உலக நடப்புகள்புதியவை

மழைக்காலத்தில் வீட்டில் மின் விபத்துகள் ஏற்படாமல் தவிர்ப்பது எப்படி?

பருவமழை காலத்தில் புயல் மற்றும் வெள்ளத்தால் ஏற்படும் மின் விபத்துகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது மிகவும் அவசியமாகும். எனவே, விபத்துகளை தவிர்க்க கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றவும்.

* மின்சார ஒயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்றுள்ள மின் ஒப்பந்தக்காரர் மூலமாக மட்டுமே செய்ய வேண்டும்.

* ஐ.எஸ்.ஐ. முத்திரை பெற்ற தரமான மின்சார சாதனங்களை மட்டுமே வாங்கி பயன்படுத்துங்கள்.

* மின்சார பிளக்குகளை பொருத்துவதற்கு முன்னரும், எடுப்பதற்கு முன்னரும் சுவிட்சை ஆப் செய்ய வேண்டும்.

* குளிர்சாதன பெட்டி, கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக மின்சாதனங்களுக்கு நில இணைப்புடன் கூடிய மூன்று பின் சாக்கெட் உள்ள பிளக்குகள் மூலமாக மட்டுமே மின் இணைப்பு கொடுங்கள்.

* 30 எம்.ஏ. ஆர்.சி.சி.பி. அல்லது ஆர்.சி.பி.ஓ. (மின் கசிவு தடுப்பான்)யை வீட்டில் உள்ள மெயின் சுவிட்ச் போர்டில் பொருத்தி மின்கசிவினால் ஏற்படும் மின் விபத்தை தவிர்த்திடுவீர்.

பழுதடைந்த சாதனங்கள்

* உடைந்த சுவிட்சுகளையும், பிளக்குகளையும் உடனே மாற்றி விடுங்கள். பழுதடைந்த மின்சார சாதனங்களை பயன்படுத்தாதீர்கள்.

* கேபிள் டி.வி. ஒயர்களை மேல்நிலை கம்பிகளுக்கு அருகில் கொண்டு செல்லாதீர்கள்.

* ஒவ்வொரு வீட்டிற்கும் சரியான நில இணைப்பு (எர்த் பைப்) போடுவதுடன் அதனை குழந்தைகள் மற்றும் விலங்குகள் தொடாத வகையில் அமைத்து சரியாக பராமரிக்கவும்.

* சுவிட்சுகள், பிளக்குகள் போன்றவற்றை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் அமைக்க வேண்டும்.

* 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உங்கள் வீட்டின் ஒயரிங்குகளை சோதனை செய்து தேவைப்பட்டால் மாற்றிக்கொள்ளுங்கள்.

* மின்சார கம்பத்திற்காக போடப்பட்டுள்ள ஸ்டே ஒயர் மீது அல்லது மின்கம்பத்தின் மீது கொடி கயிறு கட்டி துணி காய வைக்கும் செயலை தவிர்க்கவும்.

* குளியறையிலும், கழிப்பறையிலும் ஈரமான இடங்களிலும் சுவிட்சுகளை பொருத்தாதீர்கள்.

* சுவரின் உள் பகுதியில் மின்சாரத்தை எடுத்து செல்லும் ஒயர்களுடன் கூடிய பி.வி.சி. பைப்புகள் பதிக்கப்பட்டு இருந்தால் அந்த பகுதிகளில் ஆணி அடிப்பதை தவிர்க்கவும்.

* மின் இணைப்புகான கருவிகளை பயன்படுத்தும் போது அவைகளில் பழுதுகள் ஏதும் இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.

* மின் கம்பத்திலோ அவற்றை தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளை கட்டாதீர்கள்.

* மின் கம்பங்களை பந்தல்களாக பயன்படுத்த கூடாது. அதன்மீது விளம்பர பலகைகளை கட்டக்கூடாது.

மழைக்காலங்களில்

* மழைக்காலங்களில் மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மின்பகிர்வு பெட்டிகள் ஆகியவற்றின் அருகே செல்லாதீர்கள்.

* மழையாலும், பெருங்காற்றாலும் அறுந்து விழுந்த மின்கம்பி அருகே செல்லாதீர்கள். உடனே மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் அளியுங்கள்.

* மேல்நிலை மின்சார கம்பிகளுக்கு அருகில் கட்டிடங்களை போதுமான இடைவெளி விட்டு கட்ட வேண்டும். மேலும் விவரங்களுக்கு மின்சார வாரியம் மற்றும் மின்சார ஆய்வுத்துறை அலுவலர்களை அணுகவும்.

* தமிழ்நாடு மின்வாரிய மின் மாற்றிகள் மற்றும் துணை மின் நிலையத்திற்காக போடப்பட்டுள்ள வேலியின் அருகில் சிறுநீர் கழிக்க செல்லாதீர்கள்.

* மின்வாரியத்தின் மேல்நிலை மின்சார கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு மின்சார வாரியத்தின் அலுவலர்களை அணுகவும்.

* அவசர நேரங்களில் மின் இணைப்பிணை துண்டிக்கும் வகையில் மின் கருவிகளின் சுவிட்சுகளின் இருப்பிடம் அமைய வேண்டும்.

* மின் சாதனங்கள் உபயோகத்தில் இல்லாத பட்சத்தில் சுவிட்சை ஆப் செய்து வைக்கவும்.

தீ விபத்து ஏற்பட்டால்…

* மின்சார தீ விபத்து ஏற்பட்டால் தண்ணீர் கொண்டு அணைக்க முயற்சிக்க வேண்டாம். மின்சார தீவிபத்துக்களுக்கான தீயணைப்பான்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். குறிப்பாக உலர்ந்த மணல், கம்பளி போர்வை, உலர்ந்த ரசாயனபொடி, கரியமில வாயு போன்ற தீயணைப்பான்களை பயன்படுத்தலாம்.

* தீ விபத்து ஏற்பட்டால் உடனே மெயின் சுவிட்சை நிறுத்தி விட வேண்டும்.

* மின்சார பெட்டி அருகில் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும் பொழுது அதன் அருகில் செல்ல வேண்டாம். மின்வாரிய அலுவலகத்திற்கு உடனே தகவல் அளிக்கவும்.

* எந்த மின் இணைப்பிலும் பளு ஏற்ற கூடாது. சுவிட்ச் மற்றும் பியூஸ் போன்றவைகளை மாற்றும் போது சரியான அதே அளவு திறன் கொண்டவைகளையே பொருத்த வேண்டும்.

இடி-மின்னல்

* இடி, மின்னலின் போது வெட்ட வெளியில் இருக்காதீர்கள். கான்கிரீட் கூரையிலான பெரிய கட்டிட வீடு போன்ற பெரிய கட்டிடங்களிலோ, உலோகத்தால் மேலே மூடப்பட்ட பஸ், கார், வேன் போன்ற வாகனங்களிலோ தஞ்சமடையுங்கள்.

* இடி, மின்னலின் போது குடிசை வீட்டிலோ, மரத்தின் அடியிலோ, பஸ் நிறுத்த நிழற்குடையின் கீழோ தஞ்சம் புகாதீர்கள்.

* தஞ்சம் அடைய அருகில் எதுவும் இல்லாத பட்சத்தில் மின்கம்பிகள், மின் கம்பங்கள், மரங்கள், உலோக கம்பி வேலி போன்றவை இல்லாத தாழ்வான பகுதிகளை தேர்ந்தெடுங்கள்.

* இடி, மின்னலின் போது தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளை விட்டு அகலுங்கள். டி.வி., மிக்சி, கிரைண்டர், கணினி, தொலைப்பேசி போன்றவற்றை பயன்படுத்தாதீர்கள். மேலும், திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் இருக்காதீர்கள்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker