சமையல் குறிப்புகள்
சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கிச்சடி
அதிகளவு சத்துக்கள் நிறைந்த கேழ்வரகை சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று கேழ்வரகில் கிச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
- கேழ்வரகு சேமியா – 1 பாக்கெட்
- வெங்காயம் – 1
- கேரட் – 1
- உருளைக்கிழங்கு – 1
- இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
- பீன்ஸ் – 6
- பச்சை பட்டாணி – 1/4 கப்
- தக்காளி – 1
- கடுகு – 1/2 டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
- வரமிளகாய் – 2
- கறிவேப்பிலை – சிறிது
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :
- வெங்காயம், தக்காளி, கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- கேழ்வரகு சேமியாவை வெதுவெதுப்பான நீரில் ஒருமுறை அலசி, பின் இட்டி தட்டில் வைத்து 5 நிமிடம் வேக வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் அதில் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
- வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
- தக்காளி குழைய வதங்கியதும் அதில் அனைத்து காய்கறிகளையும் சேர்த்து, உப்பை தூவி 3 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும். பின்னர் காய்கறிகள் வேக சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைத்து வேக விடவும்.
- காய்கறிகள் வெந்ததும் அதில் வேக வைத்துள்ள கேழ்வரகு சேமியா, கொத்தமல்லியை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான கேழ்வரகு கிச்சடி ரெடி!!!