ஆரோக்கியம்

வயிற்றுப்புண்ணை குணமாக்கும் கோவைக்காய்

கோவை இலைக்கும், கோவைக்காய்க்கும் மருத்துவ குணங்கள் அதிகம் உண்டு. இவை பல்வேறு நோய்களுக்கான சித்த மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன.

கோவை இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து, தேன் கலந்து ஒரு மண்டலம் உண்டு வந்தால் இழந்த தாதுவை மீண்டும் பெறலாம். கோவை இலை சாறுடன் வெண்ணெய் சேர்த்து பூசி வந்தால் சொறி, சிரங்கு, நாள்பட்ட புண் போன்றவை குணமாகும். கோவைக்காய் மலிவான விலையில் கிடைக்கும். கோவைக்காய் வாங்கி சமைத்து உண்டால் அனைத்து நோய்களையும் குணப்படுத்தி விடலாம்.

கோவை மூலிகையானது சிறுநீர், வியர்வை ஆகியவற்றை மிகுதிப்படுத்தும் குணமுடையது. வாந்தியை உண்டாக்கும் தன்மை உடையது. மேலும் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த வல்லது. கோவைக் கிழங்கு சாறு 10 மி.லி. அளவில் காலையில் மட்டும் குடித்து வந்தால் இரைப்பு இருமல், கபரோகம், மார்புச்சளி, மதுமேகம், கண்டமாலை, வீக்கம் ஆகியவை தீரும். கோவைக்காயை நறுக்கி, வெயிலில் நன்கு காயவைத்துப் பொடி செய்து ஒரு தேக்கரண்டி வீதம் மூன்று வேளை சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.



சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கோவைக்காய் பச்சடி செய்து, வாரம் இரண்டு நாள் பகல் உணவில் சேர்த்தால் வாய்ப்புண் குணமாகும். நிறையப் பேர் கோவைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளாமல் ஒதுங்கி விடுகிறார்கள். நாக்கு சுவையை மட்டுமே கருதாமல் உடல் நலத்தையும் கருத்தில் எடுத்துக் கொண்டால் எல்லா உணவுகளுமே விருப்பம் உடையதாகும். பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பிவிட்டாலே வாய்ப்புண் ஆறிடும்.

வயிற்றுப்புண் இருப்பவர்கள் வாரம் இரண்டு நாள் கோவைக்காயை சேர்த்துக் கொள்ளலாம். கோவைக்காயை பீன்ஸ் போல பொரியல் செய்து சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும். ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன் அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன பலன்களை பெறலாம். முக்கியமாக முற்றின கோவைக்காய் வாங்கக்கூடாது. பிஞ்சு காயாக பார்த்து வாங்க வேண்டும். பிஞ்சு காய் இளம்பச்சை நிறத்தில் இருக்கும்.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker