ஆரோக்கியம்புதியவை

எலுமிச்சை நீர் Vs தேன் கலந்த நீர் – இவற்றில் உடல் எடையைக் குறைக்க சிறந்தது எது?

உலகெங்கிலும் உடல் எடையைக் குறைக்க மக்கள் ஏராளமான வழிகளைப் பின்பற்றி வருகின்றனர். அதில் சிலர் உடல் எடையைக் குறைக்க காலை எழுந்ததும் குறிப்பிட்ட சில பழக்கங்களை வழக்கமாக கொண்டிருப்பார்கள். அவற்றில் ஒன்று எலுமிச்சை நீரைக் குடிப்பது, மற்றொன்று தேன் கலந்த நீரை குடிப்பது. இந்த இரண்டு பானங்கள் உடலையும், மனதையும் புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்வதோடு, உடலுக்கு ஏராளமான நன்மைகளையும் தருகின்றன.

முக்கியமாக இந்த பானங்கள் தயாரிப்பதற்கு எளிமையாக இருப்பதோடு, பாரம்பரிய ஆரோக்கியப் பழக்கவழக்கங்களில் வேரூன்றியவை. ஆனால் உண்மையிலேயே இந்த இரண்டு பானங்களும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் எந்த அளவில் பயனுள்ளதாக உள்ளது? இவற்றில் எதை தினமும் குடிக்கலாம் மற்றும் இவ்விரண்டில் உண்மையில் எது உடல் எடையைக் குறைக்க சிறந்தது என்பது குறித்து இப்போது காண்போம்.

தேன் கலந்த நீரின் நன்மைகள்

* தேனில் உள்ள இயற்கை சர்க்கரையானது காப்ஃபைனைப் போன்று செயல்படகூடியது. எனவே வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடிக்கும் போது உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைத்து, உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும். புத்துணர்ச்சியுடன் நாளை தொடங்க நினைத்தால் தேன் கலந்த நீரை அருந்தலாம்.

* வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடிக்கும் போது, அது வயிற்றை இதமாக வைத்துக் கொள்ள உதவுவதோடு, செரிமான செயல்பாட்டை மென்மையாகவும், சீராகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது.

* சுத்தமான தேனில் உள்ள சேர்மங்கள், ப்ரீ ராடிக்கல்களால் உடலில் ஏற்படும் சேதத்தை எதிர்த்து பாதுகாப்பளிப்பதோடு, ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. முக்கியமாக தேனில் உள்ள ப்ரீபயாடிக் நார்ச்சத்துக்கள், குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு உணவளித்து, ஊட்டச்சத்து உறிஞ்சுதலுக்கு உதவுவதோடு, சீரான குடல் இயக்கத்தையும் ஊக்குவிக்கின்றன.

* தேனில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் உள்ளன. எனவே இந்த தேன் கலந்த வெதுவெதுப்பான நீரை காலையில் குடிக்கும் போது, அது உடலைத் தாக்கும் நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராட தேவையான நோயெதிர்ப்பு சக்தியை உடலுக்கு வழங்குவதோடு, அழற்சியை எதிர்த்துப் போராடவும், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து செல்களைப் பாதுகாக்கவும் உதவும். குறிப்பு: தேன் கலந்த நீரை சர்க்கரை நோய் உள்ளவர்கள் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

எலுமிச்சை நீரின் நன்மைகள்

* எலுமிச்சை நீரில் வைட்டமின் சி அதிகம் உள்ளன. இந்த வைட்டமின் சி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, ஆரோக்கியமான சருமத்திற்கு தேவையான கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது.

* எலுமிச்சை நீரில் உள்ள அமிலத்தன்மை, செரிமானச் சாறுகள் மற்றும் பித்த நீர் உற்பத்தியைத் தூண்டுகிறது; இது உங்கள் உடல் உணவை இன்னும் திறமையாகச் சிதைக்க உதவுவதோடு, வயிற்று உப்புசத்தையும் குறைக்கக்கூடும்.

* எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம், உடலினுள் சிட்ரேட்டாக மாறுகிறது. இது சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்க உதவுகிறது.

* எலுமிச்சை நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்கும் போது, அது ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளலை இயற்கையாகவே குறைக்கிறது. மேலும் இதில் பெக்டின் (pectin) எனும் நார்ச்சத்து உள்ளது; இது வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்த உதவுகிறது.

குறிப்பு: அளவுக்கு அதிகமாக எலுமிச்சை நீரை அருந்தாதீர்கள். இல்லாவிட்டால், அதில் உள்ள அமிலத்தன்மையால் பற்களின் எனாமல் தேய்மானமாகிவிடும்.

இவ்விரண்டில் எது சிறந்தது?

எலுமிச்சை நீர் மற்றும் தேன் கலந்த நீர் ஆகிய இரண்டுமே தனித்துவமான நன்மைகளை வழங்குகின்றன. இவற்றில் எது ஆரோக்கியமானது என்பது ஒருவரது தனிப்பட்ட ஆரோக்கிய தேவைகள் மற்றும் வாழ்க்கை முறை சார்ந்த இலக்குகளைப் பொறுத்தது. இரண்டு பானங்களுமே ஆரோக்கியமானது என்பதால், இரண்டையும் மாறி மாறி அளவாக உட்கொண்டால், இரண்டு நன்மைகளையும் ஒருசேர பெறலாம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker