புதியவைமருத்துவம்

அடிக்கடி விக்கலை வருவது நோயின் அறிகுறியா?

சிலருக்கு அடிக்கடி விக்கல் வந்து கொண்டே இருக்கும். அப்படி அடிக்கடி விக்கல் ஏற்பட்டாலோ, 2 நாட்களுக்கு மேல் விக்கல் நீடித்தாலோ மருத்துவரை ஆலோசிப்பது நல்லது. ஏனெனில் அது நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

அடிக்கடி விக்கலை வருவது நோயின் அறிகுறியா?

விக்கல்
சாதாரணமாக நாம் சுவாசிக்கும்போது காற்றை உள் இழுக்கிறோம். அப்போது மார்பு தசைகள் விரிகின்றன. மார்புக்கும் வயிற்றுக்கும் இடையில் நுரையீரலை ஒட்டியுள்ள உதரவிதானமும் அப்போது விரிகிறது. உடனே, தொண்டையில் உள்ள குரல்நாண்கள் திறக்கின்றன. அப்போது நுரையீரலுக்குள் காற்றின் அழுத்தம் குறைகிறது. அதேநேரம் நுரையீரலுக்குள் காற்று செல்ல அதிக இடம் கிடைக்கிறது. இதனால் நாம் சுவாசிக்கும் காற்று, திறந்த குரல்நாண்கள் வழியாக தங்கு தடையின்றி நுரையீரல்களுக்குள் நுழைந்துவிடுகிறது. இதுதான் இயல்பாக நிகழும் சுவாச நிகழ்வு.

சில நேரங்களில், மார்பு பகுதியில் உள்ள நரம்புகள் உதரவிதானத்தை எரிச்சல்படுத்தினால், அது மூளை கட்டுப்பாட்டை மீறி, தன்னிச்சையாக திடீர் திடீரென்று சுருங்க ஆரம்பித்துவிடும். அப்போது குரல்நாண்கள் சரியாக திறப்பதில்லை. அந்த மாதிரி நேரங்களில் நாம் சுவாசிக்கும் காற்று குரல்நாண்களின் குறுகிய இடைவெளி வழியாகத்தான் நுரையீரல்களுக்குள் சென்று திரும்ப வேண்டும். அப்போது அந்த காற்று, புல்லாங்குழலில் காற்று தடைபடும்போது இசையொலி உண்டாவதை போல, தொண்டையில் ஒரு விநோத ஒலியை எழுப்புகிறது. இதுதான் விக்கல்.

வேக வேகமாக உணவை சாப்பிடுவது, மிகச்சூடாக சாப்பிடுவது, தேவையான அளவுக்கு தண்ணீர் அருந்தாதது போன்றவை விக்கலுக்கு முக்கிய காரணங்கள். வலி நிவாரணி மாத்திரைகள், சில குறிப்பிட்ட வகை மாத்திரைகளை சாப்பிட்டாலும் விக்கல் வரும். இரண்டு நாட்களுக்கு மேல் விக்கல் தொடர்ந்தால், அது நோய்க்கான அறிகுறி ஆகும். உதாரணத்துக்கு, இரைப்பையில் அல்சர் இருக்கும்போது, சிறுநீரகம் பழுதாகி ரத்தத்தில் யூரியா அளவு அதிகரிக்கும்போது விக்கல் வரும். உதரவிதானத்தில் நோய்த்தொற்று, கல்லீரல் கோளாறு, நுரையீரல் நோய்த்தொற்று, குடல் அடைப்பு, மூளைக் காய்ச்சல், கணைய அழற்சி, பெரினிக் நரம்புவாதம் போன்றவற்றாலும் விக்கல் வரும்.

மூச்சை நன்றாக உள்ளிழுத்து அடக்கிக்கொள்ளுங்கள். 20 எண்ணும் வரை மூச்சை வெளியில்விட வேண்டாம். பிறகுதான் மூச்சை வெளியில்விட வேண்டும். இப்படி 5 முறை செய்தால் விக்கல் நின்றுவிடும். வேகமாக ஒரு சொம்பு குளிர்ந்த தண்ணீர் குடித்தால், விக்கல் நின்றுவிடும். ஒரு தேக்கரண்டி சர்க்கரையை நாக்கில் வைத்து அதை தானாக கரையவிட்டால், விக்கல் நிற்கும். ஏதேனும் ஒரு வகையில் தும்மலை உண்டாக்கினால், விக்கல் நிற்கும்.

அடுத்த வழி இது. ஒரு காகிதப்பைக்குள் மூச்சை விடுங்கள். பிறகு அந்த காற்றையே மீண்டும் சுவாசியுங்கள். இவ்வாறு சற்று நேரம் செய்தால், ரத்தத்தில் கார்பன் டை ஆக்சைடு அதிகரித்து, விக்கல் நின்றுவிடும். அடிக்கடி விக்கல் ஏற்பட்டாலோ, 2 நாட்களுக்கு மேல் விக்கல் நீடித்தாலோ மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker