சமையல் குறிப்புகள்
கிராமத்து ஸ்டைல் கருவாட்டு பிரியாணி
தேவையான பொருட்கள் :
- பாசுமதி அரிசி – அரை கிலோ
- வஞ்சிரம் கருவாடு – அரை கிலோ
- வெங்காயம் – அரை கிலோ
- பழுத்த தக்காளி – அரை கிலோ
- பழுத்த சிவந்த பச்சை மிளகாய் – ஆறு
- காஷ்மீரி சில்லி – இரண்டு தேக்கரண்டி
- தயிர் – ஒரு கோப்பை
- கொத்துமல்லித்தழை – ஒரு கொத்து
- இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
- புதினா – ஒரு கொத்து
- பட்டை, ஏலம், கிராம்பு – தலா இரண்டு
- பிரியாணி இலை – இரண்டு
- உப்பு தூள் – தேவையான அளவு
- எண்ணெய் – 200 மில்லி
- நெய் – 50 மில்லி
- எலுமிச்சை – அரை பழம்
செய்முறை :
- அரிசியை லேசாக களைந்து ஊற வைக்கவும்.
- கருவாட்டை நன்றாக கழுவி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து வைத்து கொள்ளவும்.
- தக்காளி, வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
- வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஈரம் போக காய வைத்து கருவாடு பொரித்த எண்ணெய், நெய் ஊற்றி அதில் பட்டை, ஏலம், கிராம்பு, பிரியாணி இலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.
- வெங்காயம் வதக்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி மிளகாய் தூள், பழுத்த பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
- அடுத்து அதில் புதினா, கொத்தமல்லி, தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கிய பின் தயிர் சேர்க்கவும்.
- அடுத்து உப்பு, வறுத்த கருவாட்டை போட்டு வேக விடவும்.
- அடுத்து அதில் ஒரு டம்ளர் அரிசிக்கு ஒன்னேகால் வீதம் தண்ணீர் அளந்து ஊற்றவும்.
- தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் அரிசியை களைந்து போட்டு கொதிக்கவிட்டு கடைசியாக சிறிது நெய், கொத்தமல்லி, லெமன் பிழிந்து, பாதி அளவு வற்றும் போது அடுப்பின் மேல் தம் போடும் கருவியை வைத்து சாப்பாடு சட்டியின் மேல் கனமான பாத்திரத்தை வைத்து 20 நிமிடம் தம்மில் விடவும்.
- பிறகு லேசாக மேலிருந்து கீழாக சாதம் குழையாமல் கிளறி விடவும்.
- சுவையான கருவாட்டு பிரியாணி ரெடி.