வீட்டுக்குள் காற்று வரட்டும்
கோடைக்காலம் வந்துவிட்டது. அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெயில் கடுமையாக வாட்டி வதைக்கிறது.
இரவிலும் வெயிலின் வெப்பம் அனலாக வீட்டுக்குள் இறங்குகிறது. செயற்கையாக ஏ.சி. இயக்கி வெப்பத்தை தவிர்க்கலாம். ஆனால் இயற்கையாக இதை எதிர்கொள்ளலாம்.
எப்படி எனக் கேட்கிறீர்களா?
பெரும்பாலும் வீட்டுக்குள் காற்று வந்து போக வழிசெய்ய வேண்டும். அப்படிச் செய்தால் வீட்டுக்கு உள்ளே உள்ள வெப்பத்தை காற்று குளிர்விக்கும். மேலும் ஜன்னல்களில் மூங்கில் திரைகளைப் பொருத்தி அதன் மீது லேசாக தண்ணீர் தெளித்தால் அது காற்றை குளிர்வித்து வீட்டுக்குள் அனுப்பும். வீட்டுக்கு இயற்கையான குளுமை கிடைக்கும்.
தேவையில்லாமல் மின்சாதனங்களை இயக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவை வெளிவிடும் வெப்பமும் வீட்டுக்குள் தான் இருக்கும். இவை எல்லாவற்றையும் விட மொட்டை மாடியில், சுவரில் செடிகள் வளர்க்கலாம். அது வீட்டுக்கு மட்டுமல்ல, கண்களுக்கும் கூடுதல் குளிர்ச்சியை தரும்.
தோட்டம் வைக்க இடம் இல்லையே என்ற கவலையே வேண்டாம். வீட்டு சுவர்களிலேயே செடி, கொடிகளை படரவிட்டு வளர்க்கலாம். சுவர்களில் மணி பிளாண்ட் போன்ற செடிகளை தொங்கவிட்டு வளர்க்கலாம். பசுமை சுவர் தாவர முறைக்கு மேலை நாடுகளில் மிகுந்த வரவேற்பு உண்டு. இப்போது நம் நாட்டிலும் வரவேற்பு கூடியிருக்கிறது.
சுவர்களில் மட்டுமல்ல, முழு அடுக்கு மாடியிலும்கூட இப்படி விதவிதமான செடிகளை வளர்க்கலாம். வீட்டுத் தூண்களில் அலங்கார கொடிகளை படரவிடலாம். வெப்பத்தின் தாக்கத்தை உணர முடியாத அளவுக்கு பசுமை கலந்த சூழலை இது உருவாக்கும்.