தாய்மை-குழந்தை பராமரிப்பு

குழந்தைகளுடன் நேரம் செலவிட்டால் நல்லது

பள்ளிக்கூடத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் குழந்தைகள் படிக்கின்றனர். அவர்களின் குடும்ப சூழல், பொருளாதாரம், சமூக சூழல் உள்ளிட்ட அம்சங்கள் வேறுபட்டதாக இருக்கும். அது போல் குழந்தைகள் பழக்க, வழக்கங்களும் வேறுபட்டதாகவே இருக்கும். ஆனாலும் குழந்தைகள் பள்ளியில் ஒரு வகுப்பறையில் ஒன்று போல் அமர்ந்து படிக்கும் நிலை உள்ளது. அப்போது அவர்களிடம் வேறுபாடு ஏற்படக்கூடாது என்பதற்காக சீருடை வழங்கப்படுகிறது.



ஆனாலும் அவர்களின் செயல்பாடுகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டதாகவே இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் மாணவர்களை கையாளுவதில் ஆசிரியர்கள் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். என்றாலும் மாணவர்களின் சிந்தனை, புரிந்து கொள்ளும் திறன், பெற விரும்பும் பதில், கேட்கும் கேள்விகள் போன்றவை மிகவும் வித்தியாசமானதாகவே இருக்கிறது. எனவே வீட்டில் இருந்து பள்ளி செல்லும் குழந்தைகள் என்ன மாதிரியான அனுபவத்தை பெற்று வருகிறார்கள் என்பதை பெற்றோர் அறிந்து கொள்வது அவசியம்.



அதற்கு பெற்றோர் தங்களின் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட வேண்டும். பள்ளியில் நடந்த நிகழ்வுகள், நடத்தப்பட்ட பாடம், நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட உணர்வுகள், தேர்வு, பாடம் ஆகியவை தொடர்பாக பெற்றோர் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். அதையும் தாண்டி பள்ளியில் மாணவர்கள் இடையே நடைபெறும் பொதுவான நிகழ்வுகள், அதை குழந்தைகள் எதிர்கொண்ட விதம் குறித்தும் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

குழந்தைகள் ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டே இருக்கிறார்கள். சமூகம் குறித்து அவர்களின் பார்வையும் மாறிக்கொண்ட இருக்கிறது. அவர்களுக்கு பெற்றோர் கற்றுக்கொடுப்பது, அதை குழந்தைகள் புரிந்து கொண்டு செயல்படுவது போன்றவற்றில் வேறுபாடு இருக்கும். அதை புரிந்து கொண்டு சரி செய்ய வேண்டியது பெற்றோரின் பெரிய கடமையாக இருக்கிறது. குழந்தைகளுடன் தொடர்ந்து பேசும் போது தான் அவர்கள் எதை நோக்கி பயணிக்கிறார்கள்? எதை விரும்புகிறார்கள்?. எப்படிப்பட்ட சிந்தனை அவர்களிடம் மேலாங்கி வருகிறது என்பதையும் புரிந்து கொள்ள முடியும். அதில் உள்ள தவறுகளை திருத்தவும் வாய்ப்பு ஏற்படும்.



பணிச்சுமை, வேலை என்று ஏதாவது காரணங்களை கூறிக்கொண்டு பெற்றோர், குழந்தைகளிடம் இருந்து ஒதுக்கி விடக் கூடாது. குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதால் புதிய தொழில்நுட்பங்களை அறிந்து தங்களை மேம்படுத்திக் கொள்ள முடியும். ஒவ்வொரு காலகட்டத்திலும் மாற்றங் கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். அதை நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

மாற்றங்களை எதிர் கொண்டு, நல்லவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு புதிய சமூகசூழலின் நிகழும் மாற்றங்களை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். பாடப்புத்தகத் தை தாண்டி பள்ளியில் கிடைக்கும் பாடம் என்பது குழந்தைகளுக்கு எந்தநாளும் மறக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. குழந்தைகளின் வாழ்வை செம்மைப்படுத்துவதில் தொடக்க கல்வி முக்கிய இடம் பெறுகிறது. அந்த பருவத்தில் குழந்தைகளை நற்பண்புகள் மிகுந்தவர்களாக வளர்த்தெடுக்க வேண்டும். அது அவர்களின் எதிர்கால நல்வாழ்வுக்கு உறுதுணையாக இருக்கும்.

குழந்தைகள் எதையும் எளிதாக கற்றுக் கொள்பவர்கள் மட்டுமல்ல யாருக்கும் எதையும் எளிதாக கற்றுக்கொடுக்கும் திறன் பெற்றவர்கள் ஆவர். அவர்களின் அணுகுமுறை யாரையும் எளிதில் ஈர்த்து விடும். அதன் மூலம் அவர்கள் சொல்லாத விஷயங்களின் அர்த்தத்தையும் புரிந்து கொள்ள முடியும். எனவே குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது அவர்களுக்கு மட்டுமல்ல பெற்றோருக்கும் பயன் உள்ளதாக இருக்கும்.

குழந்தைகள் பெரும்பாலும் பெற்றோரிடம் இருந்து கற்றுக்கொள்கின்றன. எனவே அவர்களுக்கு முன்னுதாரணமாக பெற்றோர் நடந்து கொள்ள வேண்டும். நற்பண்புகளை வெளிப்படுத்த வேண்டும். நல்ல வார்த்தைகளை உபயோகிக்க வேண்டும். பரஸ்பரம் மரியாதை அளிக்க வேண்டும். இது போன்ற நிகழ்வுகள் குழந்தைகளிடம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். குழந்தைகள் நல்ல மனிதர்களாக மாற்ற அவர்களுடன் நேரம் செலவிடுவதே நல்ல அணுகுமுறை ஆகும்.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker