ஆரோக்கியம்மருத்துவம்

மழைக்கால நோய்களும், காக்கும் முறைகளும்

மழைக்காலம் வந்துவிட்டால் எல்லோருக்கும் மகிழ்ச்சிதான். குழந்தைகளுக்கு சொல்லவே வேண்டாம். மழையில் நனைந்தபடி விளையாட சென்று விடுவார்கள். பின் இருமல், சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவதிப்படுவார்கள். அவர்களை பெரியவர்கள் கண்காணிக்க வேண்டும். வயது முதிர்ந்தவர்கள் மழைக்காலத்தில் கவனமாக இருக்க வேண்டும். சட்டை அணியாமல் இருக்க கூடாது. வயதானவர்கள் குளிர்ந்த நீரில் குளித்து நிமோனியா, காய்ச்சல் போன்ற பல்வேறு இன்னலுக்கு ஆளாகிறார்கள். குளிரினால் ரத்தக்குழாய்கள் சுருங்கி மயக்கம், இதயமாரடைப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஆகவே மழைக்காலத்தில் வெது வெதுப்பான தண்ணீரில் குளிக்க வேண்டும். நூல் ஆடை அல்லது கம்பளி ஆடைகளை அணிய வேண்டும். குளிரில் செல்வதை தவிர்க்க வேண்டும்.



மழை வந்தால் கிருமிகளுக்கும் கொண்டாட்டம் தான். தேங்கிய மழைநீரில் கொசுக்கள் முட்டை இட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. மனிதனை கொசுகடிக்கும் போது டெங்கு வைரஸ் நம் உடலில் செல்கிறது. இதன் அறிகுறியாக காய்ச்சல், உடம்பு வலி, முட்டு வலி ஏற்படுகின்றன. ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் பின் விளைவுகளிலிருந்து பாதுகாக்கலாம். இல்லை என்றால், தட்டணுக்கள் குறைந்து, ரத்த கசிவு ஏற்பட்டு சிறுநீரகம், மூளை பாதிக்கப்படும். இன்று எல்லா அரசு மருத்துவமனைகளிலும் உயர்தர பரிசோதனைகளும், பிரத்தியேக வார்டுகளும் அமைத்து மிக சிறப்பான சிகிச்சைகள் கொடுக்கப்படுகின்றன.

காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அலட்சியமாக இல்லாமல், முறையாக பரிசோதனை செய்து உரிய சிகிச்சை செய்துக்கொள்ள வேண்டும். வீட்டின் அருகில் பழைய டயர், பாத்திரங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கொசு ஒழிப்பு மருந்துகளை தெளிக்க வேண்டும். சுகாதார பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும். மழைக்காலத்தில் கொசுவினால் வரக்கூடியது மலேரியா. கொசு கடிக்கும் போது மலேரியா கிருமிகள் ரத்தத்தில் கலந்து சிவப்பணுக்கள் மூலம் கல்லீரல், மண்ணீரலில் சென்று பெருகி குளிர்காய்ச்சல், உடல் வலியை கொடுக்கின்றன. சிலருக்கு தலைவலி, பசியின்மை, ரத்தமுறிவினால் மஞ்சள் காமாலை ஏற்படும். உரிய பரிசோதனை செய்து மலேரியாவை கண்டறிந்து சிகிச்சை பெறவேண்டும்.



மழைக்காலத்தில் வீட்டைச் சுற்றிலும், வீதிகளிலும் தண்ணீர் தேங்கி நிற்கும். சில இடங்களில் கழிவுநீரும், மழைநீரும் கலந்து ஓடும். தேங்கிய தண்ணீரில் நாம் நடந்து செல்கிறோம். மேலும் பூனை, நாய், எலியும் அதில் செல்கின்றன. இந்த தண்ணீரில் கலந்து இருக்கும் எலியின் சிறுநீர் மூலம் எலிக்காய்ச்சல் உண்டாகின்றன. காலில் உள்ள புண், பித்த வெடிப்பு, காயங்கள் வழியாக இக்கிருமிகள் நம் உடலில் சென்று ரத்தத்தில் கலந்து பெருகி லெப்டோபைரோசிஸ் என்ற நோய் வருகின்றன.

இதன் அறிகுறியாக குளிர் காய்ச்சல், உடம்பு வலி ஏற்படும். வலிக்காக காலை அழுத்தி விடும் போது வலி அதிகமாக இருக்கும். கண்களில் ரத்த கசிவு ஏற்பட்டு சிவந்து இருக்கும். ரத்த முறிவினால் மஞ்சள் காமாலை ஏற்படும். சிறுநீர் சிவப்பாக போகும். நோய் முற்றிய நிலையில் சிறுநீரகம் செயல் இழந்து விடும். மழைக்காலம் வந்துவிட்டால் எலியினால் வரும் லெப்டோபைரோசிஸ் நோயை மனதில் கொண்டு உரிய சிகிச்சை பெற வேண்டும். சிலர் மஞ்சள் காமாலை நோய் என்று கை வைத்தியம் செய்து முற்றிய நிலையில் மருத்துவமனைக்கு வருவதை காண்கிறோம். இந்நோய் பென்சிலின், டாக்சி, சிப்பரோ போன்ற மாத்திரைகளுக்கு கட்டுப்படும். இவை அரசு மருத்துவமனைகளில் இலவசமாக கிடைக் கின்றன. மழையில் நடக்கும் போது கணுக்கால் வரை மூடிய காலணிகளை பயன்படுத்த வேண்டும்.

மழைக்காலங்களில் சில இடங்களில் சுத்த தண்ணீரும், அசுத்த தண்ணீரும் கலந்து வரும். சுகாதாரமற்ற தண்ணீரையோ, உணவு பொருட்களையோ உபயோகிப்பதால் வயிற்றுப்போக்கு, டைபாயிடு காய்ச்சல் வருகின்றன. சாலமோனல்லா என்ற கிருமிகள் அசுத்த தண்ணீர், உணவு வகைகள் மூலமாக குடலுக்குள் சென்று அங்கு பெருகி நோயை உண்டு பண்ணுகின்றன.

இதன் அறிகுறியாக கடுமையான காய்ச்சல், உடம்பு வலி, உடல் சோர்வு ஏற்படுகின்றன. இந்நோயாளியை தனிமைப்படுத்தி கஞ்சி, பழரசம் போன்றவற்றை கொடுக்க வேண்டும். ஏனென்றால் இந்நோயாளியின் மலம், சிறுநீர் வழியாக நோய் பரவக்கூடும். இன்று சுத்திகரிக்கப்பட்ட பிளச்சிங் பவுடர் கலந்த தண்ணீரே வழங்கப்படுகிறது. இருந்தாலும், தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து, வடிக்கட்டி உபயோகபடுத்த வேண்டும், காய்கறிகளையும், பழங்களையும் நன்றாக கழுவியப் பின் உபயோகப்படுத்த வேண்டும்.



மஞ்சள் காமாலை, ஹெப்படைடிஸ் ஏ வைரஸ் அசுத்த தண்ணீரால் பரவக்கூடியது. இந்நோயின் அறிகுறியாக காய்ச்சல், குளிர்நடுக்கம், பசியின்மை, வாந்தி ஏற்படும். இந்நோய்க்கு, காரணமில்லாத எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். கஞ்சி, குளுக்கோஸ், பழரசம் சாப்பிடலாம். நன்றாக சூடுசெய்த தண்ணீரை பருகவேண்டும். மழைக்காலங்களில் உடுத்திக்கொள்ளும் துணிகள் நன்றாக காய்வதில்லை. ஈரத்துணியை உடுத்தும் போது தோல் நோய்கள் வரும். பொதுவாக, ஈர உள்ளாடையை அணியும் போது, தொடை, கை இடுக்குகளில் காளான்படை வரும். அரிப்பு, பின் சிவந்துபடை தோன்றும். ஆகவே நன்றாக உலர்ந்த துணிகளை உபயோகப்படுத்தவேண்டும்.

மழைக்காலங்களில் வெளியே வாழும் பாம்பு, பூரான், தேள், விஷ வண்டுகள் வீட்டிற்குள் தஞ்சம் அடைகின்றன. இதனால் பாம்பு கடுந்தேள், பூரான் கடிகளுக்கு ஆளாகும் நிலை ஏற்படுகின்றன. இவை கீற்றுகளிலும், பழைய பாத்திரங்களிலும் சுருண்டு இருக்கும். அவற்றை கையாளும் போது கவனமாக இருக்க வேண்டும். ஆடைகளையோ, காலணிகளையோ அணியும் முன் நன்றாக உதறிவிட்டு அணிய வேண்டும். மழைக்காலங்களில் பாம்புக்கடி, கதண்டுக்கடியினால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகம். கதண்டு என்ற விஷவண்டு பனை ஓலை மற்றும் தென்னை மரத்தில் கூடுகட்டியிருக்கும்.

இவை தேனி, குழவி வகையை சேர்ந்தவை. மழைக்காலத்தில் மட்டைகள் அசைவதால் இக்கூட்டில் அசைவு ஏற்பட்டு கதண்டுகள் வெளியேறி போவோர், வருவோரை கடிக்கும். முதலில் ஒரு வண்டு கடிக்கும், பின் வண்டுக்கூட்டமாக வந்து கடிக்கும். கடி பட்டவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும். இல்லையென்றால் இதயம், சிறுநீரகம் பாதிக்கப்பட்டு உயிர் இழக்க நேரிடும். மழைக்காலத்தில் கையில் டார்ச் லைட் மற்றும் உடல்முழுவதும் போர்த்தக்கூடிய போர்வையை எடுத்துசெல்லவேண்டும். நாம் வாழ்வதற்கு மழை அவசியம் தான். மழைக்காலத்தில் நம்மை எப்படி பாதுகாத்துக்கொள்வது என்பதை தெரிந்து வைத்திருக்கவேண்டும்.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker