிதில் பரவும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அதேபோல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய சளிக்கான தடுப்பூசி போடுவது அவசியம் என இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு பேட்டியளித்த மருத்துவர் சௌரப் கண்ணா கூறியுள்ளார். இவர் சி.கே.பிர்லா மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவராக இருக்கிறார். இந்த தடுப்பூசியானது குழந்தை பிறந்த்ஆறு மாதத்திற்குப் பிறகு கொடுக்க வேண்டும். அதன் பின் தாய்ப்பால் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம் எனக் கூறியுள்ளார்.
குழந்தையை கவனித்துக்கொள்ளும் தாய்க்கு உடல்நிலை சரியில்லை எனில் குழந்தையுடனான நேரடித் தொடர்பை தவிர்ப்பது நல்லது. குழந்தைக்கு சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்வதை கட்டாயம் தவிர்க்கவும். நீங்கள் மட்டும் வெளியே செல்வதாக இருந்தாலும் மாஸ்க், கிளவுஸ் அணிவதை மறவாதீர்கள் என்கிறார் மருத்துவர்.
கண், வாய், மூக்கு ஆகிய இடங்களை அடிக்கடி தொடுவதை தவிருங்கள். மொத்தத்தில் முகத்தில் கை வைப்பதை தவிர்க்கலாம்.
குழந்தையை தொடும்போதும், தூக்கும்போதும், பால் கொடுக்கும்போதும் கைகளை சோப்பால் கழுவிய பின் தூக்கவும்.
குழந்தையை எப்போதும் கதகதப்பான சூழலில் வைத்துக்கொள்ளுங்கள். குளிர்ந்த காற்று நேரடியாக படுவதை தவிர்க்கவும். அறையின் வெப்பநிலையை குழந்தைக்கு ஏற்றவாறு வைத்துக்கொள்ளுங்கள்.
குழந்தையின் உடை, படுக்க வைக்கும் துணி கொஞ்சம் ஈரமாக இருந்தாலும் உடனே அகற்றிவிடுவது நல்லது. குழந்தையின் துணிகளை நன்கு வெயிலில் காய வைத்து பயன்படுத்துங்கள்.