ஆரோக்கியம்

வாய் நாற்றத்தை போக்குவது எப்படி?

தற்போது பயன்பாட்டில் உள்ள மேற்கத்திய உணவு முறைகளாலும் அவசரகதி வாழ்க்கை முறையாலும் ‘வாய் நாற்றம்’ என்பது பலரையும் வாட்டும் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. பல், ஈறுகளில் ஏற்படும் கோளாறுகளே வாய் நாற்றத்துக்கு முதன்மை காரணங்கள். மூக்கு, தொண்டை, மூச்சுக்குழல், நுரையீரல், உணவுக்குழல், இரைப்பை, கல்லீரல், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளில் உண்டாகும் நோய்கள் அடுத்த காரணங்கள்.

சரியாக பல் துலக்காமல் இருப்பது, உணவு சாப்பிட்டதும் ஒழுங்காக வாய் கொப்பளிக்காமல் இருப்பது போன்றவை வாய் நாற்றத்தை ஏற்படுத்துகின்றன. உணவைச் சாப்பிட்டதும் வாயை நன்றாக சுத்தம் செய்ய தவறினால், உணவுத் துகள்கள் பல் இடுக்குகளில் மாட்டிக்கொள்ளும். அப்போது, வாயில் இயற்கையாகவே வசித்துக்கொண்டிருக்கிற லட்சக்கணக்கான பாக்டீரியாக்கள், இந்த உணவுப் பொருட்களுடன் வினை புரியும்.



இதனால், உணவு துகள்கள் அழுகும். அப்போது ஒரு விதமான வேதிப்பொருள் உருவாகும். இது கெட்ட வாயுவை வெளியேற்றும். இதுதான் வாய் நாற்றத்துக்கு அடிப்படைக் காரணம். பற்களில் கறை படிவது, பல் ஈறுகளில் வீக்கம், அழற்சி, புண் அல்லது ரத்த ஒழுக்கு உண்டாவது, சொத்தை பல்லில் சீழ் பிடிப்பது, அடிபட்ட பற்கள் ரத்த ஓட்டம் இழப்பது, வாய் உலர்வது, நாக்கில் வெள்ளை படிவது ஆகியவை வாய் நாற்றத்தை வரவேற்கும் காரணிகள். வாய்ப்புண், வாய் புற்றுநோய், ‘சிபிலிஸ்‘ எனும் பால்வினை நோய், வின்சென்ட் நோய், எய்ட்ஸ் போன்றவையும் வாய் நாற்றத்துக்கு அழைப்பிதழ் அனுப்பும்.



மேலும், மூக்கில் சதை வளர்வது, சைனஸ் அழற்சி, தொண்டை புண், தொண்டை சதைகளில் சீழ், நுரையீரல்களில் சீழ், நுரையீரல் காசநோய், நுரையீரல் புற்றுநோய் போன்றவற்றாலும் வாய் நாற்றம் ஏற்படலாம். இவை தவிர, உணவுக் குழாய் அழற்சி, இரைப்பை புண், இரைப்பை புற்றுநோய், உணவு அஜீரணம், கல்லீரல் செயலிழப்பு, சிறுநீரக கோளாறுகள் ஆகிய நோய்களின் போதும் வாய் நாற்றம் உண்டாவது உண்டு. வாய் நாற்றம் உள்ளவர்கள் முதலில் பல் மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.

பெரும்பாலும் ‘ஸ்கேலிங்’ முறையில் பற்களை சுத்தம் செய்து கொண்டாலே வாய் நாற்றம் சரியாகிவிடும். இது தவிர, பற்களில் வேறு ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், அவற்றுக்குரிய சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். அடுத்து, பொது மருத்துவர் மற்றும் காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவர் உதவியுடன் சைனஸ் எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன், மார்பு எக்ஸ்ரே, எண்டாஸ்கோபி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.



இவற்றால் மற்ற காரணங்களைக் கண்டறிந்து, அவற்றையும் களைந்துவிட்டால் வாய் நாற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். வாய் நாற்றத்தை தடுக்க விரும்புவோர், வாயை சுத்தமாக வைத்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தினமும் காலை எழுந்ததும் ஒருமுறை, இரவு படுக்கப் போகும் முன்பு ஒருமுறை பற்களை துலக்க வேண்டும். கடினமான பல்துலக்கிகளை (பிர‌‌ஷ்) பயன்படுத்தினால் பல் ஈறுகளுக்குக் கெடுதல் உண்டாகிவிடும். மிருதுவான பல்துலக்கிகளை பயன்படுத்துவது நல்லது.

சாப்பிடும் முன்பும் சாப்பிட்ட பின்பும் வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும். வாயைச் சுத்தப்படுத்தும் ஒவ்வொரு முறையும் நாக்கையும் சுத்தப்படுத்த வேண்டியது அவசியம். முக்கியமாக, நாக்கின் பின்புறத்தை நன்றாகச் சுத்தப்படுத்த வேண்டும். அங்குதான் 80 சதவீதம் பாக்டீரியாக்கள் காணப்படுகின்றன. பெரும்பாலோருக்கு வாய் நாற்றம் அங்குதான் ஆரம்பிக்கும்.

 






Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker