ஆரோக்கியம்புதியவை

நுரையீரல், இதயத்திற்கு ஆரோக்கியம் தரும் சுக பூரக பிராணாயாமம்

நுரையீரல், இதயத்திற்கு ஆரோக்கியம் தரும் சுக பூரக பிராணாயாமம்

ஆஸ்துமா நோய்க்கு நாடி சோதனா, சுகபூரக, சவானா, கபாலபாதி, பஸ்த்ரிகா, விபாக, சதுர்முத்திரை மற்றும் தீர்க்க சுவாச முத்திரைக்கு பிராணாயாமம் பயனுள்ளவையாகும். சுகபூரக பிராணாயாமம் மற்றும் விபாக பிராணாயாமம் பற்றிய விளக்கம் அளிக்கப்பட உள்ளது.






பெயர் விளக்கம்: ‘சுக’ என்றால் சந்தோஷமான என்றும், பூரக என்றால் நிறைவு என்றும் பொருள். எளிய முறையில் சிரமமில்லாமல் நுரையீரலில் காற்றை நிரப்பி வெளிவிடுவதால் இந்த பயிற்சி சுக பூரக பிராணாயாமம் என்று அழைக்கப்படுகிறது.

செய்முறை: அனுகூலமான தியான ஆசனத்தில் அமரவும். இரு கைகளையும் நீட்டி மணிக்கட்டுகளின் ஓரப்பகுதியை அந்தந்த முழங்கால் முட்டிகளின் மேல் வைக்கவும். இரு கை விரல்களாலும் சின் முத்திரையை செய்யவும். கண்களை மூடவும். உடல் முழுவதையும் தளர்வாக வைத்துக் கொள்ளவும். இரு நாசிகளின் வழியாக மூச்சை வெளியே விடவும். நுரையீரலில் இருக்கும் காற்று முழுவதையும் வெளியேற்றவும்.

இரு நாசிகளின் வழியாக ஒரே சீராக மூச்சுக்காற்றை ஆழமாகவும், நிதானமாகவும் உள்ளே இழுக்கவும். ஓரிரு வினாடிகள் மூச்சை அடக்கவும்.
பிறகு அதே போல் இரு நாசிகளின் வழியாக மூச்சுக் காற்றை ஒரே சீராக நிதானமாகவும், ஆழமாகவும் வெளியே விடவும். இப்படி செய்தால் அது சுக பூரக பிராணாயாமத்தின் ஒரு சுற்று பயிற்சியாகிறது. மூச்சை உள்ளே இழுக்கும் போது மார்பையும், வயிற்றையும் நன்கு விரிக்கவும்.






மூச்சை வெளியே விடும்போது மார்பை சம நிலைக்கும் அடி வயிற்றை ஓரளவு உள்ளுக்குள் சுருக்கவும். ஆரம்பப் பயிற்சியில் சில வாரங்கள் 10 முதல் 15 சுற்று பயிற்சி என செய்து வந்து தொடர்ந்து பயிற்சியினால் சுற்றுகளை அதிகப்படுத்திக் கொண்டு போய் 30 சுற்றுகள் வரை காலை, மாலை பயிற்சி செய்யலாம்.

ஆரம்பத்தில் ஒரு முறை மூச்சுக்காற்றை உள்ளே இழுக்க 5 வினாடியும், வெளியேவிட 5 வினாடியும் என ஒரு சுற்றுக்கு 10 வினாடி காலம் எடுத்துக் கொள்ளலாம். தொடர்ந்து பயிற்சியில் நேரத்தை அதிகப்படுத்தி ஒரு சுற்றுக்கு 20 வினாடி கால அளவும், நன்கு பழகிய பிறகு 30 வினாடி காலமும் எடுத்துக் கொள்ளலாம்.

கவனம் செலுத்த வேண்டிய இடம்: சுவாச இயக்கத்தின் மீதும், மணிபூர சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

பயிற்சிக்குறிப்பு: மூச்சை உள்ளுக்குள் இழுக்கும் போதும் வெளியே விடும்போதும் மூச்சுக்காற்றில் சப்தம் வராதபடி செய்யவும்.






பயன்கள்: நுரையீரல், இருதயம், வயிறு சுத்தமாக்கப்பட்டு அவ்வுறுப்புகள் நல்ல ஆரோக்கியத்தை அடையும். ரத்தத்தில் உள்ள கழிவுகள் அகற்றப்பட்டு ரத்தம் தூய்மையாகும். மூச்சின் வேகமும், இருதயத்தின் வேகமும் குறைந்து சமநிலைக்கு வரும். நுரையீரல் இருதயம் சீராக இயங்கும். நுரையீரல், சுவாசக்குழாய் மற்றும் இருதயம் சம்பந்தமான நோய்களுக்கு இந்தப் பயிற்சி மிகவும் நன்மை அளிக்கிறது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker