உலக நடப்புகள்புதியவை

ஆன்லைன் கல்வி குழந்தைகளின் அன்றாட வாழ்க்கை முறையில் ஏற்படுத்திய மாற்றங்கள்

கொரோனாவால் பள்ளிகள் பூட்டிக்கிடக்கின்றன. அதனால் நான்கு மாதங்களுக்கும் மேலாக இந்தியா முழுவதும் ‘ஆன்லைன்’ வழி வகுப்புகள் நடக்கின்றன. அதில் எந்த அளவுக்கு ஆசிரியர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் மகிழ்ச்சியடைகிறார்கள் என்பது பற்றி எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றில், ‘ஆன்லைன் வழியாக கற்றுக்கொடுப்பதில் தங்களுக்கு திருப்தியில்லை’ என்று, 75 சதவீத ஆசிரியர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். குழந்தைகளின் பெற்றோர்களோ, ‘ஆன் லைன் கல்விக்காக அவர்களுக்கு ஏற்படுத்திக்கொடுக்கும் சவுகரியங்களை குழந்தைகள் வேறு விஷயங்களுக்கு பயன்படுத்துகிறார்கள்’ என்று குறைபட்டிருக்கிறார்கள்.

கருத்துக்கணிப்பில் இடம் பெற்ற மாணவர்களில் 74 சதவீதம் பேர் ‘ஆன்லைன் வழி பாடத்தைவிட பள்ளிகளில் நேரடியாக நடக்கும் வகுப்புகளே பயனுள்ளது’ என்று கூறியிருக்கிறார்கள். பெற்றோர்களில் 70 சதவீதம் பேரும் ‘பள்ளி நேரடி வகுப்புகளே சிறந்தது’ என்ற கருத்தை பதிவு செய்திருக்கிறார்கள். இவர்களது கருத்துகளை பார்க்கும்போது, கல்வி போதிப்பதில் எத்தனை நவீன தொழில்நுட்பங்களை புகுத்தினாலும் நமது பாரம்பரியமான நேரடி வகுப்பு முறைகளே எல்லா காலத்திற்கும் சிறந்ததாக இருக்கும் என்பது தெரியவருகிறது.

தனியார் அமைப்பு ஒன்று எடுத்திருக்கும் இந்த சர்வேபடி 55.7 சதவீத குழந்தைகள் முழுவகுப்புகளிலும் பங்கேற்கவில்லை என் பது தெரியவந்திருக்கிறது. 44.3 சதவீத குழந்தைகளே எல்லா வகுப்புகளிலும் இடம்பிடித்திருக்கிறார்கள். ‘பெரும்பான்மை குழந் தைகளால் ஏன் ஆன்லைன் வகுப்புகளில் முழுமையாக பங்குபெற முடியவில்லை?’ என்ற கேள்விக்கு, 26 சதவீத குழந்தைகள் ‘நெட்ஒர்க் சரிவர கிடைக்கவில்லை’ என்று கூறியிருக்கிறார்கள். 13 சதவீதம் பேர் ‘மின்சார தடை ஏற்பட்டது’ என்று காரணம் சொல்லியிருக்கிறார்கள். ‘வகுப்பு நடக்கும் நேரத்தில் தங்கள் கைக்கு போன் கிடைக்கவில்லை’ என்பது 12 சதவீத குழந்தைகளின் குறைபாடாக இருக்கிறது.

75 சதவீத ஆசிரியர்கள் தங்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் திருப்தி தரவில்லை என்று கூறும் நிலையில், அதற்கான விளக்கத்தை கல்வியாளர்கள் தருகிறார்கள்!

“பயிற்றுவிப்பது என்பது வெறும் மொழி சார்ந்த விஷயம் மட்டுமில்லை. அதன் மூலம் ஒரு நல்ல தலைமுறையை வார்த்தெடுக்கும் கடமையை ஆசிரியர்கள் முழுமையாக செய்யவேண்டும். அதற்காக பயிற்றுவிக்கும்போது அவர்கள் குழந்தைகளை நேருக்குநேர் பார்க்கவேண்டும். அவர்களது மனநிலையையும், உடல் மொழியையும் உணர்ந்து அதற்கு தக்கபடி ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்கவேண்டும். அதற்கான வாய்ப்புகள் ஆன்லைன் வழியாக கிடைக்காமல் போய்விடுகிறது. குழந்தைகள் எப்போது பள்ளிக்கு வருவார்கள் என்று நாங்கள் காத்திருக்கிறோம். எங்களை சந்திக்க குழந்தைகளும் ஏக்கத்தோடு காத்திருக்கின்றன” என்கிறார்கள்.

ஆன்லைன் வழி கல்வியால் குழந்தைகளின் அன்றாட வாழ்க்கைமுறையிலும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. தூக்கம், உணவுப் பழக்கம், ஆரோக்கிய நிலை போன்றவைகளில் பிரச்சினைகள் ஏற்பட்டிருப்பதாக 38 சதவீத பெற்றோர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

இது பற்றி மனோதத்துவ நிபுணர் தெரிவித்திருக்கும் கருத்து என்னவென்று பார்ப்போம்..

“பள்ளிகளுக்கு செல்லும்போது குழந்தைகளிடம் முறைப்படுத்தப்பட்ட வாழ்க்கைமுறை இருந் தது. விழிப்பது, குளிப்பது, சாப்பிடுவது, பள்ளிக்கு கிளம்புவது போன்ற அனைத்தும் அந்தந்த நேரத்தில் நடந்தது. அதுவே வாழ்க்கைமுறையாக இருந்த நிலையில், ஆன்லைன் கல்வி முறை அதை எல்லாம் அப்படியே மாற்றியமைத்துவிட்டது. தூங்கும் நேரம், வகுப்பு நேரம் எல்லாம் மாறிவிட்டது. குழந்தைகளின் கண்களும் அதிக சோர்வடைகிறது. குழந்தைகளுக்கு மனஅழுத்தமும் ஏற்படுகிறது.

குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க, ஆன்லைன் வகுப்புகளை தொடர்ச்சியாக நடத்தக்கூடாது. தேவையான ஓய்வளிக்கவேண்டும். அந்த ஓய்வு நேரத்தில் உடலுக்கு ஏதாவது பயிற்சியளிப்பது நல்லது. உணவருந்துவதற்கும், தூங்குவதற்கும் நேரத்தை முறைப்படுத்தவேண்டும். ஓய்வு நேரத்தில் பெற்றோரும் குழந்தைகளோடு விளையாடி, அவர்களை மகிழ்ச்சிப்படுத்தவேண்டும்” என்கிறார்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker