பொடுகு, வறண்ட சருமம், முடி வெடிப்பு வராமல், கூந்தலை மென்மையாக்கும் முட்டை!
இயற்கை முறையில் முடியை அழகாக, மென்மையாக, பட்டு போல வளர்க்க சிறந்த ஒன்று முட்டையை பயன்படுத்துவது. முட்டையில் அதிக புரோட்டீன், வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. இதனால் முடியானது மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். மேலும் முட்டை தலையில் உள்ள பொடுகு, வறண்ட சருமம், முடி வெடிப்பு போன்றவற்றை வராமல் தடுக்கிறது.
அதுமட்டுமல்லாமல் முட்டையில் உள்ள வைட்டமின் டி, ஏ, ஈ போன்றவை முடி உதிர்வதைத் தடுப்பதோடு, தூசி அதிகம் படுவதால் கூந்தல் பாதிக்கப்படுவதையும், சூரியனிடமிருந்து வெளிவரும் புறஊதாக் கதிர்களால் முடி பாதிக்கப்படுவதையும் தடுக்கிறது.
சரி, இப்போது இந்த முட்டையை எவ்வாறெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்ப்போமா!
இரண்டு முட்டையை உடைத்து, அதன் மஞ்சள் கரு பகுதியை ஒரு பௌலில் விட்டு அத்துடன் சிறிது ஆமணக்கெண்ணெய் மற்றும் சிறிது தண்ணீர் கலந்து, முடிகளின் மயிர்கால்களில் நன்கு தடவி 30 நிமிடம் ஊற வைத்து பின் மெதுவாக மசாஜ் செய்து குளித்தால், முடியானது பட்டு போல இருக்கும். பொடுகு இருப்பவர்கள் அதில் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து தடவவும்.
முடி நன்கு வளர வேண்டுமென்றால், மஞ்சள் கருவுடன் சிறிது பாதாம் எண்ணெய்யை விட்டு கலந்து தடவி ஊற வைத்து குளிக்கவும்.
முட்டையில் ஹேர் மாஸ்க் செய்ய வேண்டுமென்றால், ஒரு முட்டையுடன் சிறிது தண்ணீர் ஊற்றி கூந்தல் முழுவதும் தடவி 10-15 நிமிடம் வரை ஊற வைத்து, ஷாம்பு போட்டு குளிக்கவும். இது ஒரு சிறந்த ஹேர் கண்டிசனர்.
இரண்டு முட்டையை உடைத்து ஒரு பௌலில் ஊற்றி, தலைக்குத் தடவி 3 நிமிடம் மசாஜ் செய்து, பின் ஷாம்பு போட்டு குளித்து, சிறிது வினிகரை நீரில் விட்டு அதனை தலைக்கு ஊற்றி, பிறகு குளிர்ந்த நீரில் அலசினால், முடியானது மென்மையாக இருக்கும்.
முட்டையுடன் சிறிது தயிர் மற்றும் எலுமிச்சை பழச்சாற்றை விட்டு கலந்து கூந்தலுக்கு தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் அலசினால் முடி அழகாக பட்டுப்போல் மின்னும்.