தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
யோகா என்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த செய்யக்கூடிய ஒருவிதமான பயிற்சியாகும். இது இந்தியாவில் பல்லாயிரம் ஆண்டுகளாக பயிற்சி செய்யப்பட்டு வருகிறது. இந்த யோகா உடலுக்கு ஏராளமான நன்மைகளை வழங்கக்கூடியது. இதை ஒருவர் தினமும் பயிற்சி செய்து வந்தால், ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.
இந்த யோகா பயிற்சியின் அவசியத்தை உணர்த்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதுவும் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருபொருள் அடிப்படையில் இந்த யோகா தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் கருபொருள் “ஆரோக்கியமான முதுமைக்கான யோகா” (Yoga For Healthy Ageing) என்பதாகும்.
தற்போதைய காலகட்டத்தில் யோகாசனங்களை ஒருவர் தினமும் தவறாமல் செய்ய வேண்டும். ஏனெனில் அந்த அளவில் ஆரோக்கிய பிரச்சனைகளானது அதிகரித்துள்ளது. இதைத் தவிர்க்கவும், கட்டுப்படுத்தவும் நினைத்தால், யோகாசனங்கள் பெரிதும் உதவி புரியும். இப்போது யோகாசனங்களை ஒருவர் தினமும் செய்து வந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து காண்போம்.
1. மன அழுத்தம் மற்றும் பதட்டம் குறையும்
தற்போது மன அழுத்தத்தினால் தான் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் அளிக்க யோகாசனங்கள் பெரிதும் உதவி புரியும். சொல்லப்போனால் யோகாசனங்களால் பெறக்கூடிய முக்கியமான நன்மைகளுள் முதன்மையானது இது தான். யோகாவில் சுவாசப் பயிற்சிகள், தியானம் மற்றும் உடல் அசைவுகளும் அடங்கியுள்ளன. ஆய்வுகளும் யோகாசனங்களை செய்வது உடலின் மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலைக் குறைக்க உதவுவதாக கூறுகின்றன. எனவே தினமும் யோகா பயிற்சியை மேற்கொண்டு, உடலையும், மனதையும் ரிலாக்ஸாக வைத்துக் கொள்ளுங்கள்.
2. நெகிழ்வுத்தன்மையும், உடல் வலிமையும் அதிகரிக்கும்
யோகாசனங்களை செய்யும் போது, உடலில் உள்ள பல்வேறு தசைகள் நீட்டப்படுகின்றன. இப்படி தொடர்ந்து செய்யும் போது உடல் அதிக நெகிழ்வுத்தன்மை அடைகிறது. அதுவும் புஜங்காசனம், வீரபாசனம் போன்ற ஆசனங்கள் தசைகளை வலுப்படுத்துவதோடு, உடலின் இயக்கத்தையும் மேம்படுத்துகின்றன. மேலும் யோகாசனங்களை தொடர்ந்து செய்பவர்களுக்கு தசை வலிமையடைவதோடு, உடல் தோரணை மற்றும் சமநிலையில் முன்னேற்றம் ஏற்படுவதாக ஆய்வுகளிலும் தெரிய வந்துள்ளன.
3. இதயத்திற்கு நல்லது
யோகாசனங்கள் இதய ஆரோக்கியத்திற்கும் நன்மைகளை வழங்குகின்றன. அதுவும் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைககவும், உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் யோகாசனங்களை வல்லுநர்கள் பயன்படுத்துகின்றனர். அதுவும் தீவிரமான யோகா மற்றும் சுவாச பயிற்சிகள் இரத்த நாளங்களை தளர்த்தி, உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, இதயத்தின் மீதான அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன. இதன் விளைவாக இதய நோயின் அபாயம் குறைகிறது.
4. உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும்
யோகாவின் மூலம் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும். தீவிரமான உடற்பயிற்சியைப் போல் உடல் எடையைக் குறைக்க முடியாவிட்டாலும், அசைவுகளின் மூலம், கெட்ட கொழுப்புக்கள் கரைத்து, தசைகளை வலுவடையச் செய்யும். அதுவும் சில ஆற்றல்மிக்க யோகாசனங்கள் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலை வலுப்படுத்துகிறது. முக்கியமாக யோகாவை தினமும் செய்து வந்தால், மன அழுத்தத்தால் அதிகம் உணவு உட்கொள்வது தடுக்கப்பட்டு, அதன் மூலம் உடல் எடை அதிகரிப்பது தடுக்கப்படுகிறது.
5. ஆழமான தூக்கத்திற்கு உதவும்
தற்போது தூக்கமின்மையால் பலர் அவதிபடுவதற்கு முக்கிய காரணம் மன அழுத்தமும், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும் தான். ஆனால் யோகா நரம்பு மண்டலத்தை ஒருமுகப்படுத்தி, உடலை ரிலாக்ஸடைய செய்வதால், நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவுகிறது. ஆய்வுகளிலும் யோகா நல்ல தூக்கத்தைப் பெற உதவுவது குறித்து நிரூபிக்கப்பட்டுள்ளன.
எனவே நண்பர்களே! இதுவரை யோகாசனங்களை செய்யாமல் இருந்திருந்தால், இனிமேல் தினமும் யோகாசனங்களை செய்து, உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்



