ஆரோக்கியம்மருத்துவம்

அதிர்வு அலை சிகிச்சை

நமது உடலில் உள்ள எலும்பு மூட்டுகளின் இயக்கங்களை சீராக வைப்பதற்கும், உடல் பாகங்களில் ஏற்படும் வலிகளை வேகமாகப் போக்குவதற்கும் அதிர்வு அலை சிகிச்சை என்ற ஒரு புதிய சிகிச்சை பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிர்வு அலை சிகிச்சையை ஆங்கிலத்தில் ‘‌ஷாக்வே தெரபி’ என்று சொல்கிறோம்.



1950-ம் ஆண்டில் அதிர்வு அலைகளால் செராமிக் தகடுகள் உடைந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பிறகு 1968-ல் ஜெர்மனியில் அதிர்வு அலைகளுக்கும், நமது உடலில் உள்ள தசைகளுக்கும் இடையே உண்டான மாற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 1985-ல் தான் முதன்முதலாக பித்தப்பையில் இருந்த கல், அதிர்வலை சிகிச்சை மூலம் உடைத்து எடுக்கப்பட்டது. 1988-ல் இணையாத எலும்புகளுக்கு இந்த சிகிச்சை பயன்படுத்தப்பட்டது. 1992-ல் பிறவியிலேயே ஏற்படும் எலும்பு வளைவு நோய்க்கு இந்த சிகிச்சை முறை பயன்படுத்தப்பட்டது.

ஒலி அல்லது சத்தத்தில் உண்டாகும் அதிர்வு அலைகளைக் கொண்டு இந்த சிகிச்சை கொடுக்கப்படுகிறது. அதிகமான சக்தியை உடைய இந்த அதிர்வு அலைகள் வலி உள்ள தசைகளுக்கும், தசைநாண்களுக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது. அதிர்வு அலைகள் தசைகளிலும், தசை நாண்களிலும், எலும்புகளிலும் உள்ள தேய்வுகளை சீரமைப்பது மற்றும் மீளுறுவாக்கம் செய்கிற பணியை மேற்கொள்கிறது. இந்த அதிர்வலைகள் அழுத்தத்தால் அவ்வப்போது மாறுபடுகிறது.

காற்றில் அழுத்தம் உண்டாக்கப்பட்டு அது கடத்தல்மானி மூலமாக கடத்தப்பட்டு தசைகளுக்கு செலுத்தப்படுகிறது. இதன் மூலம் புதிதாக ரத்த நாளங்கள் உற்பத்தியாகிறது. நீண்ட நாள் அழற்சி நோய் சரியாக்கப்படுகிறது. தசைநார்கள் உற்பத்தி அதிகமாகிறது. வலியை உண்டுபண்ணக்கூடிய பொருள் அவ்விடத்திலிருந்து அகற்றப்படுகிறது. வலியை தூண்டக்கூடிய பகுதியை கட்டுப்படுத்துகிறது. சுண்ணாம்பு படிமத்தைக் குறைக்கிறது. இந்த சிகிச்சையில் அதிசக்தி வாய்ந்த ஒலி அலைகள் தசைகளுடன் வேலை செய்து அவைகளை சரிபடுத்தவும், செல் வளர்ச்சிக்காகவும், வலியை போக்கவும், மூட்டுகளின் அசைவுகளை சரியாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது.



தோள்பட்டை மூட்டுவலி மற்றும் துள்ளிக் குதிப்பதால் ஏற்படும் குதிகால் மூட்டுவலிக்கு இந்த சிகிச்சை கொடுக்கப்படுகிறது. முழங்கை முட்டினை சுற்றி உண்டாகும் வலிக்கு இந்த சிகிச்சை கொடுக்கப்படுகிறது. குறிப்பாக டென்னிஸ், மட்டைப்பந்து, இறகுப்பந்து விளையாடுபவர்கள், மெக்கானிக்குகள், வீட்டு வேலை அதிகம் செய்யும் பெண்கள் ஆகியோருக்கு முழங்கையில் உண்டாகும் வலியை இதற்கு உதாரணமாக சொல்லலாம். குதிகாலுக்கு ரத்த ஓட்டம் குறைவதாலும், குதிகால் எலும்பில் சிறிய முள்போன்று எலும்பு துறுத்திக் கொண்டிருப்பதாலும் உண்டாகிற குதிகால் வலிக்கும் இந்த சிகிச்சை கொடுக்கப்படுகிறது.

தசை நாண்களில் ஏற்படும் தளர்வு மற்றும் அழற்சியினால் உண்டாகும் வலி, தசை நாண்கள் எலும்புடன் சேரும் இடத்தில் ஏற்படும் வலி, தசை நாண்கள் எலும்பை இயக்க அதை இழுப்பதால் சுண்ணாம்புச் சத்து அதில் படிந்து உண்டாகும் வலிகளுக்கும் இந்த சிகிச்சை கொடுக்கப்படுகிறது. விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் கால்வலி மற்றும் உடலிலுள்ள அனைத்து வகை மூட்டுகளிலும் ஏற்படக்கூடிய வலிகளுக்கும் இந்த சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது. பித்தப்பை கற்கள் மற்றும் சிறுநீரகத்தில் உள்ள கற்களையும் அகற்ற உதவுகிறது. சேராத எலும்பு முறிவை சேர்த்து வைப்பதற்கு இந்த சிகிச்சை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நரம்புத் தளர்ச்சிக்கு இந்த சிகிச்சை உபயோகப்படுத்தப்படுகிறது.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker