எடிட்டர் சாய்ஸ்

வீட்டில் மகிழ்ச்சியும், நிம்மதியும் நிறைந்திருக்க….

வீட்டில் மகிழ்ச்சியும், நிம்மதியும் நிறைந்திருக்க குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டியது அவசியமானது. குடும்பத்தை எப்போதும் சந்தோஷமாக வைத்திருக்கும் பொறுப்பு குடும்ப தலைவரிடம் இருக்கிறது. தொழில், பணி நிமித்தமாக குடும்பத்தினருடன் செலவிடுவதற்கு போதுமான நேரம் கிடைக்கவில்லை என்றாலும் அவர்களின் நலனில் அக்கறை கொள்ளும் நபராக விளங்க வேண்டும். அதை அவர்கள் உணர்வுப்பூர்வமாக உணரும் விதத்தில் நடந்துகொள்ளவும் வேண்டும். கிடைக்கும் ஓய்வு நேரங்களையெல்லாம் குடும்பத்தினருடன் செலவிட முயற்சிக்க வேண்டும். குடும்பத்தை மகிழ்ச்சியாக வைத்திருப்பதற்கு செய்ய வேண்டிய சில விஷயங்கள் குறித்து பார்ப்போம்.



குடும்பம், பார்க்கும் வேலை இவை இரண்டுக்கும் சமமான அளவில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இது கடினமானதுதான் என்றாலும் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். உங்களிடம் சேர்ந்து இருந்து பொழுதை போக்குவதற்கு குடும்பத்தினர் எதிர்பார்க்கும் நேரத்தை ஒதுக்க வேண்டும். அது குடும்பத்தினர் உங்களுடன் நெருங்கி பழகுவதற்கு வழிவகை செய்யும்.

குழந்தைகளிடம் அவர்களின் படிப்பு சார்ந்த விஷயங்களை மட்டுமின்றி அவர்களது தனிப்பட்ட அனுபவங்களை பற்றியும் பேசுங்கள். மனைவி மற்றும் பெற்றோரிடம் அவர்களுடைய உடல்நிலை மற்றும் மன நலன் சார்ந்த விஷயங்களை பேசுங்கள். அவர்கள் சொல்ல வரும் கருத்தை காது கொடுத்து கேளுங்கள். இடை இடையே குறுக்கிட்டு அவர்கள் பேசும் விஷயத்தை திசை திருப்புவதற்கு முயற்சி செய்யாதீர்கள்.

குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரின் அணுகுமுறைகள், செயல்பாடுகள் சிறப்பாக இருந்தால் மனம்விட்டு பாராட்டுங்கள். அது அவர்களின் சந்தோஷத்தை அதிகப்படுத்தும். மேலும் சிறப்பாக செயல்பட தூண்டும்.



குழந்தைகளிடம் பேசுவதற்கு தினமும் நேரம் ஒதுக்கிவிட வேண்டும். அவர்கள் கேட்கும் சந்தேகங்கள், பேச விரும்பும் விஷயங்களை ஆர்வமாக கேட்க வேண்டும். அது அவர்களுக்கு உங்கள் மேல் உள்ள நம்பிக்கையையும், மதிப்பையும் உயர்த்தும். வெளியிடங்களில் தவறான நட்புகளில் இருந்து அவர்கள் விலகவும் உதவும்.

இரவு வேளையில் குடும்பத்தினருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதற்கு முயற்சி செய்யுங்கள். அப்படி ஒன்றாக சாப்பிடுவது பந்தத்தை பலப்படுத்தும். அன்பையும் மேம்படுத்தும்.

வாரத்திற்கு ஒரு முறையாவது வெளி இடங்களுக்கு செல்வதற்கு திட்டமிடுங்கள். அது குடும்பத்தில் உள்ள அனைவருடனும் போதுமான நேரத்தை செலவிடுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும். குழந்தைகளுக்கு பிடித்தமான விளையாட்டுகள், வீட்டு தோட்டம் போன்ற விஷயங்களில் குடும்பத்தினர் அனைவரும் குழுவாக இயங்குங்கள். பள்ளி விடுமுறை காலங்களில் சுற்றுலாவுக்கு திட்டமிடுங்கள். அது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை தரும்.

குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிக்கும்போதெல்லாம், அவர்களுடன் சேர்ந்து பாடி, இசைக்கு நடனமாடுங்கள். அது உடலுக்கும், உள்ளத்திற்கும் உற்சாகம் அளிக்கும்.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker