சமையல் குறிப்புகள்
வயிறு பிரச்சனைகளை குணமாக்கும் ஆயுர்வேத சூப்
வாயு தொல்லை, சளி, இருமல், வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு இந்த சூப் நல்லது. இன்று இந்த சூப்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
- கற்பூரவல்லி இலை – 15,
- ஓமம் – 2 டீஸ்பூன்,
- சீரகம் – 2 டீஸ்பூன்,
- தனியா – 2 டீஸ்பூன்,
- மிளகு – 4 எண்ணிக்கை,
- சுக்குத்தூள் – ஒரு சிட்டிகை (தேவைப்பட்டால்),
- இஞ்சி – 1 துண்டு,
- பூண்டு – 4 பல்,
- சோம்பு – சிறிது (தேவைப்பட்டால்),
- உப்பு – தேவைக்கு,
- பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை (தேவைப்பட்டால்),
- வெற்றிலை – 4,
- நெய் – 2 டீஸ்பூன்.
செய்முறை
- கற்பூரவல்லி இலையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
- கடாயில் 1 டீஸ்பூன் நெய் விட்டு கற்பூரவல்லி இலை, வெற்றிலை சேர்த்து வதக்கி தனியே எடுத்து வைக்கவும்.
- மற்றொரு கடாயில் சிறிது நெய் விட்டு சூடானதும் ஓமம், சீரகம், தனியா, சோம்பு, மிளகு, பூண்டு, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி, வதக்கிய கற்பூரவல்லி இலை, வெற்றிலையுடன் சேர்த்து 2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
- சூப் நன்கு கொதித்து 1 கப்பாக சுண்டியதும் வடித்து பரிமாறவும்.
- சத்தான ஓமம் கற்பூரவல்லி இலை சூப் ரெடி.