எடிட்டர் சாய்ஸ்

6 வருடக் காதல்! இப்படி பிரியும் என்று நினைக்கவில்லை!

ஆறு வருடக் காதல், ஆரம்பத்தில் இரண்டு வீட்டிலுமே எதிர்ப்பு இருந்தது கல்லூரி முதல் வருடத்தில் அவனை பார்த்ததிலிருந்து நம்ம சேரணும்… இந்த வாழ்க்கப் பூரா உன்கூடத்தான் வாழணும் என்று நினைத்துக் கொள்வேன், இரண்டாம் வருடத்தில் அவனே எனக்கு ப்ரோப்போஸ் செய்தான்.

நான் கூட தோழிகள் மூலமாக அவனை நான் ஒரு தலையாக காதலிப்பது தெரிந்து கொண்டு என்னை கலாய்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன். பிறகு தான் மெல்ல அவன் உண்மையிலேயே என்னை காதலிக்கிறேன் என்று தெரிந்து கொண்டேன், வீட்டிற்கு தெரிந்தது…. அவனுடன் பேசக்கூடாது என்று எதிர்த்தார்கள் அடித்தார்கள் வீட்டை விட்டு ஓடிப்போய் விடலாம் என்றெல்லாம் ப்ளான் செய்தோம்.

இப்போது அதை நினைத்துப் பார்க்கும் போதெல்லம ஏதோ விபத்து போலத்தான் இருக்கிறது. எல்லாமே ஒரு நொடியில் அப்படியே கடந்து விட்டேன். இந்த விபத்து நிகழாமல் இருந்திருந்தால் அவனை நான் பார்க்காமல் இருந்திருந்தால் அவன் காதலைச் சொன்ன போது ஏற்றுக் கொள்ளாமல் இருந்திருந்தால் என்று யோசிக்கிறேன்….



வாழ்க்கை முழுவதும் வேண்டும் என்று நினைத்தேன் அல்லவா? கடவுள் கொடுப்பது போல் கொடுத்து விட்டு என்னிடமிருந்து பிடுங்கிக் கொண்டார். இதைப்பற்றி நினைக்கும் போதெல்லாம் கண்ணீர் அருவியாய் கொட்டுகிறது. ஒரு விபத்து எங்கள் வாழ்க்கையில் விளையாடிச் சென்று விட்டது.

அவன் வீடு :

கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது நான் தான் அவனிடம் வலியச் சென்று பேசுவது, வம்பிழுப்பது என சேட்டை செய்து கொண்டிருப்பேன். ஒரு முறை அவனைத் தேடி வீட்டிற்கே சென்று விட்டேன்.

பதறியடித்துக் கொண்டு வெளியே வந்தான். லூசா நீ இங்கே ஏன் வந்த வீட்ல அப்பா இருக்காரு மொதோ போ என்று துரத்தினான். அப்போ மெஸேஜுக்கு ரிப்ளை பண்ணு என்றேன்…. ரிப்ளை அனுப்ப கொஞ்சம் லேட் ஆனா உடனே கிளம்பி வந்திடுவியா?

சிரித்துக் கொண்டே திரும்பினேன். அவன் மீது அவ்வளவு ப்ரியங்கள்.

வீட்டில் :

எனது நடவடிக்கைகளை பார்த்தே காதல் வயப்பட்டிருக்கிறேன் என்பதை யூகித்தார்கள். தொடர்ந்து எனது மொபைல் போன், பேக் எல்லாம் செக் செய்ய வசமாக மாட்டிக் கொண்டேன். அப்பா தலைமையில் விசாரணை நடந்தது. என்னோடு சேர்த்து அக்காவும் குற்றவாளியாக்கப்பட்டார்.

நீ தான் இதுக்கெல்லாம் உடந்தையா.ஊமையாட்டம் இருந்துட்டு ரெண்டு பேரும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க….



எல்லாம் உன்னால தான் :

பையன பாக்கணும் நாளைக்கு வீட்டுக்கு வர சொல்லு என்றுவிட்டார். அவன் விஷேசத்திறாகாக என்று சொல்லி குடும்பத்துடன் வெளியூர் சென்றிந்தான். இல்லப்பா அவன் ஊருக்கு போயிருக்கான் என்றேன்,

ஏதோ நான் தான் ப்ளான் செய்து வரவேண்டாம் என்று சொன்னது போல அப்பா நினைத்துக் கொண்டார் நாளைக்கு பத்துமணிக்கு இங்க பாக்க வரணும். என்று கறாராக சொல்லிவிட்டுச் சென்றார். அம்மா ஏன்ம்மா அப்பா இப்டி பண்றாரு நிஜமாலுமே அவன் ஊர்ல இல்ல நீயாவது அப்பாட்ட பேசி புரியவை என்றேன்.

வீட்டுச் சிறை :

வாக்குவாதம் வளர்ந்தது….. அப்பா என்னை அறைந்தேவிட்டார். கோபித்துக் கொண்டு பாட்டி வீட்டிற்கு சென்று விட்டேன். அதன் பிறகு ஒரு வாரம் வீட்டிற்கே செல்லவில்லை, கல்லூரிக்கும் செல்லவில்லை.

ஊரிலிருந்து வந்தவன், என் போனுக்கு மெசேஜ், கால் செய்திருக்கிறான் கல்லூரிக்கும் நான் வரவில்லை என்றதும் கிளம்பி வீட்டிற்கே வந்து விட்டான். நடுவீட்டில் வந்து என் பெயரைச் சொல்லி கத்த எல்லாரும் வந்து விட்டார்கள்.

இப்போ அவள நான் பாக்கணும் என்ன பண்ணீங்க ரெண்டு நாள் பொருத்திருந்தா நானே வந்து பாத்திருப்பேன், ஒரு வாரமா அவ போன் ஸ்விட்ச் ஆஃப்னு இருக்கு காலேஜுக்கும் வரல என்று கேட்டு அங்கே சண்டையிட்டிருக்கிறான். அதில் அப்பாவுக்கும் அவனுக்கும் கைகலப்பு ஆகியிருக்கிறது.

கல்யாணம் பண்ணிக்கலாம் :

ஒரு மணி நேரத்தில் கல்லூரி மற்றும் ஏரியா நண்பர்கள் வீட்டு வாசலில் குவிந்து விட்டார்கள், எப்படி அடிக்கலாம் போலீஸில் புகார் அளிப்போம் என்று கூட்டமாக நின்று சத்தம் போட ஆரம்பித்துவிட்டார்கள்.



அக்கா எனக்கு தகவலைச் சொல்ல அடித்து பிடித்து வீட்டிற்கு ஓடினேன். என்னைப் பார்த்த அதிர்ச்சியில் அவனுக்கு வார்த்தையே வரவில்லை…. எங்கடி போன? பயந்துட்டேன் தெரியுமா என்று சொல்லும் போதே அவன் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது அவன் அழுகை என்னை சுக்குநூறாய் உடைத்திருந்தது.

யார் எதிர்த்தாலும் சரி எல்லாரையும் எதிர்த்து இவனை கரம் பிடிக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன்.

என்ன ப்ளான்? :

நிலைமை சற்று சீரானது வழக்கமாக கல்லூரிக்கு சென்று வந்து கொண்டிருந்தோம். படிப்பு முடியும் வரை எதுவும் முடிவெடுக்க வேண்டாம் என்று சொல்லிக் கொண்டோம். படிப்பு முடிந்தது இருவருக்கும் வேலை கிடைத்தது. அன்று இருவருமே வீட்டை விட்டுச் செல்வது என்று முடிவு செய்துவிட்டோம்.

எல்லாம் பேக் செய்து தயாராய் எடுத்து வைத்திருந்தேன். எல்லாரும் படுத்தபிறகு மெசேஜ் அனுப்பு வண்டியெடுத்துட்டு வரேன், நீ எப்டியாவது வெளிய மட்டும் வந்துரு அதுக்கப்பறம் நான் பொறுப்பு என்றான். பதினோறு மணியிருக்கும் அவனுக்கு மெசேஜ் அனுப்பி விட்டேன். தீடீரென்று அம்மா எழுப்பினார் அதிர்ச்சியுடன் எழுந்தேன்.

தேவாலயம் :

அவர்களின் முறைப்படி மறு நாள் சர்ச்சில் மோதிரம் மாற்றிக் கொண்டோம். நண்பர்கள் ஒரு சிலர் வந்திருந்தார்கள். ஒரு மணி நேரத்தில் எல்லாரும் கிளம்ப நானும் அவனு மட்டும் சர்ச்சில் இருந்தோம். அமைதியாக கண்ணை மூட எதோ தவறு செய்து விட்டோம், பெற்றவர்களுக்கு துரோகம் செய்துவிட்டோம், அவசரப்பட்டுவிட்டோம் என்று தோன்ற ஆரம்பித்தது.



மன அழுத்தம் :

என்னைக் காணாமல் வீட்டிலிருந்து போன் வந்து கொண்டேயிருந்தது அக்காவிற்கு மட்டும் திருமணம் செய்து கொண்டோம் என்று தகவல் அனுப்பினேன், அவ்வளவு தான் அதன் பிறகு எந்த போனும் வரவில்லை. இருவரும் சம்பளத்தில் வாழ்க்கையை நடத்தலாம் என்று வந்து விட்டபடியால் பெரிதாக எந்த பணம் எடுத்துக் கொண்டு வரவில்லை அவனும் நானும் பிரிந்து நண்பர்களின் அறையில் சில நாட்கள் வாழலாம் என்று முடிவெடுத்திருந்தோம்.

அந்த வீட்டில் நானும் தோழியும் மட்டும் தான் இருந்தோம். அவளும் வேலைக்கு கிளம்பிச் சென்று விட நாலு சுவற்றுக்குள் பைத்தியம் பிடித்தது போல் இருந்தது. ஒரு பக்கம் பெரிய தவறு செய்துவிட்டோம் என்ற குற்ற உணர்வு வேறு என்னை வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது.

உன்னைய இப்பவே பாக்கணும் :

வேறு வழியில்லை நாம் கிளம்பிச் சென்றுவிடலாம். அவன் இருக்குமிடத்திற்கு கிட்டதட்ட 45 நிமிடங்கள் பயணிக்க வேண்டும், மாலையில் நானே வருகிறேன் என்று சொல்ல சொல்ல கேட்காமல் கிளம்பிச் சென்றேன். அடம் பிடித்ததை அடுத்து மெயின் ரோட்டில் நிற்கிறேன் வா என்று விட்டான். என்ன நினைத்தேனோ தெரியவில்லை எதிர் சாலையில் என் உயிர் மட்டும் தனியாய் நிற்பது போலத் தோன்றியது பிடித்துக் கொள்ள வேகமாக சாலையை கடக்க ஆரம்பித்தேன்….. ஏய் நில்லு என்று அவனும் என்னை நோக்கி வந்தான்.

விபத்து :

அவ்வளவு தான் நினைவில் இருக்கிறது, எனக்கு சரியான் அடி தலை மற்றும் காலில் பலத்த சேதம். கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை கோமாவில் இருந்திருக்கிறேன். தினமும் என்னருகில் உட்கார்ந்து வயலின் வாசித்துக் கொண்டிருப்பானாம் மருத்துவர்கள் சொன்னார்கள். கடைசி ஒரு வாரமாத்தான் ஆளே வர்ரதில்ல ஒரு பொண்ணு மட்டும் ஈவ்னிங் மேல வந்து இருப்பா என்றார்கள்.

என்ன குறை :

தலையில எந்த ப்ராளமும் இல்ல, கால்ல தான்…. ஒரு மாசத்துல சரிஆகிடும்ல டாக்டர் என்றேன். இல்லம்மா நடக்குறதே கஷ்டம். மொதோ பேலன்ஸ் பண்னி நிக்க முடியுதான்னு பாருங்க என்றார். ஒரு பக்கம் நர்ஸ் இன்னொரு பக்கம் தோழி பிடித்துக் கொள்ள இடது கால் ஊன்றி நின்றேன் அடுத்த அடி வலது கால் எடுத்து வைக்க வலி சுருக்கென்றது. அதைவிட வலது தரைக்கு எட்டவுமில்லை.

மெல்ல அப்டித்தான் கொஞ்சம் ட்ரை பண்ணுங்க என்றார் ஆனால் என்னால் எடுத்து வைக்க முடியவில்லை. பெயருக்கு கால் என்று சொல்லி என் உடலுடன் ஒட்டிக் கொண்டிருந்ததே தவிர அதனை என்னால் கண்ட்ரோல் செய்ய முடியவில்லை. என்னால கால திருப்பவே முடியல டாக்டர் என்றேன்.



எங்க அவன் ? :

மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்து அழைத்து வந்தார்கள். எங்க அவன்? ஹாஸ்பிட்டள்ல கூட என்னைய வந்து பாக்கல உன் கூடவே ஹாஸ்பிட்டள்ளேயே தான் இருந்தான். அப்பறம் அவன் தான், எனக்கு இங்க இருந்தா பயித்தயம் பிடிச்சிரும் போல கொஞ்ச நாள் வெளிய இருக்கேன்னு சொல்லிட்டு போனான் என்றார்கள்.

அதன் பிறகு பல நண்பர்கள் உதவியுடன் அவன் எங்கிருக்கிறான் என்பதை அறிந்து தொடர்பு கொண்டு வரச் சொன்னோம். வருவதாய் சொல்லி இரண்டு நாட்கள் இழுத்தடித்து ஒரு நாள் வந்தான். நிறைய எதிர்ப்பார்ப்புடன் காத்திருந்தேன்.

உசுர எடுக்காத :

இப்போ உனக்கு என்ன வேணும் ஏன் போன் மேல போனா பண்ணி டார்ச்சர் பண்ற…. அதான் சரி ஆகிடுச்சுல்ல திருப்பி ஏன் என் உசுர எடுக்குற என்றான் . தூக்கி வாரிப்போட்டது. என்னடா சொல்ற என்னை ஆசையா பாக்க வருவேன்னு நினச்சா இப்டி பேசுற ? உன்னைய நம்பிதான வந்தேன். மொதோ இப்டி குழந்ததனமா பேசுறத நிறுத்து. என்னா ஆவூன்னா உன்னை நம்பி வந்தேன், நீ தான் என் உசுருன்னு சொல்லிட்டு டயலாக் விட்டுட்டு இருக்க? மெச்சூர்டா பேசு மோதோ. அவன் பேச்சில், நடவடிக்கையில் எல்லாம் மாற்றங்கள் தெரிந்தது.

என்ன காரணம் :

அவனின் இந்த பேச்சை, பிரிவை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. சிலர் அவனின் அப்பாவிற்கு நெஞ்சு வலி அவன் பயந்து விட்டான் என்றார்கள். சிலர் வேலை செய்யும் இடத்தில் புதிய கேர்ள் ஃபிரண்ட் கிடைத்திருப்பாள் என்றார்கள். நீ தான் எனக்கு வேணும்…. எனக்கு இப்டி ஆனனாலயா என்னைய வேண்டாம்னு சொல்ற இப்போது வெறுத்து ஒதுக்குறதுக்கு எனக்கு ரீசன் சொல்லு என்றேன், அவனிடம் பதில் இல்லை. இஷ்டமில்ல, பிடிக்கல விட்டுப் போய்டு இதைத் தான் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தான்…. வெறுத்து ஒதுக்கும் இடத்தில் வலுக்கட்டாயமாக ஒட்டிக்கொள்ள எனக்கும் விருப்பமில்லை. சத்தியம் செய்தேன் இனி அவனிடம் வரமாட்டேனென்று.



வாழ்க்கை மாறியது :

எதேதோ மாற்றங்கள்…. காதலித்தவனை நம்பி இனி என் வாழ்க்கை அவன் தான் என்று நினைத்துக் கொண்டிருந்தால் எளிதாக என்னை விட்டுப் போ என்கிறான். அழுத்தமாக காரணங்களையும் கேட்டு பெற முடியவில்லை. எனக்கு பணியானை வழங்கிய நிறுவனத்தில் விவரத்தை சொன்னேன்…. வீட்டிலிருந்தே வேலை பார்க்க முடியுமா என்று கேட்டேன். நேர்முகத்தேர்வு வந்து கலந்து கொள்ளச் சொன்னார்கள் மற்றும் சில அசைன்மெண்ட்கள் செய்யச் சொல்லிக் கொடுத்தார்கள். வெற்றிகரமாய் செய்து முடிக்க…. வீட்டிலிருந்தே பணியாற்றத் துவங்கினேன். என் கவனம் எங்கும் திசை திரும்பாமல் இருக்க தீவிரமாய் இரவு பகல் பாராது உழைத்தேன். உழைத்துக் கொண்டேயிருக்கிறேன்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker