ஃபேஷன்புதியவை

செயற்கை நகைகள் பெண்களுக்கு ஏற்படுத்தும் ‘அலர்ஜி’

அழகான, விதவிதமான டிசைன்களை கொண்ட நகைகளை அணிந்து அழகு பார்ப்பதற்கு பெண்கள் ஆசைப்படுவார்கள். எல்லாவிதமான நகைகளும் எல்லோருடைய சருமத்திற்கும் ஒத்துக்கொள்ளாது. குறிப்பாக செயற்கை நகைகள் பலருடைய சருமத்திற்கு பொருந்தாது.

சில காதணிகள் அல்லது கழுத்தில் அணியும் ஆபரணங்கள் சருமத்தில் அரிப்பு, எரிச்சலை ஏற்படுத்தும். சொறி பிரச்சினையும், சருமத்தில் தழும்புகள், திட்டுகள், சிவப்பு நிறத்தில் கட்டிகள் போன்றவையும் தோன்றக்கூடும். அணியும் ஆபரணங்களில் வெள்ளி போல் வெண்மை நிறம் கொண்ட கனிமமான நிக்கல் சேர்க்கப்பட்டிருப்பது ஒவ்வாமை ஏற்படுவதற்கு காரணமாக இருக்கலாம். அதனால் காதணியில் இடம்பெறும் கொக்கிகள், பெல்ட்டில் அணியும் ‘பக்கிள்கள்’, பேண்டில் இடம்பெறும் ஜிப்புகள், கழுத்தில் அணியும் ஆபரணங்களில் சேர்க்கப்படும் நிக்கல் நேரடியாக சருமத்துடன் தொடர்பில் இருப்பதை தவிர்க்க வேண்டும்.

புதிதாக நகை அணிந்ததும் 12 முதல் 48 மணி நேரத்திற்குள் ‘நகை ஒவ்வாமை’ பிரச்சினைக்கான அறிகுறிகளை கண்டறிய முடியும். சருமம் சிவத்தல், சொறி, அரிப்பு, எரிச்சல், புள்ளிகள், திட்டுகள், வீக்கம், கொப்பளங்கள், வியர்வை, சீழ் வடிதல் போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டால் கவனமுடன் செயல்படுவது அவசியமானது.

லெதர் ஆபரணங்கள்: நிக்கல் சேர்க்கப்பட்ட ஆப ரணங்களை அணிவதால் ஒவ்வாமை ஏற்படுவது உறுதியானால் அத்தகைய ஆபரணங்களை தவிர்த்துவிட வேண்டும். அதற்கு மாற்றாக ‘லெதர்’, பிளாஸ்டிக்கில் தயாராகும் ஆப ரணங்களை உபயோகிக்கலாம். உலோகத்துக்கு மாற்றாக பிளாஸ்டிக் அல்லது லெதர் பொருட்களை பயன்படுத்துவது சருமத்திற்கு நலம் சேர்க்கும்.

சருமத்தில் ஈரப்பதம்: ஆபரணங்கள் அணியும் பகுதியில் ஒவ்வாமை பிரச்சினை ஏற்பட்டால் ஈரப்பதமான மாய்ஸ்சரைசர் அல்லது லோஷன்களை உபயோகிக்கலாம். சருமத்தில் சொறி, அரிப்புகளை நீக்கவும், உலர்ந்த சரும திட்டுக்களை ஈரப்பதமாக வைத்திருக்கவும் ‘காலமைன் லோஷனை’ பயன்படுத்தலாம். லோஷன் தடவுவதன் மூலம் சருமத்தின் உள் அடுக்குகள் பாதுகாப்பாக இருந்தால் வெளிப்புற அடுக்குகளில் தொற்று ஏற்படுவதை தவிர்த்துவிடலாம்.

கற்றாழை: சரும ஒவ்வாமை சார்ந்த பாதிப்புகளுக்கு கற்றாழை அருமருந்து. அதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள் எத்தகைய சரும பிரச்சினைகளையும் குணப்படுத்தும் சக்தியை கொண்டுள்ளன. ஒவ்வாமை பிரச்சினையில் இருந்தும் சருமத்தை பாதுகாக்கும் தன்மை கொண்டது. சருமத்தை மென்மையாக வைத்திருக்கவும் உதவும்.

நிக்கலை தவிர்த்தல்: சாக்லெட், நட்ஸ் போன்ற உணவுப்பொருட்களில் நிக்கலை உள்ளடக்கிய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. மிகவும் மென்மையான உணர்திறன் கொண்ட சருமம் உடையவராக இருந்தால் இத்தகைய உணவு பொருட்களை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் ஒவ்வாமை தலைதூக்கும்.

நகைகளை தவிர்த்தல்: மோதிரங்கள், கம்மல்கள், வளையல்கள், நெக்லஸ்கள் போன்ற கவரிங் நகைகளை சிறிது நேரம் அணிந்தாலே ஒவ்வாமை பாதிப்பை எதிர்கொண்டால் கூடுமானவரை அவற்றை அணிவதை தவிர்க்க வேண்டும். அவற்றுக்கு மாற்றாக பிளாட்டினம் போன்ற குறைவான எதிர்வினை புரியும் உலோகத்தை உபயோகிக்கலாம். ஆரம்பத்திலேயே ஒவ்வாமை பாதிப்பை கண்டறிந்துவிட்டால் விரை வாக குணப்படுத்திவிடமுடியும். இல்லாவிட்டால் சீழ் நிறைந்த கொப்பளங்களாக மாறக்கூடும். இதற்கு தோல் நிபுணரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker