பி.எல்.ஓ.எஸ் உயிரியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, மோசமான தூக்கம் பெருந்தமனி தடிப்பு அழற்சியைத் தூண்டுவதாக தெரிய வந்தது. இது ஒரு அபாயகரமான இதய நோய்.
ஆய்வு
சுமார் 1600-க்கும் மேற்பட்ட நடுத்தர வயதினர் மற்றும் முதியவர்கள் மீது நடத்தப்பட்ட இந்த ஆய்வில், அவர்களின் இரத்த மாதிரிகள் மற்றும் கால்சியம் அளவுகள் போன்றவற்றை ஆய்வு செய்தனர். இது பிளேக் கட்டமைப்பின் குறிகாட்டியாகும்.
அதே சமயம் ஒரு வாரம் இந்த ஆய்வில் பங்கேற்றவர்களின் தூக்க முறைகளையும் கண்காணித்தனர். அதில் தூக்க முறையில் இடையூறை சந்தித்தவர்களுக்கு பெருந்தமனி தடிப்பு அழற்சிக்கான அபாயம் இருப்பது தெரிய வந்தது. எனவே இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த நல்ல நிம்மதியான தூக்கத்தை தினமும் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
இரவில் தூக்கத்தைப் பெற உதவும் பானங்கள்
இரவு தூங்கும் முன் நாம் சாப்பிடும் உணவுகள் நல்ல தரமான ஆழ்ந்த தூக்கத்தைப் பெற உதவுவதாக சான்றுகள் தெரிவிக்கின்றன. கீழே இரவு நேரத்தில் நல்ல நிம்மதியான தூக்கத்தை பெற உதவும் சில பானங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை இரவு தூங்கும் முன் குடித்தால், நிச்சயம் ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம்.
வெதுவெதுப்பான பால்
பலரும் இரவு நேரத்தில் ஏன் பால் குடிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளார்கள் தெரியுமா? அதோடு ஆரோக்கிய நிபுணர்களும் தூக்கமின்மையால் அவஸ்தைப்படுபவர்களை ஏன் இரவில் பால் குடிக்க சொல்கிறார்கள் தெரியுமா? ஏனெனில் பாலில் குறிப்பிடத்தக்க அளவு ட்ரிப்டோபன் என்னும் அமினோ அமிலம் உள்ளது. இது உடலினுள் செல்லும் போது, மெலடோனினாக மாற்றமடைந்து, நமது தூக்க நிலையை சீராக்க உதவுகிறது.
பாதாம் பால்
இரவில் நல்ல தூக்கத்தைத் தூண்டும் மற்றொரு சிறப்பான பானம் தான் பாதாம் பால். பல ஆய்வுகளின் படி, மூளையில் செரடோனின் அளவு சிறப்பாக இருப்பது தூக்கத்தைத் தூண்ட உதவும். நமது மத்திய நரம்பு மண்டலத்தில் செரடோனின் அளவு பொதுவாக ட்ரிப்டோபன் அளவு இருப்பதைப் பொறுத்தது. இது இயற்கையாகவே பாதாம் பாலில் உள்ளது. மேலும் பாதாம் பாலில் மக்னீசியம் அதிகமாக உள்ளது. இது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தக்கூடிய மற்றொரு முக்கியமான ஊட்டச்சத்து ஆகும்.