உலக நடப்புகள்புதியவை

12 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் குரு பெயர்ச்சி – திடீர் லக் , ஹம்ச யோகம் யாருக்கு தெரியுமா?

12 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் குரு பெயர்ச்சி - திடீர் லக் , ஹம்ச யோகம் யாருக்கு தெரியுமா?

குரு பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கப்படி நிகழ்ந்திருக்கிறது. திருக்கணித பஞ்சாங்கப்படி குரு பெயர்ச்சி ஜூன் 2 ஆம் தேதி நிகழப்போகிறது. இந்த பெயர்ச்சியின் போது குரு பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு இடம் பெயரவுள்ளார். குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெறுவதால் சில ராசிக்காரர்களுக்கு ஹம்ச யோகத்தை தரப்போகிறது.

நவகிரகங்களில் குரு முழு சுப கிரகம். மனிதர்களின் வாழ்க்கையில் திருமணம், குழந்தை பேறு உள்ளிட்ட சுபகாரியம் நடைபெற குரு பகவானின் அருள் தேவை. அதே போல நல்ல வேலை கிடைக்கவும், பண வருமானம் வரவும், வேலையில் புரமோசன் கிடைக்கவும் குரு பகவானின் அருள் தேவை. குரு பார்த்தாலே பலன் நிச்சயம் உண்டு. அதனால் தான் ‘குரு பார்க்க கோடி நன்மை’ என்று கூறியிருக்கிறார்கள்.

மேஷம் – சுக ஸ்தான குரு

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியால் “சுகமும் சந்தோஷமும் தேடி வரும் பொன்னான காலமாக அமைந்துள்ளது. இந்த குரு பெயர்ச்சியின் மூலம் குரு பகவான் உங்கள் ராசிக்கு 4ஆம் வீடான சுகஸ்தானத்திற்கு குடியேறுகிறார். இதனால் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் நிம்மதியும் பெருக்கெடுக்கும்.

ஹம்ச யோகம் கைகூடி வந்துள்ளதால் குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி, ஒற்றுமையும் சந்தோஷமும் நிலைபெறும். குடும்ப நலனில் அக்கறை கூடும். வீடு, மனை, வண்டி வாகனம் வாங்க வேண்டும் என்ற உங்களுடைய நீண்ட நாள் கனவு நனவாகும். பூர்வீக சொத்துக்கள் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும்.

புதிய வீடு கட்டுவதற்காக எடுத்து வைக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு 8, 10, 12 ஆம் இடங்களின் மீது விழுவதால் நோய்கள் நீங்கும், வேலையில் புரமோசன் கிடைக்கும், வெளிநாடு செல்லும் யோகம் கைகூடி வரப்போகிறது. வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி அல்லது குரு பகவானுக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி, நெய் தீபமேற்றி வழிபடுவது மேலும் நன்மைகளைத் தரும்.

ரிஷபம் – தைரிய குரு

குரு பகவான் உங்கள் ராசியில் தைரியம் வீரிய ஸ்தானமான 3 ஆவது வீட்டில் பயணம் செய்கிறார். உங்களின் தைரியமும், தன்னம்பிக்கையும் உங்களை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சோம்பல் நீங்கி, சுறுசுறுப்பு அதிகரிக்கும். உங்களுக்குள் மறைந்திருந்த தைரியமும், இழந்த தன்னம்பிக்கையும் மீண்டும் அதிகரிக்கும். எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் பிறக்கும்.

தேங்கி நின்ற காரியங்கள் அனைத்திலும் தடைகள் நீங்கி படிப்படியாக மகத்தான வெற்றி கிடைக்கும். இளைய சகோதர, சகோதரிகளின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்கும். அவர்களுடனான உறவு பலப்படும்.புது வேலைக்கும், தொழில், வியாபாரத்திற்கும் முயற்சி செய்யலாம் வெற்றி கிடைக்கும்.

மிதுனம் – தன குரு

குரு பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாவது வீடான தன வாக்கு ஸ்தானத்தில் பயணம் செய்வதால் உங்களின் பண வருமானம் அதிகரிக்கும். பல வழிகளில் இருந்தும் பணம் வந்து உங்களின் பாக்கெட்டை நிரப்பும். செய்யும் தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வருமானம் உயர்ந்து சேமிப்பும் அதிகரிக்கும்.

குருவின் பார்வை ராசிக்கு 6, 8, 10 ஆம் வீடுகளின் மீது விழுவதால், வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு தகுதிக்கேற்ற நல்ல வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய மாற்றம் உண்டாகும். உங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய நீண்ட கால கடன் பிரச்சினைகள் முற்றிலும் தீர வழிகள் பிறக்கும். சமூகத்தில் உங்களது சொல்வாக்கும், செல்வாக்கும் உயரும்.

கடகம் – ஜென்ம குரு

ஜென்ம குரு வனத்தினிலே என்ற பழமொழி உண்டு. கடக ராசிக்காரர்களுக்கு ஜென்ம குரு உச்ச கட்ட வளர்ச்சியை கொடுக்கும் ஏனென்றால் குரு பகவான் கடக ராசியில் உச்ச பலத்தோடு பயணம் செய்யப்போகிறார். குருவின் பயணமும் பார்வையும் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் சிறப்பான பலன்களை அள்ளித் தருவார்.

ஹம்ச யோகத்தோடு குரு பகவானின் பார்வையும் சாதகமான இடமான 5, 7, 9 ஆம் வீடுகளின் மீது விழுவது சிறப்பு. நீண்ட நாட்களாக நோய்களால் சிரமப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். ரொம்பவே புத்துணர்ச்சியோடு காணப்படுவீர்கள். சுப காரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கி, குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் கோலாகலமாக நடைபெறும். பொருளாதார ரீதியாக வளர்ச்சி அதிகரிக்கும். பண வருமானம் வழக்கத்தை விட அதிகரிக்கும். சமுதாயத்திலும், நீங்கள் பணிபுரியும் இடத்திலும் உங்களுக்கான மதிப்பு, மரியாதை மற்றும் அந்தஸ்து கூடும். வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி, நெய் தீபமேற்றி வழிபடுவது மேலும் நன்மைகளைத் தரும்.

சிம்மம் – விரைய குரு

சிம்ம ராசிக்காரர்களுக்கு 12 ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் அமர்ந்து பயணம் செய்யும் குரு பகவான் நிறைய சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். வெளிநாட்டில் படிக்கவும், வேலைக்காகவும் முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். உயர்கல்வி கற்க முயற்சி செய்பவர்களின் முயற்சிகளுக்கு நல்ல வெற்றி கிடைக்கும்.

விரைய குரு என்பதால், கையில் இருக்கும் பணத்தை தேவையற்ற செலவுகளை செய்யாமல், வீடு கட்டுதல், நிலம் வாங்குதல் போன்ற நல்ல காரியங்களுக்காக செலவு செய்வது அவசியம். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். இந்த குரு பெயர்ச்சி காலத்தில் புகழ்பெற்ற ஆலயங்களுக்கு ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்வீர்கள். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி, நெய் தீபமேற்றி வழிபடுவது மேலும் நன்மைகளைத் தரும்.

கன்னி – லாப குரு

லாப ஸ்தானமான 11 ஆம் வீட்டில் குரு பகவான் பயணம் செய்வதால், திடீர் பண வருமானம் வந்து உங்களை திக்கு முக்காட வைக்கும். எதிர்பாராத பக்கமிருந்து எல்லாம் பணம் வந்து பாக்கெட்டை நிறைக்கும். உங்களின் பொருளாதார நிலை உச்சத்தை தொடும். வீடு, மனை உள்ளிட்ட புதிய சொத்துக்கள் வாங்கலாம். பெண்களுக்கு ஆடை, ஆபரணங்கள் வாங்குவதற்கான யோகம் கைகூடி வரும்.

தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இல்லாத அளவிற்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகள் லாபத்தைக் கொடுக்கும்.

துலாம் – தொழில் குரு

குரு பகவான் பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் பயணம் செய்வதால் பதவி உயர்வும், தொழில் வியாபாரத்தில் வளர்ச்சியும் வெற்றியும் கிடைக்கும். ‘பத்தில் குரு பதவி உயர்வை கொடுப்பார்’ என்ற ஜோதிடப் பழமொழிக்கு ஏற்ப மாற்றங்கள் வரும். ஹம்ச யோகத்தால் வேலையில் இருப்பவர்களுக்கு கடின உழைப்பிற்கான அங்கீகாரம், புதிய பொறுப்புகள் மற்றும் பதவி உயர்வு, சம்பள உயர்வும் தேடி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும், லாபம் கணிசமாக அதிகரிக்கும். புதிய தொழில் அல்லது கிளைகளைத் தொடங்க நினைப்பவர்களுக்கு இது சாதகமான காலம். பங்குச் சந்தையில் திட்டமிட்டு முதலீடு செய்ய நல்ல லாபம் கிடைக்கும். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி அல்லது குரு பகவானுக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி, நெய் தீபமேற்றி வழிபடுவது மேலும் நன்மைகளைத் தரும்.

விருச்சிகம் – பாக்ஸ் ஸ்தான குரு

குரு பகவான் 9 ஆம் வீடான பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். பாக்ய குரு பலவித பாக்கியங்களை தரப்போகிறார். குருவின் பார்வையும், பயணமும் உங்களுக்கு ரொம்பவே சாதகமாக இருக்கிறது. குரு பார்க்க கோடி நன்மை என்பது போல, உங்கள் ராசியை பார்க்கும் குருவினால், இதுநாள் வரை தடைப்பட்ட திருமணங்கள் சுபமாக நடைபெறும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும்.

படித்து முடித்து விட்டு வேலை தேடுபவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சம்பள உயர்வு மற்றும் புரமோசன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளுக்கு வருமானம் பல மடங்காக அதிகரிக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று இறை வழிபாடு செய்யும் ஆன்மீகப் பயணங்கள் அமைப்பீர்கள்.

தனுசு – அஷ்டம குரு

குருபகவான் உங்கள் ராசிக்கு 8 ஆம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்வதால் உங்களுடைய கஷ்டங்கள், கவலைகள் தீரப்போகிறது. பணம், விலை உயர்ந்த பொருட்களை வைத்திருப்பவர்கள் கவனமாகவும், விழிப்புணர்வுடனும் பயணிக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. வேலையில் கூடுதல் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் செயல்படுவது அவசியம்.

உங்களிடம் ஒப்படைக்கப்படும் பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல், தள்ளிப் போடாமல் உடனுக்குடன் செய்து முடிப்பது நல்லது. குலதெய்வ கோவிலுக்கு சென்று வாருங்கள். வியாழக்கிழமையில் குரு பகவான் மற்றும் தட்சிணாமூர்த்தி வழிபாடும் உங்களுக்கு வரும் தடைகளை நீக்கி நன்மைகளைத் தரும்.

மகரம் – களத்திர ஸ்தான குரு

குரு பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்களை தரப்போகிறது. “குருவின் நேரடிப் பார்வையால் தொட்டதெல்லாம் பொன்னாகும் பொற்காலம்! பிறந்துள்ளது. 7 ஆம் வீட்டில் அமர்ந்து மகர ராசியை பார்க்கும் குருவினால், சுப காரியங்கள் நிறைய நடைபெறப்போகிறது. ஹம்ச யோகம் கைகூடி வந்துள்ளதால் திருமண வயதில் உள்ளவர்களுக்கு மிகச் சிறந்த வரன் அமைந்து சுபகாரியம் கைகூடும். கூட்டுத் தொழில் சிறப்படையும். கணவன்-மனைவி இடையே அன்யோன்யம் கூடும். குருவின் பலத்தால் நீங்கள் தொட்ட காரியங்கள் யாவும் பொன்னாகும். உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளில் வெற்றி கிடைக்கும்.

கும்பம் – ருண ரோக சத்ரு ஸ்தானம்

கும்ப ராசிக்காரர்களுக்கு குரு பகவான் ஆறாம் வீட்டில் பயணம் செய்வதால், நோய், எதிரி தொல்லை தீரும். வம்பு வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும், பண வருமானம் பெருகும். இதுநாள் வரைக்கும் உங்களை ஆட்டிப்படைத்த கடன்கள், தீராத நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். எதிரிகளால் உண்டான மறைமுகப் பிரச்சினைகள் அனைத்தும் முற்றிலும் நீங்கி வெற்றி மீது வெற்றி வந்து சேரப்போகிறது. புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும். வியாபாரத்தில் தேக்க நிலை மாறி தொழில் நல்ல முறையில் பெருகும். எதிர்பாராத வழிகளில் பண வருமானம் அதிகரித்து வங்கியில் சேமிப்பு உயரும்.

மீனம் – புத்திர ஸ்தான குரு

மீன ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு 5ஆம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். உங்கள் பூர்வ புண்ணிய பலன்கள் வேலை செய்யத் தொடங்கும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள், சுப விசேஷங்கள் தடையின்றி நல்லபடியாக நடைபெறும்.நீண்ட நாட்களாக குழந்தைக்காக காத்திருக்கும் தம்பதியினருக்கு குருவின் பார்வையால் புத்திர யோகம் கைகூடும். பிள்ளைகளால் பெருமை அதிகரிக்கும். நல்ல வேலை வாய்ப்புகள் வந்து கதவைத் தட்டும். வருமானம் பல வழிகளிலும் படிப்படியாக அதிகரித்து,மகிழ்ச்சியும், நிம்மதியும் ஏற்படும். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி அல்லது குரு பகவானுக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி, நெய் தீபமேற்றி வழிபடுவது மேலும் நன்மைகளைத் தரும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker