வழுக்கை தலையில் முடி வளரணுமா? அப்ப கடுகு எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க..

தற்போது நிறைய பேர் சந்திக்கும் ஒரு பிரச்சனை தான் தலைமுடி உதிர்வது. அதுவும் ஒருவருக்கு அளவுக்கு அதிகமாக தலைமுடி உதிர்ந்து, தலையின் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் வழுக்கை விழத் தொடங்கினால், அது அந்நபருக்கு மிகுந்த மனச்சோர்வை உண்டாக்கிவிடும்.
இப்படி முடி அதிகம் கொட்டி தலை வழுக்கையாவதற்கு மரபணு காரணிகள், ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் மோசமான ஊட்டச்சத்து குறைபாடு போன்றவை காரணங்களாக இருந்தாலும், பலர் இப்பிரச்சனைக்கு இயற்கை முறையில் தீர்வு காண முயலுகின்றனர். அதுவும் நம் வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே சிகிச்சை அளிக்கின்றனர். அப்படிப்பட்ட ஒரு நம்பகமான மற்றும் நீண்ட காலமாக வழுக்கை தலை பிரச்சனைக்கு தீர்வு காண பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பொருள் தான் கடுகு எண்ணெய்.
இந்த கடுகு எண்ணெயானது வெப்பமூட்டும் தன்மையுடன், அதிக சத்துக்களைக் கொண்டது. இந்த எண்ணெயைக் கொண்டு தலைமுடிக்கு பராமரிப்பு கொடுக்கும் போது, அது முடியின் வேர்க்கால்களை வலுப்படுத்துகிறது, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் புதிய முடி வளர்ச்சிக்கான சூழலை உருவாக்க உதவுகிறது.
அதுவும் வழுக்கை விழுந்த பகுதிகளில் இந்த எண்ணெயை பூசும்போது, ஸ்கால்ப்பில் இது உருவாக்கும் வெப்பம் செயலற்ற நிலையில் உள்ள மயிர்க்கால்களுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து, அவற்றை மீண்டும் செயல்படத் தூண்டுகிறது. குறிப்பாக இந்த எண்ணெயுடன் ஒருசில பொருட்களை கலந்து பயன்படுத்தும் போது இன்னும் சிறப்பான பலன்கள் கிடைக்கும். இப்போது வழுக்கை தலையில் முடியின் வளர்ச்சியை அதிகரிக்க கடுகு எண்ணெயுடன் எந்த பொருட்களை எல்லாம் கலந்து பயன்படுத்தலாம் என்பதைக் காண்போம்.
1. கடுகு எண்ணெய் + செம்பருத்தி
* இதற்கு செம்பருத்தியின் இதழ்கள் மற்றும் இலைகளை அரைத்து, அத்துடன் சிறிது கடுகு எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை வழுக்கை விழுந்த இடங்களில் தடவி, 45 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி குளிர்ந்த நீரால் தலைமுடியை அலச வேண்டும்.
* இப்படி அடிக்கடி பயன்படுத்தும் போது, அது முடியின் வளர்ச்சியை அதிகரித்து, தலைமுடியை பளபளப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
2. கடுகு எண்ணெய் + கறிவேப்பிலை
* இதற்கு கடுகு எண்ணெயை சூடேற்றி, அதில் சிறிது பிரஷ்ஷான கறிவேப்பிலையை சேர்த்து பொரிய விட்டு இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் அந்த எண்ணெயை வடிகட்டி, ஒரு பாட்டிலில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* பின்பு தயாரித்த எண்ணெயைக் கொண்டு வாரத்திற்கு 2 முறை ஆயில் மசாஜ் செய்து, மைல்டு ஷாம்பு பயன்படுத்தி குளித்து வர, தலைமுடி வலிமையாக இருப்பதைக் காண்பதோடு, வழுக்கையான இடத்தில் புதிய முடி வளர்வதையும் காணலாம்.
3. கடுகு எண்ணெய் + கற்றாழை
* இதற்கு முதலில் கற்றாழை ஜெல்லை எடுத்து, அத்துடன் கடுகு எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை ஸ்கால்ப்பில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* இப்படி செய்யும் போது ஸ்கால்ப்பில் அரிப்பு, லேசான எரிச்சல் போன்றவை ஏற்பட்டால், எண்ணெய் ஸ்கால்ப்பில் வேலை செய்கிறது என்று அர்த்தம். * பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
4. கடுகு எண்ணெய் + வெந்தயம்
* இதற்கு வெந்தய விதைகளை இரவு தூங்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் அதை அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் கடுகு எண்ணெய் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி, 45 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி குளிர்ந்த நீரால் தலைமுடியை அலச வேண்டும்.
* இப்படி செய்யும் போது தலைமுடி வலுவடைந்து, புதிய முடியின் வளர்ச்சி ஊக்குவிக்கப்படும்.
5. கடுகு எண்ணெய் + வெங்காய சாறு
* இதற்கு ஒரு பௌலில் பிரஷ்ஷான வெங்காய சாறு மற்றும் வெதுவெதுப்பான கடுகு எண்ணெயை சம அளவில் எடுத்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை வழுக்கை விழுந்த இடத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.
* பிறகு 30-40 நிமிடம் ஊற வைத்து, மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
* இப்படி தொடர்ந்து பயன்படுத்தி வரும் போது, வழுக்கை விழுந்த இடத்தில் புதிய முடி வளர்வதைக் காணலாம்.



