உறவுகள்புதியவை

திருமணத்திற்கு பின் நட்பை தொடர முடியாமல் போவதற்கான காரணங்கள்

 

திருமணத்திற்கு பிறகு கணவன்-மனைவி இருவருக்கும் பொறுப்புகள் அதிகரிக்க தொடங்கும். நெருங்கி பழகிய நண்பர்களை நேரில் சந்திக்கவோ, போனில் பேசவோ போதுமான நேரம் கிடைப்பதில்லை என்ற மனக்குறையும் பெரும்பாலான தம்பதியருக்கு ஏற்படும். நண்பர்களுக்கும் திருமணத்திற்கு பிறகு தங்களை கவனத்தில் கொள்வதில்லை என்ற வருத்தமும் எட்டிப்பார்க்கும். இந்த பிரச்சினையை களைவதற்கு நேரத்தை நிர்வகிக்க கற்றுக்கொள்வதுதான் முக்கியமானது.

நண்பர்கள் எப்போது ஓய்வாக இருப்பார்கள், உங்களுக்கு எப்போது ஓய்வு கிடைக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். விடுமுறை நாட்களில் சின்ன சின்ன வேலைகளுக்காக வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டியிருக்கும். அந்த சமயத்தில் நண்பர்களை சந்திப்பதற்காக சிறிது நேரத்தை ஒதுக்கலாம். வேலையை முடித்த மாதிரியும் இருக்கும், நண்பர்களை சந்தித்த சந்தோஷமும் கிடைக்கும்.

மனதுக்கு பிடித்தமான நண்பர்கள் எல்லோரிடமும் பேசுவதற்கு போதுமான நேரம் கிடைக்காமல் போகலாம். வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தள குழுக்கள் மூலம் அந்த குறையை போக்க முயற்சிக்கலாம். அதன் மூலம் வாரத்தில் ஒரு நாள் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவதற்கு திட்டமிடலாம். அது நண்பர்களிடம் இருந்து விலகி இருக்கிறோம் என்ற எண்ணத்தை போக்கும். இணக்கத்தையும் அதிகரிக்க வைத்துவிடும். சிலர் திருமணத்திற்கு பிறகு ரொம்பவே பிசியாகி விடுவார்கள். திருமணத்திற்கு முன்பு தனிமையில் நாட்களை நகர்த்தி கொண்டிருந்தவர்களுக்கு நிறைய நேரம் கிடைத்திருக்கும். அதனால் நண்பர்களுடன்தான் வாழ்நாளின் பெரும்பகுதியை செலவிட்டிருப்பார்கள்.

திருமணத்திற்கு பிறகு நிலைமை மாறிவிடும். அலுவலக வேலை, குடும்ப பொறுப்புகளுக்கு மத்தியில் தனிமையில் ஓய்வெடுப்பதற்கு முன்பு போல் நேரம் இருக்காது. அந்த சமயத்தில் நண்பர்களை சந்திக்க முடியாவிட்டாலும் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம். வாரத்தில் ஒருமுறை பேசினால்கூட நண்பர்களிடம் இருந்து விலகி இருக்கிறோம் என்ற எண்ணம் தோன்றாது. நண்பர்களை சந்திக்க போதுமான நேரம் கிடைக்கவில்லை என்றால் மதிய உணவு அல்லது இரவு உணவுக்கு நண்பர்களை அழைக்கலாம்.

அவர்களை குடும்பத்துடன் விருந்துக்கு அழைப்பதன் மூலம் உறவையும் பலப்படுத்தலாம். விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் சேர்ந்து குடும்பத்துடன் சுற்றுலா செல்வதற்கு திட்டமிடலாம். பண்டிகை காலங்கள், பிறந்தநாள், திருமண நாள் போன்ற முக்கிய தினங்களில் நண்பர்களை வீட்டுக்கு அழைக்கலாம். அதன் மூலம் உறவை மேம்படுத்திக்கொள்ளலாம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker