மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

பழங்களில் மாதுளை அனைத்து காலங்களிலும் கிடைக்கக்கூடியது. கண்களைப் பறிக்கும் அழகான சிவப்பு நிற முத்துக்களைக் கொண்ட மாதுளையில் கலோரிகளும், கொழுப்புக்களும் குறைவு. ஆனால் இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் போன்றவை அதிகம் உள்ளன. அதுவும் இந்த மாதுளையில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ப்ரீ ராடிக்கல்களால் செல்களில் ஏற்படும் பாதிப்பைத் தடுத்து, செல்களுக்கு பாதுகாப்பளிக்க உதவுகின்றன. இது தவிர மாதுளம் பழம் ஏராளமான நன்மைகளையும் உடலுக்கு வழங்குகிறது.
பொதுவாக மாதுளம் பழத்தினுள் உள்ள விதைகளை மட்டும் தான் சாப்பிடுவோம். அதன் தோலை தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் இதன் தோலிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன என்பது தெரியுமா? அதுவும் மாதுளையின் தோலைக் கொண்டு டீ தயாரித்து குடிக்கும் போது, அது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைத்து, கொழுப்பு மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. முக்கியமாக அதில் உள்ள அதிக அளவிலான பாலிஃபீனால்கள் மற்றும் டானின்கள், தமனிகளில் அடைப்பு ஏற்படுவதிலிருந்து பாதுகாத்து, உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகின்றன.
இந்த மாதுளம் பழ தோல் வைத்து தயாரிக்கப்படும் டீயின் நன்மைகள் குறித்து டாக்டர் பிரகாஷ்மூர்த்தி அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது “மாதுளம் பழத்தை LDL கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள், இதய பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடுவது நல்லது என்று பல மருத்துவ ஆராய்ச்சி முடிவுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதனால் இப்பழத்தை சாப்பிட்டுவிட்டு, அதன் தோலை தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் அப்படி செய்யாமல், அந்த தோலை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து வடிகட்டினால், மாதுளம் பழ டீ தயார்.” என்று கூறினார். அதன் பின் அந்த டீயைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளையும் பகிர்ந்து கொண்டார். அந்த நன்மைகள் பின்வருமாறு:
வீக்கத்தைக் குறைக்கும் “மாதுளம் பழ டீயில் பாலிஃபீனால்கள் ஏராளமான அளவில் இருப்பதால், இது உடலினுள் அதிக வீக்கத்தைக் கொண்டவர்கள், அதாவது நீண்ட கால் கால் வலி, மூட்டு வலி உள்ளவர்கள், இதய பிரச்சனை உள்ளவர்கள் தினமும் குடிப்பது மிகவும் நல்லது” என்று டாக்டர் கூறினார்.
செரிமானம் மேம்படும், இரத்த சர்க்கரை கட்டுப்படும் “சிலருக்கு உணவு உண்ட பின் டீ குடிக்கும் பழக்கம் இருக்கும். அப்படி டீ குடித்தால் தான் செரிக்கிறது என்று கூறுவார்கள். அப்படியான பழக்கத்தைக் கொண்டவர்கள் பால் டீ குடிப்பதற்கு பதிலாக மாதுளம் பழ டீயைக் குடித்தால் செரிமானம் சிறப்பாக நடப்பது மட்டுமல்லாமல், உணவு உண்ட பின் சர்க்கரை அளவு சட்டென்று அதிகரிக்காமல் கட்டுப்பாட்டில் இருக்கும்” என்று கூறினார்.
சருமம் பொலிவாகும் “மாதுளம் பழ டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும், டானின்களும் அதிகம் இருப்பதால், சருமம் நன்கு பொலிவாகவும் உதவி புரியும். அதோடு செரிமான சக்தி அதிகரித்து குடல் ஆரோக்கியமும் மேம்படும்” என்று கூறினார். எனவே இதுவரை நீங்கள் மாதுளம் பழ தோலை தூக்கி எறிந்து வந்தால், இனிமேல் அப்படி செய்யாமல், அதைக் கொண்டு டீ தயாரித்து குடித்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள். (பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



