ஆரோக்கியம்மருத்துவம்

தாய்ப்பால் கொடுக்கும் போது மார்பு வலிப்பதற்கான காரணங்கள்

முதல் பிரசவத்தை சந்திக்கும் இளம்பெண்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது சிலருக்கு தாய்ப்பால் கட்டு உண்டாகி மார்பில் அதிக வலி உண்டாகும். தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தாய்ப்பால் கொடுக்கும் முறைகளை தெளிவாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். மருத்துவரிடமோ வீட்டில் இருக்கும் பெரியவர்களிடமோ கேட்டு அதன்படி செய்ய வேண்டும்.இல்லையெனில் தாய்ப்பால் கட்டு உண்டாகும். அப்படி தாய்ப்பால் கட்டிகொள்ளும் போது காய்ச்சல், மார்பில் வலி, மீண்டும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கமுடியாத அளவு வலி, குழந்தைக்கு தாய்ப்பால் வராமல் அடைத்துகொள்வது, மார்புபகுதி சிவந்தும் தடித்தும் இருப்பதும் கூட உண்டாகும். தாய்ப்பால் கட்டிலிருந்து குணமாக்க செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்துகொள்வோம்.



மார்பு வலி அல்லது வீக்கம் இருந்தால் சுடுநீர் ஒத்தடம் கொடுப்பதன் மூலம் வலியை குறைக்க முடியும். பொறுக்கும் சூட்டில் வெந்நீரை கொண்டு ஒத்தடம் செய்யலாம். அல்லது மெல்லிய காட்டன் துணியை வெந்நீரில் பிழிந்து மார்பு பகுதியில் ஒத்தடம் கொடுக்கலாம். வலி இருக்கும் பக்கம் மட்டும் இல்லாமல் இரண்டு பக்கமும் இந்த ஒத்தடம் கொடுக்கும் போது வலி வேகமாக குறையும். பால் கட்டு தளர்ந்து வெளியேறும். வெந்நீரை போன்று ஐஸ் கட்டிகள் கொண்டும் ஒத்தடம் கொடுக்கலாம். மார்பு பகுதி இறுக்கமாகும் போது பால் கட்டு தளர்ந்து விரைவாக வெளியேற உதவும்.

தாய்ப்பால் கட்டு இருக்கும் போது மார்பில் கை வைக்க முடியாத அளவுக்கு வலி இருக்கும். சிறு வலி இருக்கும் போதே மசாஜ் செய்ய தொடங்குங்கள். வலி அதிகமானால் மசாஜ் செய்வது அதிக சிரமத்தை உண்டாக்கும். உள்ளங்கைகளால் வட்ட வடிவில் மார்பின் மீது கைவைத்து மசாஜ் செய்யுங்கள். அழுத்தமாக இல்லாமல் மிதமாக 5 லிருந்து 10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்தாலே போதுமானது. இதனால் வலி குறைவதோடு பால் கட்டும் குறைய தொடங்கும்.



எப்போதும் படுக்கும் போது ஒருக்களித்து படுங்கள்.மல்லாந்து படுக்கும் போது தாய்ப்பால் கட்டு தளராது. மேலும் அதிகரித்து மார்பகங்களை மேலும் கனமாக மாற்றும். இதனால் மறுநாள் காலை எழும் போது மேலும் வலியும் அதிகரிக்கும். குழந்தையால் பாலும் குடிக்க முடியாது. அதனால் எப்போது படுத்தாலும் ஒருக்களித்து படுங்கள்.

தாய்ப்பால் கட்டு இல்லையென்றாலும் இதை பின்பற்றுங்கள். ஆனால் குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் போது ஒருக்களித்து படுத்தபடி கொடுக்க கூடாது. இதனால் பால் வேகமாக வருவதோடு குழந்தைக்கு மூச்சுத்திணறலும் உண்டாகும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
​பற்று போடலாம்.

தாய்ப்பால் கட்டுக்கு மல்லிப்பூவை அரைத்து பற்று போடுவார்கள் நம் முன்னோர்கள். ஆனால் இவை தாய்ப்பால் சுரப்பை கட்டுப்படுத்திவிடும் என்பதால் தாய்ப்பால் கட்டுக்கு பிறகு குழந்தைக்கு தாய்ப்பால் கிடைப்பதில் சிக்கல் உண்டாகும். மல்லிகைப்பூக்கு பதிலாக பச்சைபயறு அல்லது கடலை பருப்பு அரைத்து சுத்தமான தண்ணீரில் குழைத்து மார்பின் மீது பற்று போடுங்கள். நன்றாக உலர்ந்ததும் மார்பை மிதமான நீரில் கழுவினால் பால் எளிதாக வெளியேற்ற முடியும். மீண்டும் தாய்ப்பால் சுரப்பதிலும் பிரச்சனை இருக்காது.



தாய்ப்பால் கிடைக்க வேண்டும் என்பதற்காக மட்டும் அல்லாமல் குழந்தை பெற்ற உடல் பலம் பெறுவதற்கும் சத்துமிக்க உணவை எடுத்துகொள்வதுண்டு ஆனால் தாய்ப்பால் கட்டு இருக்கும் போது உணவையும் குறைத்து எடுக்கவேண்டும். இல்லையெனில் பால் சுரப்பு அதிகரித்து மார்பிலும் வலியை உண்டாக்கிவிடும்.

இவையெல்லாம் 15 வருடங்களுக்கு முன்புவரை இளம் தாய்மார்கள் அதிகம் சந்தித்திருக்கிறார்கள். தற்போது பெரும்பாலான பெண்கள் குழந்தைக்கு போதுமான அளவு தாய்ப்பால் சுரப்பதில்லை என்று தான் தெரிவிக்கிறார்கள். எனினும் குழந்தை பிறந்த முதல் மூன்று மாதங்களில் இந்த தாய்ப்பால் கட்டுக்கு உள்ளாவதுண்டு. ஆனால் தாய்ப்பால் கட்டு இருப்பதால் தான் மார்பில் வலி என்பதை உணராமல் தாய்ப்பால் கொடுப்பதால் தான் வலி என்று தவறாக புரிந்துகொள்பவர்களும் உண்டு. பிரசவத்துக்கு பிறகு தாய்ப்பால் கொடுக்கும் போதும்மருத்துவரின் ஆலோசனையை பெறுவதன் மூலம் தாய் சேய் இருவரது ஆரோக்கியமும் மேம்படும்.





Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker