அழகு..அழகு..புதியவை

முக பொலிவிற்கு முத்தாய்ப்பாய் விளங்கும் மூக்குத்தி

இந்தியாவில் ஒவ்வொரு பிராந்திய பெண்களும் வெவ்வேறு வகையான மூக்குத்திகளை அணிந்து வருகின்றனர். அதற்கு என சிறப்பு மிகு பெயர்களும் உள்ளன. அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.
பெண்களின் முக கவர்ச்சிக்கு முத்தாய்ப்பாய் விளங்குவது மூக்குதான். அந்த மூக்கை அழகுபடுத்தும் விதமாக அதற்கு ஓர் அணிகலண் அணிய தொடங்கினர். பழங்காலம் தொட்டு பெண்களின் மூக்கின் இரு பக்கமும் (அ) ஒரு பக்கம் மெல்லிய ஊசியின் மூலம் மூக்கு குத்தப்பட்டு அதில் மூக்குத்தியை அணிந்து வந்தனர். பெண்கள் தற்காலத்தில் மூக்கு குத்தாமல் ஒட்டி கொள்ளும் வகையிலான மூக்குத்திகளையும் அணிகின்றனர்.

இதில் மூக்கு குத்தப்பட்டு அணியும் மூக்குத்திதான் பெண்களின் உடல்நலத்திற்கு பயன் தரக்கூடியதாக உள்ளது என கூறப்படுகிறது. பெண்களின் அழகை மேம்படுத்தும் மூக்குத்தி அணியும் போது அவர்களின் மூளைபகுதியில் உள்ள கெட்ட வாயுவெளியே செல்ல வழிவகுக்கும். குறிப்பாக பருவ வயது வந்தவுடனேயே பெண் பிள்ளைகளுக்கு மூக்கு குத்துவர். இந்த காலகட்டத்தில் தான் தலை பகுதியில் சில வாயுக்கள் தோன்றுமாம்.

அதனை போக்கவே மூக்கில் துளையிட்டு மூக்குத்தி அணியப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. நரம்பு மண்டலம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கவும் மூக்குத்தி உதவுகின்றது. பெண்கள் இரு பக்கமும் முன்பு மூக்குத்தி அணிந்து வந்தனர், பிறகு இரு பக்கம் என்பது இடது பக்கம் என்றவாறு மாறியது ஆனால் சில பெண்கள் பேஷனுக்காக வலதுபக்கம் மூக்கு குத்தி கொள்கின்றனர்.

ஆனால் சாஸ்திரப்படி இடது பக்கம் தான் மூக்குத்தி அணிய வேண்டுமாம். எப்படி இருப்பினும் மூக்குக்கு ஓர் அணிகலன் தங்கத்தில் அணியும் போது அதிக அழகுடனே காட்சி தருகிறது. இந்தியாவில் ஒவ்வொரு பிராந்திய பெண்களும் வெவ்வேறு வகையான மூக்குத்திகளை அணிந்து வருகின்றனர். அதற்கு என சிறப்பு மிகு பெயர்களும் உள்ளன. அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.

பஞ்சாபி நாத்

இந்தியாவின் புகழ் பெற்ற திருமண நகையலங்காரம் மூக்குத்தி தான் பஞ்சாபி நாத், இது பெரிய தங்க வளையம் மூக்குடன் இணைக்கும் படியும் அவ்வளையத்தில் மணி குஞ்சாரங்கள் தொங்க அதிலிருந்து நீண்ட செயின் மற்றும் மணி தொங்கலுடன் இணைந்து அது தலை முடியுடன் சேர்த்து இணைக்கப்படும். இப்பெரிய மூக்குத்தியாக காணப்படும் இது அணியும் பெண்களின் முக அழகு கூடுதல் பொலிவுடன் காட்சி தருகிறது. இதிலேயே மெல்லிய கம்பி வளையம் மற்றும் செயின் மட்டும் இணைப்பு கொண்டது நாத்னி என்று அழைக்கப்படுகிறது.

லவங்க பூ போன்றலவங்க் மூக்குத்தி

சிறிய கல் வைத்து மூக்குத்தி என்பது அசல் லவங்க பூ மாதிரி ஓரப்பகுதியில் இதழ்களுடன் நடுவில் கல் ஜொலிக்க கிடைக்கின்றது. வட இந்திய பெண்கள் அனைவரும் விரும்பி அணியும் இந்த லவங்க் என்ற மூக்குத்தி நவரத்தின கற்களில் ஒன்று பதித்தும், ரத்தினமல்லாத கற்கள் பதித்தும் கிடைக்கின்றன. தங்கத்தில் கிடைக்கும் லவங்க் மூக்குத்தி சில இடங்களில் வெள்ளியிலும் தயாரித்து விற்பனைச் செய்யப்படுகின்றன.

மஹாராஷ்டிராவின் நாத்

முந்திரி கொட்டை போன்ற உருவத்துடன் மேற்பகுதி அகலமாகவும் கீழ் இறங்க வளைந்த மாதிரி காட்சி தரும் மஹாராஷ்டிரா நாத் என்பது பெரிய அளவில் மூக்குடன் ஒட்டிய மூக்குத்தியாக காட்சி தருகிறது. இதில் சிறு முத்துகள் சுழலும்படி வைத்து நடுவில் சிகப்பு பச்சை கற்கள் பதித்து கொக்கி அமைப்பில் மாட்டும்படி உள்ளது.

ஜொலிக்கும் புள்ளாக்கு

புள்ளாக்கு என்பது மூக்கின் பக்க வாட்டில் அணிவது போன்று உள்ளது. மூக்கின் இரு சுவாச பாதை நடுவே உள்ள தண்டு பகுதியில் அணிந்து கொள்வது. இதனை மூக்குத்தியுடனும் அணிந்து விடுவர். இந்த புள்ளாக்கு என்பது வடக்கத்திய பாணி, மற்றும் தெற்கத்திய பாணி என்றவாறு கிடைக்கின்றன. வடக்கத்திய பாணி புள்ளாக்கு என்பது பெரிய வளையங்களுடன், அகலமாக காட்சி தரும். தென் இந்திய பாணி என்பது சிறு பந்து அமைப்பில் கீழ் மணி குஞ்சத்துடன் காணப்படும்.

கேரளாவின் பலாக்கா

கேரளாவில் பலாக்கா மூக்குத்தி பிரபலமானது. மூக்கில் சிறு அளவில் பொருத்த கூடிய அமைப்பிலான இந்த மூக்குத்தியில் அழகிய சிவப்பு மற்றும் பச்சை கற்கள் பதியப்பட்டு ஓரப்பகுதியில் சிறு அரும்புகள் செய்யப்பட்டு இருக்கும். பார்க்க அழகாக விதவிதமான மூக்குத்திகள் சந்தையில் கிடைக்கின்றன,



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker